இதுவரை : அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் ரத்ன கோட்டைகளின் லக்ஷணங்களை கண்டு வருகிறோம்.
இனி : மரகத கோட்டை முத்து கோட்டைக்கு ஏழாவது யோஜனை தூரத்தில் முற்கூறிய லக்ஷணங்களுடன் கூடிய மரகத கோட்டை இருக்கிறது.
அது நான்கு யோஜனை தூரம் உயரமுள்ளது. அங்கே, அக்னி முதலிய நான்கு மூலைகளிலும் மிக விஸ்தாரமான நான்கு நிலையங்கள் இருக்கிறது.
கிரிசக்ர ரத பர்வாவில் உள்ள சக்திகள் அனைவரும் இங்கு விளங்குகின்றனர். ஆங்குள்ள பிரதேசங்கள் யாவும் மரகத மயமாகவே உள்ளது.
ஆங்குள்ள சக்திகள் அனைவரும் தண்டநாதைக்கு சமமான அழகு வாய்ந்தவர்கள். அவர்கள் மிகவும் விளையாட்டாக கலப்பை, உலக்கை ஆகியவற்றை சுழற்றிக் கொண்டு சஞ்சரிக்கின்றனர்.
அன்றியும் அங்கே விசித்திரமான, இரு யோஜனை தூரம் ஓங்கி வளர்ந்த, ஸ்வர்ண மயமானதும், விசாலமான கிளைகளை உடையதும், பழக்குலைகளின் சுமையால் வளைந்ததுமான கணக்கற்ற பனைமரங்கள் இருக்கின்றன.
நான்கு மூலைகளிலும் தண்டினிக்கு எங்கெங்கு வீடுகள் உள்ளனவோ, அங்கெல்லாம் கிழக்கு முதலிய திசைகளில் உன்மத்த பைரவி, ஸ்வப்நேசீ, திரஸ்கர்ணி, கிரிபதா ஆகியோர் அவளை சேவிக்கின்றனர்.
தண்டநாதையானவள் கேவலம் அபிமானத்தினால் மாத்திரம் இங்கு வசிக்கின்றாளே தவிர, பரதேவதையின் சேவையின் பொருட்டு, தேவிக்கு அதி சமீபத்தில் உள்ள மஹாபத்மாடவியில் வசிக்கிறாள்.
பவழ கோட்டை மரகத கோட்டைக்கு ஏழாவது யோஜனை தூரத்தில் உதயகால இளஞ்சூரியனை போல செந்நிறமாய் பிரகாசிக்கும் பவழ கோட்டை இருக்கிறது.
ஆங்குள்ள ஸ்தலமெல்லாம் பவழ மயமாகவே உள்ளது. அங்கே பவழ நிற மேனியோடு கூடிய சதுர்முகன் சகல முனிவர்கள், பிரஜாபதிகளுடன் கூடி ஸ்ரீலலிதையின் தரிசனத்தை எதிர்பார்த்து வசித்து கொண்டிருக்கின்றனர்.
ஸ்ரீலலிதையின் கட்டளைப்படி பிரம்ம லோகத்திலிருந்து 14 வித்தைகளும், ஆயிரக்கணக்கான உபவித்தைகளும், 64 கலைகளும் அழகிய வடிவமேற்று லோக க்ஷேமத்திற்காக அக்கோட்டையில் வசிக்கின்றனர்.
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 69) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.