தேவர்களின் யாகத்தால் மகிழ்ந்த அம்பிகை, யாக குண்டத்திலிருந்து வெளிப்பட்டு, பண்டனால் சீரழிந்த சிருஷ்டியை புனரமைத்தாள்.
இனி : யாகத்திலிருந்து தோன்றிய தேவியை தேவர்கள் பலவாறாக போற்றி பணிந்தனர். அந்த அரிய துதியினை இப்போது காண்போம்.
லலிதா ஸ்தவராஜம்
(பதிவின் நீளம் கருதி, ஸ்லோகத்தினை பதிக்கவில்லை. விளக்கம் மட்டும் பதிவிடப்படுகிறது)
தேவி !! ஜகன்மாதாவே !! பரவஸ்துவிலும் பரமானவளே !! மங்களங்களின் இருப்பிடமே !! காமகலா ஸ்வரூபிணீ !! வாமாக்ஷீ !! காமாக்ஷீ !! விரும்பியதை அருள்பவளே !!
பிரம்ம ஸ்வரூபிணீ !! பிரம்மானந்தமாய் விளங்குபவளே !! நாராயணீ !! பரே !! சகல லோகங்களையும் சந்தோஷம் கொள்ள செய்பவளே !!
ஸ்ரீகண்டனுக்கு பிரியமானவளே !! ஸ்ரீலலிதாம்பிகையே !! ஸ்ரீவிஜயே !! தேவீ !! விஜயலக்ஷ்மியையும், ஸம்ருத்தியையும் அளிப்பவளே !! நின்னை போற்றி வணங்குகிறோம் !!
உண்டானதற்கும், உண்டாகப் போவதற்கும், யக்ஞ, யாகாதிகளுக்கும், புண்ணிய காரியங்களுக்கும் காரணமானவளே !! மூவுலகையும் காத்து ரட்சிப்பவளே !! நின்னை போற்றி வணங்குகிறோம் !!
கலை(1 நிமிடம், 48 விநாடிகள்), முகூர்த்தம்(48 நிமிடங்கள்), காஷ்டை(1/30 கலை) போன்ற கால வடிவானவளே !! ஆயிரக்கணக்கான முகம், கரங்கள் மற்றும் கால்களை உடையவளே !! நின்னை போற்றி வணங்குகிறோம் !!
அணுவிலும் அணுவாய், பெரிதிலும் பெரிதாய், பரத்திலும் பரமாய், தேஜஸ்ஸிற்கு தேஜஸாக விளங்குபவளே !!
அதலம் : உனது கால்கள்; விதலம் : முழங்கால்; ரஸாதலம் : இடுப்பு; பூமி : வயிறு; புவர்லோகம் இதயம்; ஸ்வர்க்கம் : முகம்;
கண்கள் : சந்திர, சூரிய, அக்னி; திக்குகள் : கரங்கள்; காற்று : மூச்சு; வாக்கு : வேதங்கள்;
விளையாட்டு : உலக சிருஷ்டி; தோழன் : சின்மய சிவன்; ஆகாரம் : ஸதானந்தம்; இருப்பிடம் சாதுக்களின் இதயம்;
காண்பதும், காணாததுமான புவனம் : உனது ரூபம்; கேசம் ஆகாயம்; நட்சத்திரங்கள் :புஷ்பம்;
தர்மாதிகள் : கைகள்; அதர்மம் : ஆயுதம்; இயம, நியமங்கள் : விரல்கள்; ஸ்வாஹா, ஸ்வதா உலகை போஷிக்கும் ஸ்தனங்கள்;
பிராணாயாமம் : மூக்கு; நாக்கு : சரஸ்வதி; தியானம் : புத்தி; உடல் ரோமங்கள் : மரங்கள்; உதயம் : வஸ்திரம்; மூன்று காலங்கள் : நித்ய சரீரம், யக்ஞ ரூபே !! ஜகத்தை தாங்குபவளே !! சகலத்திற்கும் ஆதாரமாக விளங்குபவளே !! அனைவரது உள்ளத்திலும் நீ இருந்தாலும், அனைவராலும் அறியப்படாதவள்.
மோகன சக்தி கொண்டவளே !! நாம ரூபமான உலகைப் படைத்து, அதில் பற்றில்லாமல் நிற்பவளே !! நின்னை போற்றி வணங்குகிறோம் !!
மஹாதேவியாக, சர்வசக்தியாக, பரசக்தியாக, பரபிரம்மமாகவும், பிரம்மானந்தமாகவும் திகழும் தாயே !! நின்னை போற்றி வணங்குகிறோம்.
தனது ஆக்ஞையால் பஞ்ச பூதங்களை உலகிற்கு பயன்படுமாறு செய்பவளே !! பிரம்மனை படைத்து, ஆதியில் பூமியை தரித்தவளே !! தன்னிடமிருந்து சூரியனை உதிக்கச் செய்யும் தாயே !! நின்னை போற்றி வணங்குகிறோம்.
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 27) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.