கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கள்வர் பெருமான் திருக்கோயில், கார்வானம், காஞ்சிபுரம்
‘நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமானுன் திருவடியே பேணினேனே.’
-திருமங்கையாழ்வார்
என்று திருமங்கையாழ்வாரால் அர்ச்சாவதார மூர்த்திகள் பலரை ஒருங்கே மங்களாசாசனம் செய்யப்பட்ட இப்பாடலில் குறிக்கப்பட்டுள்ள கள்வா என்னும் ஒரு சொல்லே இத்தலத்திற்கும் இப்பெருமாளுக்கும் இட்ட மங்களாசாசனம் ஆகும். திருமங்கையாழ்வார் எத்தனையோ தலங்கட்கு எம்பெருமானின் திருப்பெயர்களை மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார். அப்பாடல்களில் அவ்வெம்பெருமான்களின் பெயர்கள் தனித்து தெளிவாக மங்களாசாசனம் செய்யப்பட்டிருக்கும். அல்லது தலத்தின் பெயர் மட்டும் தனித்து மங்களாசாசனம் செய்யப்பட்டு ஒலிக்கும்.
காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாள் கோயிலான திருவூரகத்தின் உட்புறத்திலேயே அமைந்துள்ள பிற மூன்று திவ்ய தேசங்களுள் மூன்றாவதும், 83ஆவது திவ்யதேசமுமானது திருக்காரகம்.
தலபுராணம்:
பார்வதி அன்னைக்கு தன் சகோதரன் ஸ்ரீமன் நாராயணனைக் கள்வன் கோலத்தில் பார்க்க ஆசையாம். அதற்காக எம்பெருமான் கள்வனாகக் காட்சியளித்த தலம் இது. காஞ்சியில் திருக்கள்வனூர் என்றொரு திவ்ய தேசமும் உண்டு. ஆனால், காமாட்சி கோயிலின் உட்புறச் சந்நதியில் அமைந்துள்ள அக்கோயிலின் மூலவர் ஆதிவராஹப் பெருமாள் ஆவார். இங்கோ, கள்வனாகவே எம்பிரான் காட்சியளிக்கிறார்.
பாதாளத்தை அடைந்த மஹாபலிச் சக்ரவர்த்தி, தான் நற்கதி அடைய நாராயணனே தெய்வம் என்று யாகம் செய்ய முற்படுகையில் அதைத் தேவர்கள் தடுக்க எண்ணி, யாகத்திற்குத் தேவையான நீர் எங்கும் கிட்டாத வண்ணம் பூமி வறண்டு போகும்படிச் செய்தாரர்களாம். இதனால், மஹாபலி தன் சிரம் மீது தாள்வைத்த அறிதுயிலானை வேண்ட, அவனும் கார்மேகமாக வடிவெடுத்து இங்கு பொழிந்து யாகம் குந்தகமின்றி நிறைவேற அருள் புரிந்தானாம். இதனாலேயே கார்வானம் என்றானது என்பர்.
மேற்கே திருமுகமண்டலம் காட்டி நின்ற திருக்கோலத்தில் அருள் புரியும் மூலவர் களவர் பெருமாள், கார்வானர் என்று அழைக்கப்படுகிறார். தாயாரின் திவ்ய நாமம் கமலவல்லி நாச்சியார் என்பதாகும். அடியவரின் அல்லல்கள் அனைத்தையும் நீக்குபவன் கள்வன் என்பது இக்கோயிலின் சிறப்பாகும்.
தேர்படை கொள்பெரும் தேசத்து மன்னருக்கும்
ஆரும் தனக்கின்றி அண்டிப் பிழைப்பவர்க்கும்
கார்வானம் போலக் கருணை பொழிந்திடுவான்
கார்வானன் அன்றிவேறு யார்!
ஓம் நமோ நாராயணாய
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கள்வர் பெருமான் திருக்கோயில், கார்வானம், காஞ்சிபுரம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.