பண்டாசுர வதத்திற்குப் பிறகு மும்மூர்த்திகளும் காமேஸ்வரர் மற்றும் லலிதாம்பிகைக்கு 16 க்ஷேத்ரங்களில் ஆலயம் அமைக்க விஸ்வகர்மாவையும், மயனையும் பணித்தனர்.
இனி : இரும்பு கோட்டை வர்ணனையை கண்டோம்.
2. வெண்கல கோட்டை
இரும்புக் கோட்டைக்கு ஏழாவது யோஜனை தூரத்தில் முற்கூறிய லக்ஷணங்களுடன் நான்கு துவாரங்களும், மகுடங்களும், கோபுரங்களும் நிறைந்த வெண்கல கோட்டை அமைந்துள்ளது.
இரும்புக் கோட்டைக்கும், வெண்கலக் கோட்டைக்கும் இடையில் உள்ள இடங்கள் பலவகையான மரங்கள் அடர்ந்த “நாநாவிருக்ஷ மஹோத்யாநம்” என்று அழைக்கப்படுகிறது.
உலகில் எவ்வளவு செடி, கொடிகள் உண்டோ அவ்வனைத்தும் அங்கே இருக்கிறது.
இந்த வனத்தில் வண்டுகளும், மயில், குயில், கிளி முதலிய பக்ஷிகளின் கூட்டங்களும், செந்தாமரை, வெண்தாமரை, செங்கழுநீர், நீலோத்பலம் போன்ற புஷ்பங்கள் நிறைந்த நீரோடைகளும்
அவைகளை ஒட்டினாற் போல் மாட, மாளிகை, கூட கோபுரங்கள் மிகவும் உன்னதமாக இருக்கிறது.
தேவியின் சிருங்காரத்திற்கு காரணமான எல்லா ருதுக்களும் ஒன்று சேர்ந்து எல்லா புஷ்பங்களையும் அளிக்கிறது.
3. தாமிர கோட்டை
வெண்கல கோட்டைக்கு ஏழு யோஜனை தூரத்தில் ஏழு யோஜனை உயரமுள்ள சதுரச்ரமான தாமிர கோட்டை இருக்கிறது.
வெண்கல கோட்டைக்கும், தாமிர கோட்டைக்கும் இடையில் உள்ள பிரதேசம் “கல்பவாடிகை” எனப்படும்.
இங்குள்ள மரங்கள் கற்பூரத்தை ரசமாக உடையது. ரத்னங்களை விதையாக உடையவை.
ஸ்வர்ணத் தோலால் அழகிய பழங்களோடு கூடிய மரங்கள் ஏராளமாக தங்கள் கிளைகளின் மீது திவ்ய வஸ்திரங்களையும், பவழங்களையும் பூத்திருக்கின்றன.
4. ஈயக் கோட்டை
அதற்கு அடுத்தபடியாக மிகுந்த உயரமுடைய சிகரங்களுடன் கூடிய வெண்மையான ஈயக்கோட்டை நான்காவது கோட்டையாக உள்ளது.
இந்த கோட்டைக்கும் தாமிர கோட்டைக்கும் நடுவில் ஏழு யோஜனை தூரமுள்ளதும், சந்தன மரங்கள் நிரம்பியதும், நறுமணத்துடன் கூடிய இளந்தென்றல் வீசும் “சந்தான வாடிகை” இருக்கிறது.
இவ்விடம் கல்பவாடிகைக்கு சமமானது.
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 61) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.