மீனைப்போல கண்களை உடையவள் என்பதால் மீனாட்சியின் அழகில் சொக்கிய மதுரை மாப்பிள்ளையான சொக்கநாதர் சுந்தரபாண்டியன் என்ற பெயரில் மதுரையை ஆட்சி செய்வதில் மீனாட்சியுடன் உறுதுணையாக இருந்துவந்தார்.
கடம்ப வனத்தில் சிவலிங்கம்:-
தனஞ்செயன் என்ற வணிகன், தன் வியாபாரத்திற்காக சென்றபோது கடம்ப வனமாக இருந்த பகுதியில் இளைப்பாறும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்றும், அதன் அருகில் பொய்கை ஒன்றும் இருப்பதை கண்டான். சிவ பக்தனான அந்த வணிகன், ஈசனை வழிபட்டதுடன் இதுபற்றி, அந்த பகுதியை ஆண்டு வந்த குலசேகர பாண்டியனிடம் விவரம் தெரிவித்தான்.பாண்டியன், வணிகனுடன் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சிவபெருமானை தரிசித்தார். பின்னர் பொய்கையை சுற்றி ஈசனுக்கு கோவில் கட்டினார். மேலும் மதில், அகழி ஆகியவற்றோடு கூடிய பெரியநகரை அந்த கோவிலைச் சுற்றி நிர்மாணித்தார். தனது சடைமுடி மேல் மிளிரும் சந்திரனிடம் உள்ள மதுவைத்தெளித்து. அந்த நகரை புனிதமாக்கினார் சிவபெருமான். ஆதனால் இந்த ஊர் மதுரை என்று அழைக்கப்பட்டது.
யாகத்தில் உதித்த அன்னை:-
குலசேகர பாண்டியனுக்கு பிறகு அவரது மகன் மலையத்துவஜ பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவனுடைய மனைவி காஞ்சனமாலை. இவர்கள் குழந்தைப்பேறு வேண்டி புத்திர காமேஷ்டியாகம் செய்தனர். மலையத்துவஜன் செய்தயாக குண்டத்தில் இருந்து, அம்பிகை, குழந்தையாக தோன்றினாள். அந்த குழந்தைக்கு தடாதகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
மீனாட்சிக்கு உரிய வயது வந்ததும் மலையத்துவஜன், முடிசூட்டு விழாவை சிறப்பாக நடத்தினான். மீனாட்சி பாண்டிய நாட்டின் அரசியாக அரியணையில் அமர்ந்து செங்கோல் செலுத்தினாள். மீனாட்சி கன்னியாக இருந்ததால், பாண்டிய நாடானது கன்னி நாடு என்றும் அழைக்கப்பட்டது. மீனாட்சி திக் விஜயம் மேற்கொண்டு, எதிர்த்த மன்னர்களை எல்லாம் போரில் வென்றாள். அவளது வீரத்தின் கீழ் தேவலோகமும் வந்தது.வெற்றியை மேலும் ருசிக்க எண்ணிய மீனாட்சி, அங்கிருந்து கயிலை சென்றாள். கயிலை எதிர்க்கும் நோக்குடன் வந்த மீனாட்சியை நோக்கினார் சிவபெருமாள். நேருக்கு நேர் நோக்கிய சிவனின் பார்வையால் மீனாட்சியின் பெண்மை வெளிப்பட்டது. மீனாட்சியின் அழகில் சொக்கிப் போய் அவளை நோக்கினார் ஈசன். மண்ணை நோக்கினாள் அன்னை.
மீனாட்சியின் திருக்கல்யாணம்:-
அன்னை மீனாட்சியின் அழகில் சொக்கியதால், அவர் சொக்கநாதர் என்று அழைக்கப்பட்டார். எப்போது பித்தனாய், சுடுகாட்டில் அலைபவனாய், மண்டை ஓடு மாலை அணிந்தவனாய் விளங்கும் ஈசன், மீனாட்சிக்காக சுந்தரேஸ்வரர் என்றும் வர்ணிக்கப்பட்டார். மதுரைக்கு வந்து மணந்து கொள்வதாக மீனாட்சியிடம் உறுதி அளித்தார் ஈசன். அதன்படி திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் புடைசூழ மதுரை சென்று மீனாட்சியை மணந்தார்.
மதுரைம்பதியை அன்னை மீனாட்சியே ஆட்சி செய்ய அருள்புரிந்தார் சிவபெருமான். திருமண விருந்திற்காக பல்லாயிரக்கணக்கானோர் சாப்பிடும் அளவுக்கு உணவு தயார் செய்திருந்தார் அன்னை மீனாட்சி. ஆனால் சிவபெருமான் தரப்பில் வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் அன்னை திருமணத்திற்காக வெகு சிறப்பான உணவுகளை தயார் செய்திருந்தேன். உங்கள் பக்கம் இவ்வளவு குறைவாக ஆட்கள் இருக்கிறார்களே, உணவு அனைத்தும் வீணாகப்போகிறது. என்று கூறினார். அந்த பேச்சில், தான் தயாரித்த உணவுகளை உண்ணும் அளவுக்கு கூட ஈசன் பக்கம் ஆட்கள் இல்லையே என்னும் வகையிலான ஏளனமும், தன் வீட்டை பற்றிய பெருமையும் கலந்திருந்தது.
