அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரியின் லீலைகளை விளக்கும் ஸ்ரீலலிதோபாக்யானம் நூல் பாராயணத்தின் பலன்களை கண்டு வருகிறோம்.
இனி : பலச்ருதி – தொடர்ச்சி
ஹயக்ரீவர் : மஹா பாவிகளும் சிரத்தையுடன் இந்த சரிதத்தை சிரவணஞ் செய்தால் சர்வ பாவங்களிலிருந்தும் விடுபடுவர்.
புண்ணிய தீர்த்தங்களிலும், பூஜா காலங்களிலும், விஷு புண்ணிய காலத்திலும், அயநங்களிலும், பஞ்ச பர்வாக்களிலும், ஜன்ம நட்சத்திரத்திலும்,புண்ணிய தலங்களிலும், ராஜ்யத்திற்கு ஆபத்து உண்டாகும் காலத்திலும், நோய் பீடிக்கும் போதும், மாரியாலும், திருடராலும் பயம் ஏற்பட்ட போதும்,எவர் இதை படிக்கிறார்களோ, அவர்கள் அந்த துன்பங்களிலிருந்து விடுபடுவர்.
முனிவரே! திவ்யமான ஸ்ரீலலிதோபாக்யானம் என்னும் அமிர்தமானது தேவி மாஹாத்மியம் என்றும் கூறப்படுவதாகும்.
ஆதலால் பிரம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் கூறப்பட்ட இதனை தேவி உத்சவ காலங்களில் அவசியம் பாராயணம் செய்ய வேண்டும்.
மூவுலகிலுள்ள சகல தேவிகளும் ஸ்ரீலலிதாம்பிகையின் வடிவாகவே இருப்பதால், அந்தந்த தேவி பூஜை காலங்களில் இதனை பாராயணம் செய்யாவிடில் அவர்கள் மிக்க கோபம் கொள்வார்கள்.
விசேஷமாக துர்க்கையின் மஹோத்சவ காலத்தில் தேவியின் சந்தோஷத்தின் பொருட்டு, இதனை பாராயணம் செய்ய ஒரு பிராமணனை நியமிக்க வேண்டும்.
அல்லது திருட சித்தமுள்ளவனாய் தானே ஸ்ரீதுர்க்கையின் சந்நிதியில் இதை படிக்க வேண்டும். இந்த பாராயணம் சகல சித்திகளையும் அளிக்க வல்லது.
அசுத்தனாகவோ, சுத்தனாகவோ, அமர்ந்தோ, நின்றோ, எந்த நிலையிலோ இந்த சரிதத்தை படிப்பவர் சர்வ பாவங்களிலிருந்தும் விடுபடுவர். இதை விட உயர்ந்தது வேறொன்றுமில்லை.
இந்த ஸ்ரீலலிதோபாக்யானத்தை ஒருமுறை பாராயணம் செய்வது சண்டிகா தேவியின் சரிதத்தை கோடி முறை பாராயணம் செய்த பலனுக்கு சமமான பலன் உண்டாகும்.
குற்றமற்ற குணம் வாய்ந்தவர், சகல துக்கங்களையும் அகற்றுவதுமான இந்த சரிதத்தை படித்தால் மெய் ஞான தீபத்தினால் பிரகாசிக்கும் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியை அடைந்து, மனதில் சதா பேரானந்தத்தை பெறுவர்.
பிரம்மாண்ட புராணத்தில் உத்திர காண்டத்தில் ஸ்ரீஹயக்ரீவ அகஸ்திய சம்வாதத்தில் ஸ்ரீலலிதோபாக்யானம் நிறைவுற்றது.
நன்றியுரை :
இவ்வரிய அற்புதமான பதிவினை எழுத எங்களை தேர்ந்தெடுத்து அதை பிழையற பதியவும் அருளிய அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையின் திருவடிகளில் இதனை மலர்களாக சமர்ப்பிக்கின்றோம்.
இத்தொடர் பதிவிற்கு ஆதரவளித்த அனைத்து பக்தகோடிகளுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மற்றுமொரு அழகிய பதிவில் தங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெற்று கொள்கிறோம்.
நன்றி ! நன்றி ! நன்றி !
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 87) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.