கோபுர தரிசனம் கோடி புண்ணியம் சோகங்கள் போக்கும் ஸ்ரீசோமநாதேஸ்வரர்
சந்திரன் வழிபட்ட சிவத்தலங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. அவற்றில் வேலூர் மாவட்டத்திலுள்ள மஹேந்திரவாடியும் ஒன்று. சந்திரன் வழிபட்ட காரணத்தினால், இத்தலத்திலுள்ள ஈசனின் பெயர் ஸ்ரீ சோமநாதேஸ்வரர். சில தலங்களில் சந்திரன் வழிபட்ட லிங்கங்கள் சோமேஸ்வரர், சந்திர சூடேஸ்வரர், சந்திரசேகரர், என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன.
சந்திரன் வழிபட்ட தலங்களின் பெயர்கள் கூட, சந்திரனைக் குறித்தே, சில தலங்களில் அமைந்திருக்கின்றன. குறிப்பாக நவக்கிரஹத் தலங்களில் ஒன்றான திங்களூர், புதுச்சேரிக்கருகில் உள்ள பிறையூர், சென்னைக் கருகேயுள்ள சோமங்கலம், வடக்கேயுள்ள சோம்நாத்பூர்.
புராணம்:
அசுவனி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங் களும் தக்ஷனுடைய குமாரத்திகள். அவர்களை சந்திரனுக்குத் திருமணம் செய்து வைத்தான் தக்ஷன். தன்னுடைய மனைவிகளில் கார்த்திகை, ரோஹிணி ஆகிய இருவரிடம் மட்டுமே சந்திரன் அன்பு செலுத்தினான். மற்றவர்களை வெறுத்து ஒதுக்கினான். இதனால் கோபம் கொண்ட மற்ற பெண்கள் தன்னுடைய தந்தை யிடம் முறையிட்டனர்.
இதன் விளைவாக தக்ஷனின் சாபத்திற்கு இலக்கானான் சந்திரன். அழகு நிரம்பிய சந்திரன், அழகு குன்றி, அமுதகலைகள் தேய்ந்து, ரோகத்தினால் வாடினான், தனக்கு ஏற்பட்ட கஷ்டங் களை, ஈசனால் மட்டுமே தீர்க்கமுடியும் என்று நம்பிய சந்திரன் ஈசனைத் தொழுது முறையிட்டான்.
மனம் மகிழ்ந்த ஈசன், மூன்றாம் பிறையளவு இருந்த சந்திரனைத் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரன் ஆனார். திரும்பவும் சந்திர னின் கலைகள், ஈசனின் அருளால் வளரத் தொடங்கின. தக்ஷனின் சாபத்தினால் தேய்பிறையும், ஈசனின் அருளினால் வளர்பிறையும் ஏற்பட்டன.02
முதலாம் மஹேந்திரவர்மன் பல்லவ குல திகலகமான முதலாம் மஹேந்தி ரவர்மன் கி.பி.7ம் நூற்றாண்டில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு, அரசாண்டான் சிறிது காலம் சமணமதத்தில் இவன் இருந் திருந்தாலும், பிறகு மதம் மாறி, சைவனாக இருந்து பல கோயில்களைக் கட்டினான். கி.பி.600 முதல் கி.பி 630வரை இவன் அரசாட்சி, செய்தான் இவன் சிற்பக்கலை இசைக்கலை, ஓவியக்கலை, காவியக்கலை முதலிய கலைகளில் தேர்ச்சி பெற்றவன்.
அழிவில்லாத இறைவனுக்கு, அழிவில்லாத கோயில் எழுப்ப வேண்டும் என்ற கருத்தில் செங்கலும், சுண்ணாம்பும் கலந்து கோயில் கள் கட்டிய நிலையை மாற்றி, மலையைக் குடைந்து கோயில் கட்டிய மாமன்னன் இவன். இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த அரசன் தன்னுடைய படைகளை தங்க வைக்க ஒரு ஊரை ஏற்படுத்தினான். அந்த ஊருக்கு ‘மஹேந்திரபாடி’ என்ற பெயர் வைத்தான். ‘பாடி’ என்றால் படைகள் தங்கியிருந்த இடம். அவ்வூர் மக்கள் வழக்கில் இன்று மஹேந்திரவாடி என்று அழைக்கப் படுகிறது. இங்கு மஹேந்திரவர்மனால் ஒரு குடைவரைக்கோயில் எழுப்பப்பட்டது. அதற்கு ‘மஹேந்திர விஷ்ணுக்கிரஹம்’, என்று அவன் பெயரிட்டான். இவ்வூரில் அந்த மாமன்னன் ஒரு ஏரியை உண்டாக்கினான். அந்த ஏரிக்கு, பாலாற்றிலிருந்து ஒரு கால்வாய் ஏற்படுத்தி நீரை வரவழைத்தான். அந்த ஏரிக்கு ‘மஹேந்திரதடாகம்’ என்று பெயரிட்டான். ஆனால் இந்த ஊரில் உள்ள ஸ்ரீ சோம நாதேஸ்வரர் கோயில் பிற்காலப் பல்ல வர்களால் கற்களால் கட்டப்பட்டது.
