தினம் தினம் திருநாள் தான்,
தினம் ஒரு உத்ஸவம் தான்
ஆனித் திருமஞ்சனம் சிதம்பரம்
ஸ்ரீ நடராஜ ராஜர் என்றும், எப்பொழுதும் திருநடனம் புரிந்துகொண்டிருப்பதால், தினம் தினம் திருநாள் தான், தினம் ஒரு உத்ஸவம் தான்.
சிதம்பரத்தில் இரண்டு உத்ஸவங்கள் மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும்.
- ஆனித் திருமஞ்சன மஹோத்ஸவம்
- மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் (விபரம் தெரிய இந்தத் தலைப்பைக் க்ளிக் செய்யவும்)
ஒரு வருடத்திற்கு இரண்டு அயனங்கள் உண்டு. ஒன்று தக்ஷிணாயணம் மற்றொன்று உத்தராயணம். சிதம்பரம் ஸ்ரீ நடராஜ ராஜர் இரண்டு அயனங்களிலும் திருவிழா காண்கிறார்.
ஆனித் திருமஞ்சன மஹோத்ஸவம் – கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கி (21.06.2017 – புதன் கிழமை காலை 06.00 மணிக்கு மேல் 07.00 மணிக்குள், மிதுன லக்னத்தில் துவஜாரோஹணம்) அதை தொடர்ந்து, உத்ஸவ யாகசாலையில் காலை மாலை இரு வேளைகளிலும், மிகச் சிறப்பு வாய்ந்த ஹோமங்கள் செய்து, ஒவ்வொரு நாள் இரவிலும் மற்றும் காலையிலும், உத்ஸவ நாயகர்களாகிய ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் – நாதஸ்வர இசை முழங்க வீதி வலம் வந்து காட்சி நல்குவார்கள்.
ஒவ்வொரு நாளிலும் ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி சிறப்பு வாய்ந்த வாகனங்களில் வலம் வருவார்.
தங்கத்தினாலான மஞ்சம் (21.06.2017 – புதன் கிழமை),
வெள்ளி சந்திர பிரபை (22.06.2017 – வியாழக் கிழமை),
தங்க சூர்ய பிரபை (23.06.2017 – வெள்ளிக் கிழமை),
வெள்ளி பூத வாகனம் (24.06.2017 – சனிக் கிழமை),
ஸகோபுரம் எனும் தெருவடைச்சான் என்று அழைக்கப்படக்கூடிய ரதம் (கோபுர வடிவத்திலான, தெரு முழுவதும் அடைத்து வரக்கூடிய விதத்தில் அமைந்தது) (25.06.2017 – ஞாயிறு), வெள்ளி யானை வாகனம் (26.06.2017 – திங்கட் கிழமை), தங்க கைலாய மலையெடுத்த வெள்ளி ராவணன் வாகனம் (மிக அற்புதமான அமைப்பு, ராவணன் உருவம் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒன்பது தலைகளும், கையில் ஒரு தலையை வீணையின் தலைப்பாகமாக அமைத்து காம்போதி ராகம் மீட்டும் வகையில் அமைந்தது) (27.06.2017 – செவ்வாய்) என்று முறையே வலம் வந்து அருள்பாலிப்பார்.
எட்டாம் திருநாளில் (28.06.2017 – புதன் கிழமை) பிக்ஷாடனராக வலம் வருவார்.
ஒன்பதாம் திருநாள் (29.06.2017 – வியாழக் கிழமை) – தேர் உத்ஸவம்.
பத்தாம் திருநாள் (30.06.2017 – வெள்ளி) ஆனித் திருமஞ்சன மஹோத்ஸவம்.
மறுநாள் (01.07.2017 – சனிக்கிழமை) – முத்துப்பல்லக்கில் வீதியுலா.
தேர்த் திருநாளின் அதிகாலை 05.00 மணியிலிருந்து 06.00 மணிக்குள், மிதுன லக்னத்தில், ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜ ராஜர் அழகுமிகு அரிய அணிமணிகளுடன் அலங்காரம் செய்யப்பட்ட திருக்கோலத்தோடு யாத்ராதான நிகழ்ச்சியாக – சித்ஸபையின் கனகசபையிலிருந்து தேருக்குப் புறப்படும் திருக்காட்சி நடைபெறும்.
தேர் – மிக அழகிய வடிவம் வாய்ந்தது. மிக உயர்ந்த தோற்றம். ரதலக்ஷணம் எனும் சாஸ்திரப்படி சக்கரங்கள், ஆர், தட்டு, பார், கொடிஞ்சி, கூம்பு, கிடுகு முதலிய உறுப்புகளால் ஆனது. தேரிலுள்ள மரசிற்பங்கள் மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டது. தேரின் நடுவில் உள்ள ஊஞ்சலில் ஸ்ரீ நடராஜர் அமர்த்தப்படுவார்.
தேரில் அமர்த்தியபிறகு, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்ற பிறகு, சேந்தனாரின் திருப்பல்லாண்டு பாடல்கள் இசைக்க, வேத கோஷங்கள் முழங்க, திருமுறைகள் ஓதப்பட, நாதஸ்வரம் இன்னிசைக்க, உற்சாக கோஷங்கள் நிரம்ப, உலுக்கும் மரம் எனும் நெம்புகோல் வடிவம் தேரை உந்தித் தள்ள, உத்ஸவத்தின் மிக முக்கிய கட்டம் இனிதே தொடங்கும்.
நடராஜரின் ஆட்டத்திற்கு தாளம் இசைப்பது போல தேரில் இருக்கும் மணிகள் ஒலியெழுப்பும். நடராஜரின் முன் தோற்றத்தை ரசிப்பவர்களைப் போல, அழகுமிகு பின் தோற்றத்தை கண்டு ரசிப்போரும் உண்டு.
The post தினம் தினம் திருநாள் தான், தினம் ஒரு உத்ஸவம் தான் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.