குண்டோதரனுக்காக சிவ பெருமான் உண்டாக்கிய வைகை :-
அப்போது ஈசன், ‘என்னில் வந்துள்ளவர்களில் குண்டோதரனுக்கு மட்டும் நீங்கள் உணவளித்து உபசரித்தால் போதும். நானும் என்னுடன் வந்தவர்களும் மகிழ்ச்சி அடைவோம்;, என்று கூறினார். அதன்படி உணவு பாரிமாறப்பட்டது. சமைத்து வைத்த அனைத்து உணவையும், குண்டோதரன் மட்டுமே உண்டு விட்டான். அப்படியும் அவன் பசி தீரவில்லை.’எனக்கு இன்னும் உணவு வேண்டும்” என்று பசியில் கத்தினான். மேலும், உணவு சாப்பிட்டதால் ஏற்பட்ட தாகம் தீர தண்ணீர் கேட்டான். தண்ணீர் கொண்டு வந்து தரப்பட்டது. மதுரை நகரில் இருந்த அனைத்து தண்ணீரையும் குடித்தும் அவனுக்கு தாகம் தீரவில்லை. பசியும் நீங்கவில்லை. குண்டோதரனின் அரற்றல் அதிகமானதே தவிர குறையவில்லை. பரிதவித்து போனாள் மீனாட்சி. கடைசியில் ஈசனிடமே தன்னை காத்தருளும் படி வேண்டினாள் அன்னை. அவர் குண்டோதரனை அங்கிருந்த ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று மணலில் ‘வைகை” என்று கூறினார். குண்டோதரன் அந்த இடத்தில் கையை வைத்ததும், நதி ஒன்று பிரவாகம் எடுத்து ஓடியது. அந்த நீரை அருந்தியதும் குண்டோதரனின் பசியும், தாகமும் முற்றிலும் தீர்ந்து போனது. அந்த நதியே வைகை என்று அழைக்கப்படும் நதியாகும்.
மதுரை மாப்பிள்ளையான சிவபெருமான்;, சுந்தரபாண்டியன் என்ற பெயருடன் மதுரையை ஆட்சி செய்வதில் அன்னை மீனாட்சிக்கு உறுதுணையாக இருந்து வந்தார். ஈசனுக்கும், அம்பிகைக்கும் முருகப்பெருமானின் அம்சமாக உக்கிரபாண்டியன் என்ற மகன் பிறந்தார். அவருக்கு பட்டம் சூட்டி விட்டு:, அம்மையும் அப்பனும் கயிலாய மலைக்கு திரும்பினர்.
பொற்றாமரைக் குளம் :-
மீனாட்சி அம்மன் கோவிலில் பொற்றாமரைக் குளம் இருக்கிறது. இந்த குளத்தில்தான் தேவேந்திரனும், அவனுடைய வாகனமான ஐராவதமும் சாபம் நீங்கப்பெற்றனர். மேலும் இந்த குளத்தில்தான் சங்கப்பலகை தோன்றி திருக்குறள் அரங்கேறியது. குளத்தின் தெற்கு சுவரில் 1330 குறள்களும் செதுக்கப்பட்டுள்ளன. பொற்றாமரைக்குளத்தில் ஸ்படிக சிவலிங்கம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தென்கரையின் மேற்புறத்தில் எப்பொழுதும் விபூதி அபிஷேகம் காணும் விபூதி விநாயகர் அருள்பாலித்து வருகிறார். குளத்தின் மேற்கு பக்கம் ஊஞ்சல் மண்டபம் உள்ளது.
திருவிழாக்கள் :-
மதுரையில் சித்திரை மாதம் வளர்பிறையில் 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. 8-ம் நாள் விழாவில் இரவு மீனாட்சி பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது செங்கோல் வழங்கும் வைபவம் சிறப்பாக நடைபெறும். வைரக்கிரீடம், மாணிக்கம், மரகதம் பதித்த செங்கோல் ஏந்தி மதுரை அரசி மீனாட்சி காட்சி தருவாள். மறுநாளான 9-ம் நாள் மீனாட்சியின் திக்விஜயம் நடைபெறும்.
10-ம் நாளில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும். அன்று காலை முதல் ஊரே விழாக் கோலம் பூண்டிருக்கும். தெய்வ திருமணத்தை முன்னிட்டு மஞ்சள், மஞ்சள் சரடு கொண்ட திருமாங்கல்ய பிரசாதம் பக்தர்களுக்கு கிடைக்கும். இந்த திருமணத்தில் கலந்துகொண்டால் திருமண தடைகள் அகலும், குழந்தை பாக்கியம்கிட்டும், தம்பதிகள் இணக்கமாவார்கள். திருக்கல்யாணம் முடிந்ததும் பக்தர்கள் வசதிக்கேற்ப மொய் எழுதுவார்கள்.
தொடர்புக்கு :-
0452-2344360
செய்தி : ப.சுஜாதா
படங்கள் : வசந்த்
The post மீனாட்சியின் கண் அழகில் சொக்கிய சொக்கநாதர்!! appeared first on Swasthiktv-Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.