ஸ்ரீ சோமநாதேஸ்வரர் கோயில்:
இக்கோயில் ஊரில் நடுநாயகமாக உள்ளது. கோயிலைச்சுற்றி ஆக்ரமிப்பு கள். கோயிலைத் தேடிக்கண்டுபிடிப் பதே சிறிது கஷ்டம்தான். ஈசனின் கருவறை கிழக்கு நோக்கியுள்ளது கோயிலின் வாயிலுக்கு முன்புறம் விளக்கு ஏற்றும் ஒரு கல்தூண் உள்ளது. நந்தியெம் பெருமானையும் தூணுக்கு முன்புறம் உள்ள மண்டபத் தில் தரிசிக்கலாம். வடக்குப்புறம் சந்திர புஷ்கரணி உள்ளது. இதில் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
கருவறையில் ஈசன் ஸ்ரீ சோமநாதேஸ்வரர் சற்றுப் பருத்த பாணத்துடன் அழகுறக் காட்சியளிக்கிறார். கருவறை முன் மண்டபத்தில் தெற்கு நோக்கி அன்னை ஸ்ரீ காமாட்சியைத் தரிசிக்கலாம். மண்டபத்தின் மேற்குப்புறத்தில் ராகு, சந்திரனைப் பிடிப்து போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. நமக்கு வலப்புறம் அரசனும் அரசியும் இறைவனை தொழுவது போன்ற ஒரு சிற்பம் உள்ளது.
திருச்சுற்றில் முதலில் அஞ்சனை மைந்தனை தரிசிக்கலாம். அடுத்து சந்திரனின் சந்நிதி, தென்மேற்கு மூலையில் கணபதி தரிசனம். அடுத்து வள்ளி, தெய்வானையுடன், ஆறுமுகப் பெருமாளை தரிசிக்கிறோம். பன்னிரு திருக் கரங்களுடன், ஆறுமுகங்களுடன் அந்த கோல மயில் முருகன். மயில் மீது வீற்றிருக்கிறான். அடுத்து ஐயப்பனுக்கு தனிச் சந்நிதி உள்ளது.
கோட்ட மூர்த்திகளில் முதலில் தெற்கு நோக்கிய தக்ஷிணாமூர்த்தியும், மேற்குப் பார்த்து பெருமாளும், வடக்குப் பார்த்து துர்க்கையும் அருளாட்சி புரிகின்றனர். சண்டிகேஸ்வரருக்கு, தனிச்சந்நிதி உள்ளது. வட கிழக்கில் பைரவருக்கு தனிச்சந்நிதி. அடுத்து முனீஸ்வரரை ஒரு சந்நிதியில் தரிசிக் கிறோம். அங்கே ஒங்கி வளர்ந்த அரசமரங்கள் இரண்டு உள்ளன. அத்துடன் வேம்பும் இணைந் திருப்பது வந்து தரிசனம் செய்பவர்களுக்கு சுத்தமான காற்றைத் தந்து உதவுகிறது. மரத்தடியில் நாகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள் ளன. இக்கோயிலுக்கு, 8.11.2010இல் சீரும் சிறப்புமாக குடமுழுக்கு நடந்தது.
சந்திரதோஷப் பரிகாரம்
இங்குள்ள சந்திரபுஷ்கரனியில், திங்கட்கிழமை களில் நீராடி, இறைவனுக்கு அபிஷேகம் செய்வித்து, வெள்ளை அலரி, வெள்ளை அல்லி புஷ்பத்தினால் அர்ச்சித்து, சந்திர கிரஹ மந்திரங்களை ஜபித்து தயிர் சாதத்தை நிவேதனம் செய்தால் சந்திர தோஷம் நீங்கும். மேலும் இத்தலத்தில் நாகதோஷப் பரிகாரமும் செய்து கொள்ளலாம்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் சோகங்கள் போக்கும் ஸ்ரீசோமநாதேஸ்வரர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.