உயர்ந்த ஞானம், தர்மம், அர்த்தம், மோட்சம் பெற்றிட
“தசமஹா வித்யா தேவியர் வழிபாடு!”
“காளீ தாரா வித்யா ஷாடசீ புவனேச்வரீ
பைரவீச் சின்னமஸ்தா ச வித்யா தூமாவதீ ததா
மாதங்கீ ஸித்தவித்யா ச கவிதா பகளாமுகி
ஏதா தச மஹாவித்யா ஸர்வ தந்த்ரேஷு கோபிதா”
(ச்யாமா ரகஸ்யம்)
“தச மஹா வித்யா தேவியர்”
படைக்கும் கடவுளான பிரம்மாவின் 10 புத்திரர்களுள் ஒருவன் தட்சன். அவன் ப்ரஜாபதி ஆவான். தட்சனின் மகள் சதி தேவி (தாட்சாயணி). அவளது கணவன் சிவன். தட்சன் மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்து, விண்ணுலகிலுள்ள தேவர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் படி அழைப்பு விடுத்தான். 27 நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்ட, தனது 27 புதல்வியரையும், அவர்களது கணவன் சந்திரனுக்கும் அழைப்பு விடுத்தான்.
சதி தேவியையும், மருமகன் சிவனையும் அழைக்கவில்லை. தந்தையால் அழைக்கப்படாவிட்டாலும், தந்தை நடத்தப் போகவிருக்கும் மிகப்பெரிய யாகத்தைக் காண வேண்டும் என்ற ஆவலிலும், சகோதரிகளைக் காண விரும்பியும், முக்கியமாகத் தனது கணவருக்குச் சேர வேண்டிய அவிர்பாகத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், தேவர்கள் தங்களது மனைவியருடன் அலங்கரிக்கப்பட்ட வானவூர்தியில், பறந்து செல்வதையும் கண்டு பரவசமடைந்து, கணவன் சிவனிடம் அனுமதி கேட்டு நின்றாள்.
அழையாத விருந்தாளியாகச் சென்று தனது அன்பு மனைவி, அவமானப்படக்கூடாது என்று எண்ணியதால் சிவன் அனுமதி அளிக்கவில்லை. ஒரு சாதாரண கணவனைப் போல் ஆணாதிக்கத்துடன் அனுமதி தர மறுத்த சிவனின் மீதும், ப்ரஜாபதியாக மட்டும் நடந்து கொண்டு, தந்தை என்ற முறையில் அழைப்பு விடுக்காத தட்சன் மீதும் மிகுந்த கோபம் கொண்டு சதி தேவி, தனது சக்தியைக் (ஆதிக்கத்தையும், கோபத்தையும்) காட்ட விரும்பினாள்.
கண்ணுக்குத் தீட்டும் மை போன்றும், இருட்டினைப் போன்றும் கரிய நிறமுடைய காளியாகத் தோற்றமெடுத்து பயங்கரமான பற்களைக் காட்டி, இடிமுழக்கம் போல் பயங்கரமான சப்தத்துடன் சிரிக்கவும் ஆரம்பித்தாள். தனது மூன்று கண்களையும் ஒருமுறை திறந்து பார்த்த சிவன் பயத்தில் உறைந்தார்.
இரத்தம் சொட்டும் தொங்கிய நாக்கினையும், நிலைகுத்தி நிற்கும் முடியினையும், நான்கு கைகளையும், கோபமான கண்களையும், வியர்வையில் நனைந்த உடம்பினையும் கொண்ட அம்பிகையைக் கண்டு மிகவும் பயந்தார். மண்டை ஓடுகளைக் கழுத்தில் மாலையாகக் கொண்டு, தலையில் பிரகாசமான கிரீடத்தையும், 10 கோடி சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய பிறைநிலாவை நெற்றியில் சூடியிருந்ததையும் கண்டு இங்குமங்கும் ஓடினார். தேவியோ இடி போல் தொடர்ந்து பயங்கரமாக ஆர்ப்பரித்து சிரிக்கவே, சிவன் எல்லாத் திசைகளிலும் ஓடினார். திரும்பிய 10 திசைகளிலும், தேவியின் 10 விதமான மாறுபட்ட பயங்கரமான தோற்றத்தைக் கண்டார். இந்தப் பத்து தேவியர் தோற்றமே தச மஹா வித்யா தேவியர் தோற்றமாகும்.
சிவனுக்கு நேர் எதிரில் தேவி எடுத்த முதல் தோற்றமே காளி ஆகும். சிவனுக்கு நேர் எதிரில் காளியும், அவருக்கு மேல் தாராவும், வலது பக்கம் ஒல்லியான, சின்னமஸ்தாவும், இடது பக்கம் புவனேஸ்வரியும், பின்பக்கம் எதிரிகளை அழிப்பதில் வல்லவளான பலளாமுகியும், கீழே பைரவியும், தென்கிழக்கே விதவையும், முதியவளுமான தோற்றத்தில் தூமாவதியும், தென்மேற்கே அழகிய திரிபுரசுந்தரியும், வடமேற்கில் மாதங்கியும், வடகிழக்கில் என்றும் பதினாறான ÷ஷாடசீயும் தோற்றம் கொண்டு நின்றனர்.
