கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி
‘தாளால் உலகம் அளந்த அசைவேகொல்,
வாளா கிடந்தருளும் வாய்திறவான், – நீளோதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்,
ஐந்தலைவாய் நாகத் தணை?’
– திருமழிசை ஆழ்வார்
சென்னையின் பிரதானப் பகுதியான திருவல்லிக்கேணி என்று தற்போது வழங்கப்பெறும் திரு அல்லிக் கேணி என்னும் பகுதியின் பெயர் சொல்லும் புராதானப் பெருங்கோயில் பார்த்தசாரதி திருக்கோயில். இதை அறியாதோர் தமிழ் நாட்டில் இருக்க வாய்ப்பில்லை என்னுமளவு பிரபலமான கோயில். வைணவர்களின் திவ்யதேசங்களில் 94ஆவது இடம் பெற்ற இது தொண்டை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகும்.
தலபுராணம்
பிருந்தாரண்யம் என்று புராணகாலத்தில் வழங்கப்பட்ட இந்நகரை ஆண்ட சுமதிராஜன் என்னும் மன்னன் எம்பெருமானை அவர் குருஷேத்திரத்தில் பார்த்தனுக்குச் சாரதியாக விளங்கிய கோலத்தில் காண விழைந்து தவம் செய்ய, ஸ்ரீமன் நாராயணன் அவ்வாறே அவனுக்குக் காட்சி தந்து அருளினார் என்பதே இத்தல வரலாறு. போர்க்களத்தில் இருந்ததன் விளைவாக எம்பிரானின் திருமுகத்தில் அம்பு பட்ட வடுக்களைக் காணலாம் என்பர். தான் அளித்த வாக்குப்படி, ஆயுதமேந்தாமல் சங்கொன்றை மட்டுமே கரங்கொண்டு காட்சிதரும் கிருஷ்ண பரமாத்மாவாக இங்கு எழுந்தருளியுள்ளார்.
வேதவியாசரின் சீடரான ஆத்திரேய முனிவரால் இங்குள்ள மூல விக்கிரஹமும், பாமா மற்றும் ருக்மினி விக்ரஹங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டனவாம். இதையே வழிபடுமாறு வேங்கடவன் மன்னன் சுமதிராஜனுக்குக் கனவில் உரைத்தான் என்றும் கூறுவர்.
தேரோட்டியாகப் பணி புரிந்ததால் இங்கு பெருமாளுக்கு மீசை இருப்பதைக் காணலாம். இது வேறெங்கும் இல்லாத அபூர்வக் காட்சியாகும். இதனால் மீசைப் பெருமாள் என்றொரு திருநாமமும் உண்டு. ஆயினும், வைகுண்ட ஏகாதசி திருவிழாக் காலத்தில் பகல் பத்து வைபவத்தின் ஆறாம் நாள் துவங்கி பத்தாவது நாள் வரையில் மீசையில்லாத பெருமாளாக அலங்காரம் செய்விக்கின்றனர்.
பலராமன், சாத்யகி, அநிருத்தன், பிரத்யும்னன் ஆகியோருடன் கிழக்கே திருமுக மண்டலம் காட்டி, ருக்மினி பிராட்டியார் சமேதராக நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் வேங்கடவனால் அடையாளம் காட்டப்பட்ட மூலவர் வேங்கடகிருஷ்ணன். இப்பெயர் கொண்டே வழங்கி வந்த திருக்கோயில் பிற்காலத்தில் பார்த்தசாரதி என்னும் உற்சவரின் பெயரால் வழங்கலாயிற்று.
கிழக்கே திருமுக மண்டலம் காட்டி புஜங்க சயனத் திருக்கோலத்தில் அருளும் ரங்கநாதப் பெருமானையும் தரிசிக்கலாம். இங்கு வராஹ, நரசிம்ம திருக்கோலங்களிலும் எம்பிரான் காட்சி தருகிறார்.
