அக்னிஹோத்ரம் – ஆன்மாவை அறியும் தியானம்
பஞ்சபூதங்களில் ஒன்றானதும் வேதங்களால் வணங்கப்பட்டதுமான அக்னி இறையாற்றலின் தனித்துவமான வடிவம். தீ,வெம்மை, வெப்பம், நெருப்பு, கனல் மற்றும் அக்னி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பல்வேறு நிலையில் இருப்பது இறைவனின் ஆற்றலான அக்னியே என்பதை உணரவேண்டும்.
காலையில் நீங்கள் எழும் நேரம் கிழக்கில் சூரியன் என்னும் அக்னி ரூபம் செயல்பட வேண்டும். உங்கள் உடலை சுத்தமாக்கும் நீர் மழை வடிவிலும் நதி வடிவிலும் கிடைப்பதற்கு அந்த சூரியனே அக்னியாக இருந்து செயல்படுகிறார். தாவரங்களின் செயலுக்கும் நம் உணவின் உற்பத்திற்கும் அக்னியின் பயன் மிகவும் அவசியமாகிறது. நம் உடலின் வயிற்றுப்பகுதியில் இருக்கும் வெப்பமே உணவை ஜீரணம் செய்ய உதவுகிறது. இதற்கு ஜட அக்னி என்று பெயர்.
பிரபஞ்சத்தின் அனைத்து பொருளும் பஞ்சபூதத்தால் ஆனது. அவற்றில் அக்னியின் அளவு கூடுதலாக இருப்பது இயங்கும் உயிராகவும், அக்னி குறைவாக இருப்பது இயக்கமற்ற பொருளாகவும் மாறுகிறது.
தீ நெருப்பு என குறிப்பிடாமல் அக்னி என குறிப்பிட காரணம் என்ன?
அக்னி என்பது நெருப்பின் ஆழ்ந்த சொரூபம். ஜிவாலையாக எரியும் பொழுது நெருப்பு என்றும் கட்டுப்பாட்டுடன் திகழும் பொழுது அக்னி என்றும் கூறலாம். யஜூர் வேதத்தின் அக்னி என்பது முழுமுதற்கடவுளாக வர்ணிக்கப்படுகிறது. மேலும் உபநிஷத்தில் அக்னி ஜாதவேதன் என கூறிப்பிடுகிறார்கள். ஜாதவேதன் என்றால் அனைத்திலும் இருப்பவன் – அனைத்தையும் உணர்ந்தவன்.
அக்னிஹோத்ரம் எனும் புனித வேள்வி
ஒரிசா மற்றும் பல ஊர்களில் சூரியனார் கோவில் உண்டு. பிற மத கோவிலில் கூட சிவனை ருத்ர ரூபமாகவும், விஷ்ணுவை சூரிய நாராயணர் என்றும் வழிபட்டனர். கோவிலின் கட்டமைப்பில் கூட சூரியன் குறிப்பிட்ட நாளில் விக்ரஹத்தின் மேல் விழுமாறு செய்து மகிழ்ந்தனர். நம் உடல் பிரபஞ்சத்தின் வடிவமாக கருதினால் நம் ஆன்மா சூரியனாக இருக்கும். சூரியன் என்பது சுயம் பிரகாசிக்கும் ஒன்று.
அக்னிஹோத்ரம் – ஆன்மாவை அறியும் தியானம்.
அக்னிஹோத்ரம் என்றால் சுயமாக உருவான அக்னியை நாம் உருவாக்கிய அக்னியால் வணங்கி நன்றி கூறுவது அக்னிஹோத்ரம். சுயமான அக்னியாகிய சூரியனை, நாம் உருவாக்கும் அக்னி கொண்டு நன்றி தெரிவிப்பது அக்னிஹோத்ரம்.
ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே.
-திருமந்திரம்
அக்னிஹோத்ரம் மற்றும் பிற ஹோமம் செய்யும் பொழுது இருக்கும் அக்னியும், இடுகாட்டில் உடலில் இடும் அக்னியும், உடலின் உள்ளே இருக்கும் அக்னியாக வினை செய்பவனும், வேதத்தில் அக்னி என்று போற்றப்படுபவனும் ஈசனே ஆகும். இறைவன் அக்னி சொரூபம் என்பதையும் அனைத்து இடத்திலும் இருக்கும் அக்னியும் இறைவனின் சொருபமே என்றும் விளக்கும்.
அக்னிஹோத்திரம் செய்தால் சூரிய பகவான் உங்களை ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் கூட்டி சென்று பிரபஞ்சத்தை சுற்றிக்காட்டுவார் என்றால் என்ன நடக்கும்? அக்னிஹோத்திரம் செய்து சில வினாடிகளில் வெளியே ஓடி சென்று குதிரை வண்டி வந்தாச்சா என பார்ப்போம்.
அக்னிஹோத்திரம் ஒரு வித யோக பயிற்சி போன்றது. தினமும் அக்னிஹோத்திரம் காலையும் மாலையும் செய்ய வேண்டும். தினமும் செய்ய செய்ய நம் உடல், நம் வசிக்கும் இடம், நம் ஆன்மா, நம் பாரம்பரியம் என பல்வேறு தளங்களில் அக்னிஹோத்ரம் பலன்களை தரும்.
