கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டிய இராஜேந்திர சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பூலோக நாதர் கோவில் உள்ளது. இதன் அருகே சிவலோகம் மற்றும் கைலாயம் என முக்கோண வடிவில் பிறந்து, வாழ்ந்து முக்தியைத் தரக்கூடிய மூன்று நிலைகளை குறிக்கக்கூடிய ஆலயங்கள் உலகில் வேறெங்கும் காணா அற்புதத் தலமாக விளங்குகிறது. இக்கோவில் வையாபுரி பரதேசியால் 170 ஆண்டுகள் பராமரிக்கப்பட்டது.
விண்ணுக்கொரு மருந்தாய், வேதவிருப்பொருளாய் கண்ணுக்கினியனாய் விளங்கிடும் எல்லாம்வல்ல சிவபெருமான் உலகின் உயிர்கள் அனைத்தையும் பாதுகாக்க திருவுள்ளம் கொண்டு இம்மண்ணுலகில் எழுந்தருளியுள்ளார். ஆதியும், அந்தமுமில்லா அந்த அருட்பெரும் ஜோதியை கசிந்துருகிப் பாடிய சிவ நெறியாளர்களை ஆட்கொண்ட அருட்காட்சியை இம்மண்ணுலகம் கண்டுள்ளது. நமசிவாய என்றும் ஒலி முழங்கும் சிவத்தலங்கள் பல இப்பூபாகம் எங்கும் எழுந்து நிற்கின்றன. அவற்றுள் இப்புண்ணிய பூமியாகிய பரதக் கண்டத்தில் தெய்வமணம் கமழும் தமிழகத்தில் சிவபெருமான் தனது பரிவாரங்களோடு எழுந்தருளியுள்ள நடுநாட்டின்கண் மூர்த்தி, தலம்,தீர்த்தம் இம் மூன்று நிலைகளாலும் சிறப்புற்றதும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதும் பின் 170 ஆண்டுகளுக்குமுன் வையாபுரி பரதேசியரால் புணரமைக்கப்பட்டதும், எந்நாட்டவருக்கும் உரியவரான சிவபெருமான் பூலோகத்தில் குடிகொண்ட இறைவன் என்பதை உணர்த்தும் பொருட்டு நிலவுலகின் தலைவனாய் அருள்தரும் புவானாம்பிகையுடனமர்ந்து ஆருள்மிகு. பூலோகநாதர் திருக்கோயிலில் அருள் பாலிக்கின்றார். பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்தோனாய் விளங்கும் சிவபெருமான் எழுந்தருளியுள்ள மூவுலகங்கள், பூலோகம், சிவலோகம், கைலாயம் என்பன. அம்மூவுலகநாதனை இம்மண்ணுலகில் வாழும் அனைத்துயிர்களும் வேண்டி அருள்பெற்றுய்யும் வண்ணம் நெல்லிக்குப்பம் நகரைச்சுற்றியுள்ள திருத்தலங்களான அருள்மிகு. கைலாசநாதர் திருக்கோயிலும் அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயிலும் அருள்மிகு பூலோகநாதர் திருக்கோயிலும் முக்கோண வடிவில் அமைய பெற்றிருப்பது தனிச்சிறப்பானதாகும். இப்பூலோகத்தில் வேறெந்த பகுதியிலும் இது போன்ற காட்சி காண்பதரிது.
மண்ணுக்கு அதிபதி பூலோகநாதர். மண் சம்பந்தமான பிரச்சினைகள் எதுவானாலும் எளிதில் தீர்க்கவல்லவர் பூலோகநாதர். ஈஸ்வரனையும் பெருமாளையும் நின்ற இடத்தில் அடிபெயராமல் ஓரே நேரத்தில் தரிசிக்க கூடிய உன்னத திருத்தலம் இது. அன்னை புவானம்பிகை கேட்டவரத்தை நல்க கூடியவள். இத்தலத்து பெருமாள் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி தோன்றியவர், காட்சித்தந்தவர் என்ற பொருள்படும்படி அமைந்து அருள்பாலிக்கிறார். தாயார் அலமேலு மங்கைதாயார் கிழக்கு நோக்கி யோக நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் வருகின்ற பக்தர்களுக்கு எந்நாளும் செல்வவளத்தை அள்ளித்தரும் நிலையில் உள்ளார். கருடாழ்வார் (பெரிய திருவடி) முன்னழகு பின்னழகுடன் அற்புத காட்சி தந்து கொண்டிருக்கின்றார். கன்னிமூலையில் விநாயக பெருமான் சுவர்ணவிநாயகராக வருகின்ற பக்தர்களுக்கு காசு, பணத்தை மன சந்தோஷத்தை நல்க கூடியவராக உள்ளார். முருகபெருமான் முத்துக்குமார சுவாமியாகவும் ஐகாந்த மூர்த்தியாகவும் உற்சவ மூர்த்தியில் வள்ளி தேவசேனா சதேராகவும் காட்சியளிக்கின்றார். விஷ்ணுதுர்கை அஷ்டபுஜ துர்கையாக தாமரை மலரில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களின் குறை தீர்ப்பவளாக அருள்பாலிக்கின்றார். தென்திசை நோக்கி தஷ்ணமூர்த்தி அனைவருக்கும் கல்வி, ஞானம், அளித்துக் கொண்டுள்ளார். இத்தலத்தில் நவகிரகங்கள் பிரத்யேக யந்திர பீடம் கொண்டவை. இங்கு மந்திரம் ஸ்பலிதமாகும் அதனினும் யந்திரம் ஸ்பலிதமாகும் என ஆன்றோர்கள் உரைத்து சென்றுள்ளார்கள். இத்தலத்திற்கு வந்தாலே குறைகள் தீரும். கோவிலுக்கு போனால் குறைதீரும். கோவிலுக்கு போனால் என்பார்களே அது இத்தலத்திற்கு மிக பொறுத்தமானதாகும். 170 ஆண்டுகளுக்கு பிறகு இறைவன் நற்பணி மன்றம் மற்றும் உழவாரப் பணிக்குழு அவர்களின் முயற்சியினால் நூதன இராஜகோபுரம் நூதன கொடிமரம், நூதன நந்தியம்பெருமான் இவற்றுடன் கூடிய மகாகும்பாபிஷேகம் (26.08.2009) இந்து அறநிலையத்துறையினரின் முழு ஒத்துழைப்புடன் நடைபெற்றது.
அமைவிடம் : கடலூரிலிருந்து 10 வது கி.மீட்டரில் நெல்லிக்குப்பம் உள்ளது.
3 ஆலயங்களுக்கு தொடர்புக்கு : பூலோகநாதர் – சந்திரசேகர் – 9842639045
சிவலோகநாதர் – ஆனந்தராமன்- 9443415649
கைலாசநாதர் – கண்ணன் – 9367646591
படமும் செய்தியும்:ப.பரசுராமன்.
The post முக்கோண வடிவ சிவாலயத்தில் மூன்று லோக தரிசனம்! appeared first on Swasthiktv.