தனிக்கோயில் கொண்ட தாயாரின் திவ்ய நாமம் வேதவல்லி என்பதகும். திருமாலை மருமகனாக அடையத் தவமிருந்த பிருகுமுனிவரின் குடிசையின் அருகில் மஹாலட்சுமி ஒரு சிறு குழந்தையாகத் தோன்றியதாகவும், அவளுக்கு வேதவல்லி என்று பெயரிட்டு பிருகு முனிவர் தன் மகளாக வளர்த்தார் என்றும் கூறுவர். ஸ்ரீ ரங்கநாதப் பெருமானாக எம்பெருமான் வந்து வேதவல்லித் தாயாரை மணந்த மாசி மாத வளர்பிறை துவாதசி இன்றளவும் திருக்கல்யாண தினமாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக எல்லாக் கோயில்களிலும் ஒரு மூலவர் மட்டுமே காணப்படும், இத்திருக்கோயிலின் பெருஞ்சிறப்பு இங்கு மூலவர் என்னும் அந்தஸ்தோடு ஐந்து மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர்.
ருக்மினி பிராட்டி சமேத வேங்கட கிருஷ்ணன், வேதவல்லி சமேத ரங்கநாதன் (ஸ்ரீமன் நாதன் என்றும் கூறுவர்), சீதா, லஷ்மண, பரத, சத்ருக்ன சமேதமாக ஆஞ்சநேயருடன் காட்சி அளிக்கும் ஸ்ரீ ராம பிரான், வரதராஜன் என்னும் தேவப்பெருமாள், பிரகாரத்தில் காணப்படும் கஜேந்திர வரதர் மற்றும் தெள்ளிய சிங்கர் என்னும் திருநாமங்கொண்ட நரசிம்மர் ஆகியோர் ஆவர்.
இதனால் இத்திருக்கோயில் பஞ்சமூர்த்தி ஸ்தலம் என்றும் அழைக்கப்படுகிறது. அத்திரி முனிவருக்குத் தெள்ளிய சிங்கராகவும், சப்தரோமா முனிவருக்குக் கருடாசன வரதராஜனாகவும், மதுமான முனிவருக்கு பட்டாபி ராமனாகவும் ஸ்ரீமன் நாராயணன் காட்சியளித்தார் என்பது ஐதீகம்.
இவர்களில் வேங்கடகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ ராமபிரான் நின்ற திருக்கோலத்திலும், ரங்கநாதர் புஜங்க சயனத்திலும், தெள்ளிய சிங்கர் மற்றும் தேவப்பெருமாள் (கருடன் மீது) வீற்றிருந்த கோலத்திலும் காட்சி தருகின்றனர்.வேங்கடகிருஷ்ணனும், ரங்கநாதனும் கிழக்கே திருமுக மண்டலம் காட்ட, தெள்ளிய சிங்கர் திருமுகம் மேற்கு நோக்கியிருக்க, ஸ்ரீ ராம பிரான் தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் காட்சி தருகின்றனர்.
தலச்சிறப்பு
இத்தலத்து நரசிம்மர் கல்வி கேள்வி வித்தைகளில் தேர்ச்சியும், பண்டிதமும் அருள்பவர் ஆவார். பார்த்தசாரதிப் பெருமாளை இறைஞ்சுவோர் திருமணத் தடைகள் நீங்கப் பெறுவர். சந்தான பாக்கியமும், ஐஸ்வர்யமும் அருள்பவர் இவர்.
தன் குடும்பத்துடன் கிருஷ்ணர் காட்சியளிக்கும் இத்திருக்கோயில் உற்றார், உறவினருடனான மனச் சங்கடங்கள், பகைமை ஆகியவற்றை நீக்கி குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும் என்பது நம்பிக்கை. சத்ருக்களை வெல்லவும், எடுத்த காரியத்தைத் தடையின்றி முடிக்கவும் இக்கோயில் பெருமாளை வணங்குவது நன்மை பயக்கும்.
வல்லான் வினையறுத்து வாடாது இவ்வுலகில்
நல்லோர் நலம்வாழ பார்த்தனுக்குச் சாரதியாய்
வெல்ல வழிவகுத்த வேங்கடவன் வேல்மாமன்
மல்லாள் மணிவண்ணன் மாதவனின் தாள்பற்றின்
நில்லாது செல்வான் நமன்.
ஓம் நமோ நாராயணாய!
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.