கோபுர தரிசனம் கோடி புண்ணியம் உத்தமர் கோயில் ஸ்ரீ புருஷோத்தமர்
தீர்த்தம் : கிழக்கே கதம்பதீர்த்தமும், தெற்கே அய்யன் வாயக்காலும் கோவிலின் தென்புறத்தில் கிணறும் உள்ளன. வடபுறத்தில் பிரகலாத தீர்த்தமும், தெற்கில் பிரம்ம தீர்த்தமும் உள்ளன. தலவிருட்சம் : கதம்பமரம். விமானம் : உத்தியோ விமானம்.
தலச்சிறப்பு :
புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமானதால், உத்தமர் கோயில் எனப் புகழ் பெற்றது. பல மன்னர்களும் இத்தலத்திற்குக் கொடையளித்ததாக இங்கு காணப்படும் குறிப்புகள் வெளியிடுகின்றன. இவர்களுள் சோழ மன்னன் கேசரி வர்மனும், பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனும் அடங்குவர். முப்பெரும் தேவியர் உடனுறை மும்மூர்த்திகள் அருளும் ஒரே திருத்தலம். சப்தகுரு பகவான்கள் அருளும் ஒரே குருபரிகார ஸ்தலம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வித்த திருக்கோவில்.
பிஷாடண மூர்த்தியாக சிவன் காட்சி அளிப்பதால் பிஷாண்டார் கோயில் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. திருமங்கையாழ்வார், கதம்ப மகரிஷி, உபரிசிரவசு, சனகர், சனந்தனர், சனத்குமாரர், முதலியவர்களுக்கு அரும் காட்சி தந்தருளிய பெருமான் இவர். மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவியருடன் அருகருகே தனித்தனி சந்நிதிகளில் அமைந்து அருளும் ஸ்தலம் இந்தியாவில் இது ஒன்றே. மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 வைணவத் திருப்பதிகளில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்த பெருமை உடையது. சிவபெருமானின் 63 மூர்த்தங்களில் ஒன்றாகிய பிச்சாடனர் திருகோலம் அவதரித்த தலம். ‘சப்தகுருக்கள்’ என்று அழைக்கப்படும்.
பிரம்மகுரு, விஷ்ணுகுரு, சிவகுரு, சக்திகுரு, சுப்ரமயணிகுரு, தேவகுரு பிரஹஸ்பதி, அசுரகுரு சுக்ராச்சார்யார் ஆகிய ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் உலகின் ஒரே திருத்தலம். தென்முகமாக குருபகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னதியில் பிரம்மா அருளும் ஸ்தலம். பிரம்மாவின் இடப்புறம் தனிசன்னதியில் ஞானசரஸ்வதி குடிக்கொண்டு இருக்கும் ஸ்தலம்.
தல வரலாறு :
ஆதிபிரம்ம புராணத்திலேயே இக்கோயில் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தம்மிடம் மிக்க பக்தி செலுத்தி வரும் பிரம்மாவைச் சோதிக்க விஷ்ணு கடம்ப மரமாக உருவெடுத்து இங்கு வந்ததாகவும், அந்த உருவிலும் பிரம்மா அவரை அறிந்து கொண்டு தொடர்ந்து வழிபட்டதால், மனம் மகிழ்ந்த விஷ்ணு அவருக்கு இங்கு தனி வழிபாட்டு சந்நிதி கொள்ளுமாறு செய்ததாகவும் கூறுவர். இந்தியாவில் மிகச் சில இடங்களிலேயே பிரம்மா மற்றும் சரஸ்வதி ஆகியோருக்கு தனிக் கோயில்களோ, சந்நதிகளோ உள்ளன.
இக்கோயிலில், சிவன் பிச்சாடனாராக உருக்கொண்டமைக்கும் ஒரு வரலாறு உள்ளது. தன்னைப் போல் பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் உள்ளதைச் சகிக்காத சிவபெருமான் பிரம்மனுடைய ஒரு தலையைக் கிள்ளி எறிந்ததாகவும், பிரம்ம ஹத்தி தோஷம் வந்ததால், சிவனின் கையிலிருந்த கபாலம் அவரது கையோடு ஒட்டிக் கொண்டதாகவும், சிவன் கையில் ஒட்டிக் கொண்ட கபாலத்தில் மகாலட்சுமியைக் கொண்டு பிச்சையிடச் செய்ததால் அச்சாபம் நீங்கியதாகவும் கூறுவது உண்டு.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் உத்தமர் கோயில் ஸ்ரீ புருஷோத்தமர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.