ஸ்ரீ மாதசிவராத்திரி விரதமும் வழிபாட்டு காலங்களும்
சிவராத்திரி வழிபாட்டுக் காலங்கள்
உமாமகேஸ்வர விரத காலத்தில் உமா மகேஸ்வரரையும், திருவாதிரையில் நடராஜரையும், திரிசூலவிரதத்தின்போது அஸ்திரதேவரையும், வழிபடுவது போலவே சிவராத்திரியின் மூன்றாவது காலத்தில் லிங்கோற்ப மூர்த்தியை வழிபட வேண்டும். இதனால் சிவராத்திரியின் மூன்றாவது காலம் லிங்கோற்பவ காலம் என்றே அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் சிவபெருமான் நெருப்புத்தூண் நடுவில் இருந்து மான், மழு அபயவரத முத்திரைகளுடன் உருவம் தாங்கி அருள்பாலித்தார்.
லிங்கம் என்ற சொல்லுக்கு உருவம் என்பது பொருள். உருவம் தாங்கி சிவபெருமான் வெளிப்பட்டு அருள்பாலித்ததால் இது லிங்கோத்பவம் என அழைக்கப்படுகிறது. இது சிவலிங்கமூர்த்தியின் மையத்தில் அழல் போன்ற பிளவில் தனித்த சந்திரசேகரமூர்த்தி எழுந்தருளியிருக்க லிங்கத்தின் வலப்புறம் பிரம்மதேவனும், இடப்புறம் திருமாலும் கைகூப்பி நிற்கின்ற நிலையாகும். பிளவினைச் சுற்றி அக்கினிச் சுடர்கள் காட்டப்படுகின்றன. பெருமானின் பாதமும், உச்சியும் காட்டப்படுவதில்லை. இதன் மூலம் முதலும் முடிவற்ற நிலையில் அவர் இருப்பது சுட்டப்படுகின்றது.
லிங்கத்தின் கீழ்ப்பகுதியில் பன்றி வடிவில் திருமாலும், உச்சியில் அன்ன வடிவில் (அல்லது அன்னத்தின் மீது அமர்ந்தவாறு) பிரம்மதேவனும் பெருமானின் அடிமுடிதேடும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும் வலப்பகுதியில் பிரம்மதேவனும் இடப்புறம் திருமாலும் அவரை வழிபடும் பாவனையில் கூப்பிய கரங்களுடன் உள்ளனர்.
இம்மூர்த்தியை புராணங்களும் கல்வெட்டுகளும் ‘‘லிங்கபுராணமூர்த்தி’’ என்றே குறிப்பிடுகின்றன. சிவாலயத்தில் இவருக்கான இடம் கருவறையின் பின்புறம் அமையும் மாடமாகும். ஆலயத்தின் மற்ற இடங்களில் லிங்கோற்பவ மூர்த்தியை வைக்கும் வழக்கம் இல்லை. இச்சிலையமைப்பில் காலப்போக்கில் ஏற்பட்ட சிலபுராண மாறுதல்களால் லிங்கத்தின் இடைப்பகுதியில் தாழம்பூவும் உச்சியில் கொன்றை மலர்க் கட்டும் காட்டப்படுகின்றன.
‘‘லிங்கபுராணத் தேவரான’’ லிங்கோற்பவரை கல் திருமேனியாக எழுந்தருளி வைப்பதே வழக்கமாகும். என்றாலும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் மனைவியால் செய்தளிக்கப்பட்ட உலோகத் திருமேனியிருந்ததை கல்வெட்டு குறிக்கின்றது.
சிவபெருமான், அவரை வழிபட்டு அருள் பெறும் பிரம்மன், திருமால் ஆகிய மூர்த்திகள் அவர்களின் அவதாரமான பன்றி, அன்னம் ஆகிய வடிவங்களைக் கொண்டிருந்ததால் இம் மூர்த்தம் லிங்க புராணதேவர் என்றே அழைக்கப்பட்டது.
சிவராத்திரியின் மூன்றாம் காலத்தில் இந்த மூர்த்திக்கு நெய்பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளித் துணிகள் அணிவித்து தாழைமடல்களால் அலங்கரித்து, எள்ளன்னம் நிவேதிக்க வேண்டும் என்பர். ஆகமங்களில் சொல்லப்பட்ட வகையில் லிங்கோற்பவரை பல்லவர்கள் கண்ட காஞ்சிக் கலைக்கோயில்கள் அனைத்திலும், வடஆற்காடு மாவட்டம் குடிமல்லூரிலும் காணலாம்.
சிவராத்திரியானது மாதசிவராத்திரி, யோகசிவராத்திரி, நித்யசிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, மாகசிவராத்திரி, (மகாசிவராத்திரி) என ஐந்து வகைப்படும்.
மகாசிவராத்திரி என்பது மாசிமாதத் தேய்பிறைச் சதுர்த்தசியில் வருவதாகும். இதனை வருஷ சிவராத்திரி என்றும் மகாசிவராத்திரி என்றும் அழைப்பர்.
