அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம்.
இனி : மாணிக்க மண்டபம் பவழக் கோட்டைக்கு ஏழாவது யோஜனை தூரத்தில் மாணிக்க மண்டபம் என்னும் ஒரு அங்கணம் இருக்கிறது. இது நாநாவித ரத்னங்களால் கட்டப்பட்டதாகும்.
இதுவும் அழகிய கோபுரங்களோடும், வாயிற்படிகளோடும் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதன் இடையில் ஸ்ரீலலிதையை பூஜிப்பதில் பேரார்வம் கொண்ட விஷ்ணு வசிக்கும் விஷ்ணு லோகம் இருக்கின்றது.
அதில் மாதவன் நான்காகவும், பத்தாகவும், பன்னிரெண்டாகவும் பிரிக்கப்பட்டுள்ள மூர்த்தி பேதங்களாக விளங்குகிறார்.
அன்றியும், பண்டாசுர மஹாயுத்தத்தில் பரதேவதையின் நகங்களிலிருந்து தோன்றிய தசாவதார நாயகர்கள் அவ்வங்கணத்தில் வசிக்கின்றனர்.
முற்கூறிய கோட்டைகளை விட இதற்கு விசேஷமாக ஏற்பட்டுள்ள சிறப்பானது மாணிக்க கற்களாலேயே ஆன மேற்கூரையே ஆகும்.
இம்மண்டபத்தில் பகவான் 12 ரூபங்களை தாங்கி அனைத்து திக்குகளிலிருந்து கொண்டு ரக்ஷிக்கின்றார்.
ஆயிரங்கால் மண்டபம் நாநா ரத்ன கோட்டைக்கு ஏழாவது யோஜனை தூரத்தில் ஆயிரங்கால் மண்டபம் ஒன்று விளங்குகிறது.
அது நாநாவிதமான ரத்ன கற்களால் இழைக்கப்பட்டும், பலவிதமான கற்பகவிருக்ஷங்களால்
அலங்கரிக்கப்பட்டு விளங்குகிறது.அங்கே குறுக்கும், நெடுக்குமாக ஆயிரம் ஆயிரம் தூண்கள் நான்கு திக்குகளிலும் விளங்குகிறது.
இம்மண்டபத்தின் மேற்கூரை ரத்ன மரங்களால் ஆனவை. அங்கு மஹா பிரகாசமான சிவலோகம் விளங்குகிறது.
அங்கே காமிகம் முதலிய 28 சிவாகமங்களும் உடலெடுத்து பிரகாசிக்கின்றன. நந்தி, பிருங்கி, மஹாகாளர் முதலிய உத்தமமான 36 தேவர்களும், ஆயிரக்கணக்கான கஜாநனர்களும் வசிக்கின்றனர்.
ஆயிரங்கால் மண்டபமான சிவலோகத்தில் சகல வித்யைகளுக்கும் அதிபதியாக ஈசானர் ஸ்ரீலலிதையின் ஆக்ஞையை பரிபாலித்து கொண்டு விளங்குகிறார்.
தனது பக்தர்களுக்கு லலிதா மந்திரம் சித்தியாகும் பொருட்டு மங்களகரமான தனது திருஷ்டியால் அவர்களுக்கு உள்ளும், புறமும் உள்ள அந்தகார கூட்டத்தை ஒழிப்பதில் சமர்த்தராய் விளங்கி கொண்டு இருக்கிறார்.
ஹயக்ரீவர் : ஓ அகத்தியரே! இங்ஙனம் காரணகிருத்ய இந்திரர்களான பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரர்கள் ஸ்ரீதேவியின் மீது பக்தி நிறைந்தவர்களாய் அந்தந்த கோட்டைகளை ஆச்ரயித்து வருகின்றனர்.
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 70) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.