பண்டனின் ஆணைப்படி குடிலாக்ஷன் என்னும் சேனாதிபதி சூன்யக நகரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தான்.
துர்மதன் என்னும் அசுரவீரனை தேவியுடன் போர் செய்ய அனுப்பினான். அவனையும், சேனைகளையும் சம்பத்கரீ தேவி கொன்றொழித்தாள்.
இனி : குருண்டன் வதம் சம்பத்கரீ தேவியால் துர்மதன் அழித்ததை கேட்ட பண்டன், கோபத்தினால் கத்தியை உதறி, குடிலாக்ஷனை பார்த்து,
“தேவராலும், அசுரராலும் வெல்ல முடியாத நமது துர்மதன் கேவலம் அபலையான அந்த துஷ்டையால் எப்படி கொல்லப்பட்டான்?”
“இது நிச்சயம் தெய்வச் செயலே !! சரி, அவளை ஜெயித்து இங்கே இழுத்து வரும் படி, மாய மற்றும் கபட யுத்தத்திலும் சிறந்து விளங்கும் துர்மதனின் சகோதரனாகிய குருண்டனை அனுப்பு” என்றான்.
துர்மதனின் சகோதரனான குருண்டன் மிகவும் சோகமாகவும், கோபமாகவும் ரணகளம் சென்று, எண்ணிறந்த பாணங்களை சக்திகளின் மீது வர்ஷித்தான்.
அன்றியும் சம்பத்கரீ தேவியை நோக்கி, “ஏய் பாபியே !! என் தம்பியை கொன்று வீணாக கர்வம் கொள்ளாதே, இந்த கணமே, உன்னை யமலோகம் அனுப்புகிறேன்.”
“அதி மிருதுவான உனது உடலிலிருந்து பெருகுகின்றதும், ரணகளத்தில் மிக அபூர்வமானதுமான ஸ்த்ரீயின் உதிரத்தை ரணபூதனைகள் பருகட்டும். இதோ எனது பாஹூபலத்தை பார் !!” என தனது சேனைகளை உற்சாகப்படுத்தினான்.
அவனது பரிவாரத்தை அழிக்க சக்திகள் கிளம்பிய போது, அஸ்வாரூடா தேவி அங்கு வந்து, “சகி சம்பத்கரீ !! இவனோடு நான் யுத்தம் செய்ய எனக்கு அனுமதி கொடு. ஒரு க்ஷணத்தில் இவனை கொல்கிறேன். தோழியான என் வேண்டுகோளை மறுக்காதே” என்றாள்.
இதைக் கேட்ட சம்பத்கரீ தேவி, புன்னகையுடன் தனது சேனைகளை திருப்பி விட்டாள்.
கடலின் அலை போல அதிவேகமான குதிரைகளின் மீதேறிய சக்திகள் பலர் சூழ, அஸ்வாரூடா தேவி அசுரனுடன் சமர் செய்ய கிளம்பினாள்.
குருண்டனின் தூண்டுதலால், அசுரர்கள் பூரண பலத்துடன் சக்திகளை தாக்க, அவர்களும் அசுரர்களை தாக்க மிக பயங்கர யுத்தம் தோன்றியது.
அஸ்வாரூடா தேவி, தனது அபராஜிதம் என்னும் அஸ்வரத்னத்தின் மீதமர்ந்து, அவளது பின்னல் அசைய, சந்திர கலை ஜ்வலிக்க, மணிவில்லை கையிலெடுத்து பொற்பிடிகளுள்ள சரங்களை வர்ஷித்தாள்.
கோபம் கொண்ட குருண்டன், தேவி மீது பல பாணங்களை வர்ஷித்தான்,தேவியின் குதிரை தனது கூரிய குளம்புகளால் பல அசுரர்களை கொன்றது. தனது கர்ஜனையால் பலரை மூர்ச்சை அடையும் படி செய்தது.
தேவி தனது திவ்யமான பாச ஆயுதத்தை பிரயோகிக்க அதிலிருந்து பாம்பு போல பல்லாயிரம் பாசங்கள் தோன்றி பகைவர்களை கட்டி மூர்ச்சை அடைய செய்தது.
தனது சேனை கட்டுண்டதை கண்ட குருண்டன் தேவியின் மணிமய வில்லின் நாணை அறுத்தான்.
சினங்கொண்ட தேவி, வில்லை எறிந்து விட்டு அங்குசத்தினால் அவன் மார்பை பிளந்தாள். இடி விழுந்த மரம் போல் குருண்டன் பூமியில் வீழ்ந்து இறந்தான்.
அந்த அங்குசத்திலிருந்து தோன்றிய சில பூதனைகள் பாசத்தால் கட்டுண்ட பகைவரை புசித்தனர்.
இதில் தப்பி பிழைத்த சிலர் 20 அக்ஷௌஹிணி சேனைகளுடன் குருண்டன் கொல்லப்பட்டதை பண்டனிடம் கூறினர்.
இதை கேட்ட பண்டாசுரன் சர்ப்பம் போல பெருமூச்சு விட்டான்.
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 39) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.