யோக சிவராத்திரி என்பது திங்கட்கிழமை காலை முதல் 60 நாழிகை அமாவாசை இருப்பது அல்லது திங்கட்கிழமை அஸ்தமனம் முதல் செவ்வாய் காலைவரை தேய்பிறை சதுர்த்தசி இருப்பதுமாகும். இதனை வார சிவராத்திரி எனவும் கூறுவர். திங்கட்கிழமை இரவு நான்காம் சாமத்தில் அரைநாழிகை தேய்பிறை சதுர்த்தசி இருந்தாலும் அதுவே யோகசிவராத்திரியாம். இதனை அனுஷ்டிப்பதால் மூன்றுகோடி சிவராத்திரியை அனுஷ்டித்த பலன் கிடைக்கும்.
நித்ய சிவராத்திரி என்பது ஓராண்டு முழுவதும் உள்ள வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தசி நாட்களில் வரும் இரவுகளாகும்.
பக்ஷசிவராத்திரி என்பது தை மாதத்திய தேய்பிறைப் பௌணர்மி நாளில் தொடங்கி பதின்மூன்று நாட்கள் ஒரு வேளை உணவுண்டு 14ம் நாளாகிய சதுர்த்தசியில் முழுமையாக இரவு கண்விழித்து உபவாசம் இருந்து நோற்பதாகும்.
ஸ்ரீ மாதசிவராத்திரி என்பது ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு திதிகளை ஒட்டி அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி விரதமாகும். இதன்படி ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி தினங்கள் மாறி மாறி வரும்.
இவ்வாறு வரும் ஒவ்வொரு மாத சிவராத்திரியிலும் ஒவ்வொரு வகையான தேவர்கள் சிவபிரானை அர்ச்சித்து அருள் பெற்றுள்ளார்கள். சிவபெருமான் நந்தியம் பெருமானுக்கு சிவராத்திரியின் பெருமைகளை உபதேசிக்க அதை அவர் மற்றவர்களுக்கு உபதேசிக்க அதனைக் கடைபிடித்து பேறு பெற்றவர்கள் புராண காலத்திலிருந்தே அநேகம்பேர் உண்டு.
சதுர்த்தசித் திதியானது ஒரு நாளில் இடம் பெற்றிருக்கிற நேரத்தைப் பொறுத்து சிவராத்திரி மூன்று வகையாக அழைக்கப்படுகிறது. இவை உத்தமசிவராத்திரி, மத்திமசிவராத்திரி, அதமசிவராத்திரி என்பனவாகும்.
உத்தமசிவராத்திரி :
சூரியன் அஸ்தமிக்கும்போது திரயோதசி நீங்கி சதுர்த்தசி வந்து, அந்தத் திதி அன்றிரவு முழுவதுமும் நீடித்திருந்து மறுநாள் பகல் முழுவதும் தொடர்ந்து இருப்பின் அதுவே உத்தமசிவராத்திரியாகும். சூரியன் அஸ்தமித்த பின்னும், இரவின் பத்துநாழிகைக்கு முன்னும் சதுர்த்தசி வந்தாலும் அது உத்தம சிவராத்திரியாகும்.
மத்திம சிவராத்திரி:
காலை தொடங்கி, மறுநாள் உதயம்வரை அதாவது, அறுபது நாழிகை அளவும் சதுர்த்தசி நிலவுதல், சூரியன் அஸ்தமனத்திற்கு முன்னரே வரும் சதுர்த்தசி, இரவின் பத்து நாழிகைக்குப் பின்னர் வரும் சதுர்த்தசி ஆகிய இரவுகள் மத்திம சிவராத்திரி என்று என்றழைக்கப்படும்.
அதம சிவராத்திரி:
இரவின் இருபது நாழிகை அளவு சதுர்த்தசி இருந்து, அதன் பின்னர் அமாவாசை வந்தால் அந்த இரவு அதம சிவராத்திரி ஆகும். இதனை வழிபாட்டிற்கு ஏற்கக் கூடாது. இந்நாளில் விரதம் அனுட்டித்தால் புண்ணியத்திற்கு பதில் பாவமும், நரகமும் வந்து சேரும்.
திரயோதசியைச் சக்தி வடிவமாகவும் சதுர்த்தசியை சிவபெருமானாகவும் கொள்ளுவர். இத்திதிகள் சேர்ந்த இரவு சிவலிங்க வடிவமானதாகும். அமாவாசையோடு கூடிய சதுர்த்தசி வைதீகர்களுக்கும், சன்னியாசிகளுக்கு மட்டுமே உரியது. இந்நாளில் சுத்த சைவர்கள் விரதமிருக்க மாட்டார்கள்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post ஸ்ரீ மாதசிவராத்திரி விரதமும் வழிபாட்டு காலங்களும் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.