கோபுர தரிசனம் கோடி புண்ணியம் உறையூர் ஸ்ரீ அழகிய மணவாளன்
திருமங்கையாழ்வார் திருநாகை எனும் நாகப்பட்டினத்திற்கு வருகிறார். அங்கு எழுந்தருளி உள்ள சௌந்தர்யரராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும்போது அவர் அழகில் தன் மனத்தைப் பறிகொடுக்கிறார். சௌந்தர்யராஜப் பெருமாளின் அழகு உறையூர் எனும் திருக்கோழியில் குடிகொண்டுள்ள அழகிய மணவாளனின் அழகுக்கு நிகரானது என்று கருதுகிறார். எனவே
”இவர் உறையூரையும், தென் மதுரையையும் இருப்பிடமாகக் கொண்ட கண்ணபிரானைப் போலவே இருக்கிறாரே? மலை போன்ற நான்கு திருத் தோள்களை உடையவராகவும் இருக்கிறார். மேலும் இவரை நாம் இதற்கு முன்பு பார்த்ததில்லையே! இவர் பல்லாண்டு வாழ்க! கடல்வண்னம் கொண்டவராகவே இவர் தோன்றுகிறார். ஒரு திருக்கையில் சக்கரத்தையும், மற்றொரு கையில் சங்கினையையும் தரித்துக் கொண்டிருக்கிறாரே! இவரது அழகை நான் என்னென்று சொல்வேன்?” என்று மங்களாசாசனம் செய்து அருளுகிறார்.
“கோழியும் கூடலும் கோயிலும் கொண்ட கோவலரே ஒப்பர், குன்ற மன்ன
பாழியந்தோளுமோர் நான்குடையர் பண்டு இவர்தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணம் எனில் மாகடல் போன்றுளர், கையில் வெய்ய
ஆழியன்றேந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒரு வரழகியவா”
இந்த உலகினில் எங்கும் காணாத அவ்வழகுக்குக் கண் எச்சில் படாமல் இருப்பதற்காக ஆழ்வார் ‘வாழியரோ’ என்கிறார். திருக்கோழி என்னும் உறையூர் பெயர் கொண்ட இத்திவ்ய தேசம் திருச்சி நகரத்தின் உள்ளேயே உள்ளது. திருச்சி இரயில்வே சந்திப்பிலிருந்து சுமார் மூன்று கி.மீ தொலைவிலுள்ளது.
இங்கே பெருமாள் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அழகிய மணவாளன் எனும் திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார். தாயார் திருமணக் கோலத்துடன் கமலவல்லி நாச்சியார் மற்றும் உறையூர்வல்லி எனும் திருநாமங்களுடன் அருள் பாலிக்கிறார்.
திருவரங்கம், திருக்கரம்பனூர் எனும் உத்தமர்கோவில், மற்றும் திருவெள்ளறை ஆகிய திவ்யதேசங்கள் உறையூருக்கு மிக அருகில் உள்ளன. இந்த உறையூரானது பண் டைக்காலத்தில் உறந்தை என்றும் நிகளாபுரி என்றும் அழைக்கப்பட்டது. தமிழ் இலக்கியங்களில் இதன் பெருமை பல இடங்களில் கூறப்படுகிறது. இது சோழ மன்னர்களின் தலைநகராகவும் விளங்கி வந்திருக்கிறது.
முன்பொருகாலத்தில் நந்தசோழன் எனும் மன்னன் இதைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். அவன் தர்மவர்மாவின் வம்சத்தில் வந்தவன்.அவன் சிறந்த பக்தி உள்ளவனாகத் திகழ்ந்து வந்தான். மேலும் அரங்கனுக்குத் தொண்டு செய்வதை தன் வாழ்நாளின் பெரும்பேறாகக் கருதி வந்தான். ஆன்னலும் அவனுக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பெரும் கவலையோடிருந்தான். ஸ்ரீவைகுந்தத்தில் குடிகொண்டுள்ள எம்பெருமான் அவன் அன்பைக் கருதி அவனுக்கு திருவருள் செய்ய எண்ணம் கொண்டார். தம் பிராட்டியையே அவனுக்கு மகளாகப் பிறக்க அருளினார். பிராட்டியும் மனம் மகிழ்ந்து உறையூரில் தாமரை ஓடையில் தாமரை மலரில் சிறுகுழந்தையாக அவதரித்தார். வேட்டைக்குச் சென்ற நந்தசோழன் அக்குழந்தையைக் கண்டெடுத்தான். அதற்குக் கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான்.
