ஸ்ரீ ருத்ரம் பரமேஸ்வரனை துதிக்கும் மிகமிக உயர்ந்த மந்திரமாகும். ஸ்ரீ ருத்ரம் நமது துன்பத்தை போக்குவதோடு முக்தியையும் அளிக்கவல்லது என்பதை பெரியபுராணம் காட்டுகின்றது. பல பாழடைந்த சிவாலயங்களில் சுவாமிக்கு குளிர குளிர ருத்ராபிஷேகம் செய்தபின், திருப்பணிகள் கும்பாபிஷேகம் நடந்துள்ளன.மேலும் தடைப்பட்ட திருப்பணிகள் பூர்த்திஅடையவும் ருத்திர ஹோமம் செய்வது பலன் அளிக்கவல்லது.
ஸ்ரீருத்ர மந்திரம் சாந்தி மந்திரமாகவும், ஸகல பாவங்களையும் போக்கும் பிராயச்சித்த மந்திரமாகவும் விளங்குகின்றது. வேதபுருஷனுக்கு ஸ்ரீருத்ரம் கண்ணாகவும், அதனுள் இருக்கும் பஞ்சாட்சரம் கண்மணியாகவும் விளங்குவதாக ஹரதத்தாச்சாரியார் போற்றுகின்றார். 63 நாயன்மார்களில் ருத்திர பசுபதி நாயனார் ஸ்ரீ ருத்ரம் ஜபித்து சிவமுக்தி பெற்றவர். பெரியபுராணத்தில் சேக்கிழார், “ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு, மால் அயன் அறியாவினா மாமலர்ச் சேவடி வழுத்தும் “-என்று போற்றுகின்றார்.
ஒரு மரத்தின் வேரில் நீரூற்றினால் கிளைகள் எல்லாம் செழிப்பதுபோல், ஸ்ரீ ருத்திர ஜபத்தால் எல்லா தேவதைகளும் த்ருப்தியடைகின்றார்கள் என்பதை சூத சம்ஹிதை, “விருக்ஷஸஸ்ய மூலவாகேன சாகபுஷ்யத்திவையதா, சிவருத்ர ஜபாது ப்ரிதே ஏவாஸ்ய தேவதா அதோ, ருத்ர ஜபாதேவ புக்திமுக்தி ப்ரஸித்தித :-என்று கூறுகின்றது.
ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்பவன் பஞ்சமாபாதகங்களில் இருந்தும் விடுபடுகின்றான்.அஞ்ஞானம் ஒழிந்து ஆத்மஞானம் பெறுகின்றான். ஈடுஇணை வேதத்திலும் சரி, ஸ்மிருதியிலும் சரி கிடையாது என்று மேலும் சூத சம்ஹிதை கூறுகின்றது. இத்தகைய அதிஉன்னதமான ஸ்ரீ ருத்ரம் ஜபித்து ருத்ரஹோமமும், ருத்ராபிஷேகமும் செய்வது அதி உன்னத பலனை தரவல்லது.
பரம உன்னதமான ஸ்ரீ ருத்ரம் முறைப்படி ஜபிக்கும்பொழுது, ஏற்படும் ஸப்த ஒலி அலை அதிர்வுகளும், ருத்ர யாக தீயிலிருந்து வரும் ஒளிக்கதிர்களும், புகை மண்டலமும் பிரபஞ்சமாகிய உலகை தூய்மை படுத்துவதுடன், உலக வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், துன்பங்களை அகற்றி சர்வ இஷ்ட சித்திகளை அளிக்கின்றது.
ஸ்ரீருத்ரம் சொல்லும் முறை
11 முறை ருத்ரம் சொல்வது, ‘ஏகாதச ருத்ரம்’ எனப்படும். இதை 11 நபர்கள் ஒரு முறை சொல்வர். 121 முறை (11 நபர்கள் 11 முறை) சொல்வது, ‘லகு ருத்ரம்’. லகு ருத்ரத்தை 11 முறை கூறினால், மஹா ருத்ரம். இந்த மஹாருத்ரத்தை 11 முறை பாராயணம் செய்வது, ‘அதிருத்ரம்’.
பொதுவாக கோயில்களில் 121 முறை ருத்ர பாராயணம் (லகுருத்ர பாராயணம்) செய்து, ‘ருத்ராபிஷேகம்’ செய்வது வழக்கம். இது எல்லாக் கோயில்களிலும் நடக்கும். மஹாருத்ரம், அதிருத்ரம் போன்ற நிகழ்வுகள், எப்போதாவது ஏதேனும் பெரிய சிவஸ்தலங்களில் நடைபெறும். இவற்றை ஒரு நாளில் செய்ய முடியாது. நாள்கணக்கில் செய்ய வேண்டும். அபூர்வமாகத்தான் காண முடியும். ஆனால் இப்போது சிதம்பரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘லட்ச ருத்ரம்’ என்பது, காணக் கிடைக்காத மிக மிக அரிய நிகழ்வு. முதல் முறையாக ஒரு லட்சம் முறை ஓதப்படுகிறது. உலக சமாதானம் மற்றும் உலக மக்களின் நன்மைக்காகவே இது நடத்தப்படுகிறது. அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழ்வதுதான் இந்த லட்ச ருத்ர ஜபத்தின் நோக்கம்.
The post பஞ்சமாபாதகங்களில் இருந்தும் விடுபட!!! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.