குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா
”குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வெங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா
மணி வண்ணா மறையப்பா கோவிந்தா கோவிந்தா”
கொங்கு நாட்டில் உள்ள வைணவத் தலங்களில் புகழ் பெற்றது நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதிக்கு அருகில் செங்குத்து வடிவிலான மலை மீது வாசம் செய்யும் பெருமாள் இப்பகுதியில் புகழ் பெற்றவர் .
நாமக்கல் மாவட்டத்தில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் அதிகம் வாழ்வதாலும் , நாயக்கர்கள் இப்பகுதியை ஆண்டு வந்ததாலும் , நைனா என்றால் தந்தை என்று தெலுங்கில் பொருள் படுகிறது , கடவுளை தந்தை என்று கூறும் வழக்கம் இருப்பதால் இம்மலையை நைனா மலை என்று அழைக்கிறார்கள் என்றும் , சிவ தலங்களைப் போல தொன்மை வாய்ந்த இம்மலையில் ரிஷிகள் தவமிருந்து, வரதராஜப் பெருமாளை தரிசித்து வந்ததாகவும், கன்மநையின மகரிஷி என்பவர் பெருமாளுக்கு கைங்கரியங்கள் செய்து, மலை மீதே சமாதி ஆனதால் , இம்மலைக்கு நைனாமலை என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. பார்ப்பதற்கு சாய்வாகத் தோன்றும் இம்மலையின் உயரம் 3 கிலோ மீட்டர். ஆனால் மிகவும் செங்குத்தான, குறைந்த அகலமே கொண்ட 3,700 படிகள் உள்ளன. மற்றொரு சிறப்பம்சமாக மலையின் முகட்டில், உச்சி முழுவதையும் உள்ளடக்கி, கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் நாமக்கல் . சேந்தமங்கலம் பகுதியை ஆண்ட ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டது.
மலை மீது திருத்தலம் நான்கு யுகமாகக் கொண்டு இந்திரஜாலம், பத்மஜாலம், யாதவா ஜாலம், நைனா ஜாலம் ஆகிய பெயர்களுடன் திகழ்கின்றது. இம்மலை மீது 108 தீர்த்தங்கள் இருந்தன. இவற்றில் காலப்போக்கில் பராமரிப்பின்றி மறைந்து தற்போது கடும்பஞ்சத்திலும் என்றென்றும் வற்றாத தீர்த்தங்கள் மூன்று மட்டும் உள்ளன.
வரதராஜப் பெருமாள் குவலயவல்லியுடன் காட்சியளிக்கிறார். மலை மீது மகா மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணன், வெண்ணை தாழ் கிருஷ்ணன், நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், மன்மதன், ரதி, அய்யப்பன், தசாவதார சிலைகளும் உள்ளன.பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் ஆனி முதல் தேதி முதல் ஆடி 30ந் தேதி வரை சூரிய உதயத்தின்போது சூரிய ஒளி சுவாமி மீது விழுவது விசேஷம்.
இங்கு புரட்டாசி மற்றும்,சித்திரை மாத சனிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கொங்கு நாட்டில் உள்ள ஏராளமானோர் வந்து கலந்து கொள்வர்.பக்தர்கள் தங்கள் கால்நடைசெல்வங்கள் பெருக பெருமாளுக்கு கன்றுகளை நேர்ந்துவிடுவதும் உண்டு..
சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதன் சந்தையில் இருந்து பிரிந்து 4 கிலோ மீட்டர் தூரத்திலும், சேந்தமங்கலத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது அருள்மிகு நைனா மலை வரதராஜப் பெருமாள் கோவில். இது நாமக்கல்லில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
The post குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.