அக்னிஹோத்ரம் எப்படி செய்ய வேண்டும்?
அக்னிஹோத்ரம் செய்ய தேவையான பொருட்கள் :
1) சிறிய ஹோம குண்டம்,
ஒரு அடி அகலம் ஒரு அடி நீளம் அரை அடி ஆழம் கொண்ட செம்பு உலோக பாத்திரம் அல்லது மண் பாண்டத்தை குண்டமாக பயன்படுத்தலாம். தினமும் வீட்டில் ஒரே இடத்தில் நிரந்தரமாக செய்ய சதுரமாக குழி தோண்டி அதில் சாணம் கொண்டு மொழுகி பயன்படுத்தலாம்.
2) சாண வறட்டி
சிறிய அளவிலான வறட்டிகள் போதுமானது.
3) முனை உடையாத பச்சரிசி.
இரு பக்க முனைகளும் உடையாத பச்சரிசி தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். நூறு கிராம் பச்சரிசி ஒரு மாதத்திற்கு மேல் பயன்படுத்த முடியும். காரணம் ஒரு சிட்டிகை அளவே அரிசி தினமும் பயன்படுத்த போகிறோம்.
4) பசு நெய்
சிறிது அளவு போதுமானது. அதிகமான பொருட்களை நாம் அக்னியில் இடுவதில்லை. இது போக நெய் ஊற்ற சிறிய கரண்டி. அவ்வளவு தான்.
அக்னி ஹோத்ரம் செய்யக்கூடிய நேரம் :
சூரிய உதிக்கும் நேரம் மற்றும் சூரிய அஸ்தமன நேரம்.
நேரம் மிகத்துல்லியமாக கணிக்க வேண்டும்.
சூரிய அஸ்தமன/ உதய நேரத்திற்கு முன் சில நிமிடங்களில் துவங்க வேண்டும்.
சரியான அஸ்தமன/ உதய நேரத்தில் பொருட்களை அக்னியில் சேர்க்க வேண்டும்.
இந்த நடைமுறை மிக முக்கியமானது.
அக்னிஹோத்ரம் செய் முறை :
ஹோம குண்டத்திற்கு திலகம் இட்டு வணங்கவும். பின் சாண வறட்டியை இரண்டு மூன்று துண்டுகளாக்கி குண்டத்தில் அடுக்கவும்.வறட்டியில் சிறிது நெய் துளிகள் விட்டு, வரட்டியில் நெருப்பை ஏற்றவும்.
நன்றாக வறட்டி எறியும் வரை காத்திருக்கவும். அக்னி நன்றாக உயர்ந்த நிலையில் சிறிது பச்சரிசி எடுத்துக்கொண்டு சில துளி நெய்யுடன் கலக்கவும். மந்திரம் கூறி அக்னியில் சேர்க்கவும். இரு மந்திரங்கள் கூறுவதால் இரு முறை மட்டுமே அக்னியில் அரிசியை சேர்த்தால் போதுமானது. அக்னியை வணங்கி அக்னிஹோத்ரத்தை நிறைவு செய்யவும்..
அக்னி ஹோத்ரத்தில் கூற வேண்டி மந்திரம் :
சூரிய உதய காலத்தில் கூறும் மந்திரம்
சூர்யாய ஸ்வாஹா ( முதல் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
சூர்யாய இதம் நமஹா
ப்ரஜாபதியே ஸ்வாஹா (இரண்டாம் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
ப்ரஜாபதியே இதம் நமஹா
சூரிய அஸ்தமனத்தில் கூற வேண்டிய மந்திரம்
அக்னியே ஸ்வாஹா ( முதல் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
அக்னியே இதம் நமஹா
ப்ரஜாபதியே ஸ்வாஹா (இரண்டாம் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
ப்ரஜாபதியே இதம் நமஹா
அக்னிஹோத்திரத்திற்கு என சின்னதாக ஒரு பை தயார் செய்து அப்பொருட்கள் அதனுள் வைத்திருந்து தினமும் பயன்படுத்தலாம்.
அக்னிஹோத்திரம் தமிழ் மாத்திரைகள் (மந்திரங்கள்)
அக்னி வேள்வி :
கதிர் உயரும் நேரம் கூறும் மாத்திரைகள் :
கதிரவனிடம் சரணாகதி அடைகிறேன்
கதிரவன் இங்கே எழுந்தருளட்டும்.
அண்டத்தை படைத்தவனை சரணடைகிறேன்.
அண்டத்தை படைத்தவன் இங்கே எழுந்தருளட்டும்.
கதிர் சாயும் நேரம் கூறும் மாத்திரைகள் :
அக்னியை சரணடைகிறேன்
அக்னியை இங்கே எழுந்தருளட்டும்.
அண்டத்தை படைத்தவனை சரணடைகிறேன்.
அண்டத்தை படைத்தவன் இங்கே எழுந்தருளட்டும்.
The post அக்னிஹோத்ரம் – ஆன்மாவை அறியும் தியானம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.