அக்குழந்தையும் நன்கு வளர்ந்து மணப்பருவம் எய்தியது. ஒருநாள் கமலவல்லி தம் தோழிகளுடன் வனத்திற்கு உலாவச் சென்றாள். அப்போது ஸ்ரீஅரங்கநாதன் அங்கு தம் குதிரை மீது ஏறி வேட்டைக்கு வந்தார். கமலவல்லி அவரைக் கண்டதும் அவர் அழகில் மயங்கி வியப்படைந்தாள். யாரோ இவர் எனக் கருதினாள். பெருமாள் தம் பேரழகு முழுவதையும் கமலவல்லிக்குக் காட்டி மறைந்தார். கமலவல்லியோ அவரை மறக்க இயலாமல் அவர் மீது காதல் கொண்டு பக்தியும் மேலிட்டுக் கலங்கலானாள். தம் மகளின் நிலை கண்ட நந்தசோழன் அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் திகைத்தான். மனம் வருந்தினான். எம்பெருமானிடம் முறையிட்டான்.
அவன் கனவில் தோன்றிய பெருமாள் “யாம் பிள்ளையில்லாத உன் மனக்குறையைப் போக்கவே பிராட்டியை உனக்குத் திருமகளாக அனுப்பி வைத்தோம். ”நீ உன் மகளை எம் சன்னதிக்கு அழைத்து வா; யாம் அவளை ஏற்றுக் கொள்கிறோம்” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
மன்ன்ன் மன்ம் மகிழ்ந்தான். நகரை அலங்கரித்தான். கமலவல்லியைத் திருமணக் கோலத்தில் திருவரங்கம் அழைத்து வந்தான். அக்கோவிலின் கருவறையில் எழுந்தருளி உள்ள அரங்கநாதனுடன் சென்று கமலவல்லி இரண்டறக் கலந்தருளினார். மன்னனும் அவனுடன் வந்திருந்த மற்றவரும் காணக்கிடைக்காத அக்காட்சியைக் காணும் பேறு பெற்றனர்.
அதன் பிறகு நந்தசோழன் திருவரங்கக் கோவிலுக்குக் கணக்கற்றத் திருப்பணிகள் பல செய்தான். பின்னர் உறையூர் வந்து கமலவல்லி அழகிய மணவாளன் திருமண நினைவாக ஒரு பெரிய கோவில் சமைத்தான். திருவரங்கத்தின் அரங்கநாதனே அழகான மாப்பிள்ளையாக வந்ததால் இங்கு அழகிய மணவாளன் எனும் திருநாமம் கொண்டார். சிபிச்சக்கரவர்த்தி ஆண்ட போது இந்த உறையூர் முதல் தலைநகராகவும், காவிரிப்பூம்பட்டினம் இரண்டாவது தலைநகராகவும் விளங்கியது என்பர். ஒரு சமயம் இளஞ்சேட்சென்னி எனும் மன்னன் இந்த உறையூரை ஆண்டு வந்தான். அப்போது ஒருநாள் அந்த அரசனின் பட்டத்தரசி இறைவனின் பூஜைக்கு வைத்திருந்த பூக்களை எடுத்துத் தன் தலையில் சூடிக் கொண்டாளாம்.
திருமங்கையாழ்வார் ஒரே ஒரு பாசுரத்தால் இத்திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். அவரும் கோழி என்று இவ்வூரின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். குலசேகரப்பெருமாள் சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஆண்ட போது இந்த உறையூரைத் தலைநகராகக் கொண்டிருந்தார் எனப்து அவர் பாசுரத்தால் அறிய முடிகிறது. அதில் அவர் தம்மைக் கொல்லிமலை, கூடல் கோழி ஆகிய மூன்றுக்கும் மன்னன் என்று குறிப்பிட்டுள்ளார்.
”அல்லிமாமலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள் தம்
எல்லையிலடிமைத் திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம்
கொல்லிக் காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் குலசேகரன்
சொல்லினின் தமிழ்மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்களாவாரே”
கமலவல்லி நாச்சியாரை மணம் புரிய அரங்கநாதன் திருவரங்கத்திலிருந்து இந்த உறையூருக்கு எழுந்தருளியதை இன்றைக்கும் ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர். அதன் பொருட்டு எம்பெருமான் அரங்கன் ஆண்டுக்கொருமுறை திருவரங்கத்திலிருந்து எழுந்தருளி கமலவல்லி நாச்சியாருடன் ஏகாதசனத்தில் இங்கு அமர்ந்து சேவை சாதிக்கிறார்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் உறையூர் ஸ்ரீ அழகிய மணவாளன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.