இந்த 10 தேவியரும் தந்த்ரா சாஸ்த்திரத்தில் வழிபாட்டிற்குரிய உபாஸனா மூர்த்தங்களாவர். தேவியின் 90 கோடி தோற்றங்களில் தச மஹா வித்யா தேவியர் தோற்றமே முதன்மையானதும், புகழ் பெற்றதுமாகும். தேவியின் இந்தப் பயங்கரமான தோற்றங்களைக் கண்ட சிவன் வேறு வழியின்றி, மனைவியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக, யாகத்தில் கலந்து கொள்ள அனுமதி அளித்தார்.
தட்சன் யாகசாலையில் கூடியிருந்த அனைவரின் முன் சிவனின் மஹிமையை அறியாமல், அவரது புறத்தோற்றத்தை இழிவாகக் கூறி அவமதித்தான். கணவனின் மனப்பூர்வமான சம்மதமின்றி வந்ததோடு, தேவலோகமே கூடியிருந்த யாக சாலையில் தன்னால் தனது கணவனுக்கு ஏற்பட்ட அவமானத்தினால் சதி மிகவும் வருந்தினாள். தட்சனால் தான் பெற்ற இந்த உடம்பை அழிக்க எண்ணி தனது யோகசக்தியினால் அக்னியை எழுப்பி, அதில் புகுந்து தனது உயிரை மாய்த்தாள்.
நந்தி தேவனால் இதைக் கேள்வியுற்ற சிவன் தனது நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரனைத் தோற்றுவித்து தட்சன் யாகத்தை அழிக்கச் செய்தார். அவரும் யாகசாலை வந்து, நெருப்பில் தன்னை மாய்த்துக் கொண்ட தனது அன்பு மனைவியின் உடலைப் பிரிய மனமில்லாமல் தோளில் போட்டுக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார்.
51 சக்தி பீடங்கள்
சிவனின் கோபத்தினால் ஏற்படப்போகும் பேராபத்திலிருந்து இவ்வுலகினைக் காக்க, விஷ்ணு, சிவனிடமிருந்து தான் பெற்ற சுதர்சனசக்ரம் என்ற சக்ராயுதத்தால், அம்பிகையின் உடலை 51 துண்டுகளாகத் துண்டித்து அவை பூமியில் இந்தியாவிலும், அதன் அண்டை நாடுகளிலுள்ள முக்கியமான 51 இடங்களில் விழச் செய்தார்.
தேவியின் அங்கங்கள் விழுந்த 51 இடங்களும், சக்தி வாய்ந்த பீடங்களாகவும், புண்ணிய க்ஷேத்திர ஸ்தலங்களுமாயின. பைரவரின் காவலுடன் அம்பிகையின் கோயில்கள் 51 சக்தி பீடங்களில் தோன்றி, தேவியின் வழிபாட்டின் மூலம், சதியின் நினைவு நிலை பெற்றது.
தச மஹா வித்யா தேவியர் தோற்றத்தில் ஆரம்பமாகிய தட்சன் யாகம், 51 சக்தி பீடங்கள் தோன்றக் காரணமானதில் முடிவடைந்தது. இந்த தச மஹா வித்யா தோற்றம் மிகவும் பழமையானதாகும். மஹா விஷ்ணு தசாவதாரம் எடுத்த போது தசாவதார காரியங்கள் நிறைவேற உதவியர்கள் தச மஹா வித்யைகளே.
காளி – கிருஷ்ண அவதாரம்
தாரா – ராம அவதாரம்
ஷோடசீ – கல்கி அவதாரம்
புவனேஸ்வரி – வராஹ அவதாரம்
திரிபுரபைரவி – நரஸிம்ம அவதாரம்
சின்னமஸ்தா – பரசுராம அவதாரம்
தூமாவதி – வாமன அவதாரம்
பகளாமுகி – கூர்ம அவதாரம்
மாதங்கி – பலராம அவதாரம்
கமலா – மச்ச அவதாரம்
என்று அந்தந்த அவதாரங்களுக்கு உரிய சக்தியை வழங்கியவர் தச மஹா தேவியர்களாவர்.
உண்மையான பக்தியுடன் தச மஹா வித்யா தேவியரை வழிபடும் சாதகர்கள், உயர்ந்த ஞானத்தையும், தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கு புருஷார்த்தங்களையும் அடைவர்.
அதற்கும் மேலாக, மாயா ஜாலம் போன்ற மாரணம், உச்சாடனம், க்ஷோபனம், மோஹனம், த்ராவனம், ஸ்தம்பனம், வித்வேஷனம் என்ற மஹாசக்திகளையும் அடைவர்.
தச மஹா வித்யா தேவியர் ஒவ்வொருவருக்கும், அஸ்ஸாமில் காமாக்யா என்னுமிடத்தில் தனித்தனியே கோயில்கள் உள்ளன.
சக்தியை வழிபடும் சாக்தர்களுக்கு காமாக்யா ஒரு மிகச் சிறந்த புனிதமான இடமாகக் கருதப்படுகிறது.
The post ஞானம், தர்மம், அர்த்தம், மோட்சம் பெற்றிட !!! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.