திருநெல்வேலி மாவட்டம் திரிகூட மலை என்னும் குற்றாலத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு குழல்வால் மொழி பராசக்தியுடன் (இரண்டு அம்மன்) குற்றாலநாதர்(kutralanathar) என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார். இவரை நோய்கள் உள்ளவர்கள் குற்றாலத்தில் நீராடி வழிப்பட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் தீராத தலைவலி உள்ளவர்கள் சிவனை வழிப்பட்டு தைலம் பிரசாதமாக பெற்று செல்கின்றனர். இதை தலையில் தேய்த்து கொண்டால் தலைவலி தீரும் என்பது நம்பிக்கை. நேர்த்திகடன் நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு வஸ்திரம்(vasthiram) சார்த்தி பக்தர்கள் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர்.
தலவிருச்சம் – குறும்பலா
தீர்த்தம் – சிவ மதுகங்கை, வடஅருவி – சித்ரா நதி
தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் இது 63-வது தலம் ஆகும்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் 64 சக்தி பீடங்களில் இது பராசக்தி பீடமாகும்.
இத்தலத்தில் உள்ள தல மரம் லிங்க வடிவ பாலச்சுளைகளாக காய்க்கிறது. எல்லா நாட்களிலும். பலா காய்த்து கொண்டு இருக்கும்.
இந்த பலாவில் உள்ள சுளைகள் லிங்கத்தின் வடிவில் இருப்பது கலியுக அதிசியம்.
குற்றாலம் பெயர் வந்தது எப்படி:
கு என்றால் பிறவிப்பிணி ‘தலம்” என்றால் தீர்ப்பது என்று பொருள் இத்தலத்தை வழிப்பட்டால் இம்மையும், மறுமையும், உள்ள பிறவிப்பலன் கிடைக்கும்.
சிவன் பார்வதியை மணந்தபோது, உலகை சமப்படுத்த அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். குற்றாலம் வந்த அகத்தியர் சிவலிங்க பூஜை செய்ய விரும்பினார். ஓரிடத்தில் பெருமாள் கோயில் இருந்ததைக் கண்டார். மூலஸ்தானத்தில் இருந்த பெருமாளின் தலை மீது கை வைத்து, ‘குறு குறு குற்றாலநாதா!’ என்றார். பெருமாள் குறுகி, சிவலிங்கமாக மாறினார். இவரே இங்கு, ‘குற்றாலநாதர்’ என்ற பெயரில் அருளுகிறார். ‘ஹரியும், சிவனும் ஒன்று!’ என்பதை உணர்த்தும்விதமான இரு மூர்த்திகளும் அகத்தியர் மூலமாக இவ்வாறு ஒரு திருவிளையாடலை இத்தலத்தில் நிகழ்த்தியதாக வரலாறு.
குற்றாலநாதர் கோயிலுக்கு அருகில் நடராஜர் நாட்டியமாடும் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபை இருக்கிறது. இந்த சபையில் நடராஜர், ஓவிய வடிவில் திரிபுரதாண்டவ மூர்த்தியாக காட்சி தருகிறார். பெருமாளை சிவனாக மாற்றிய வரலாறு, மதுரையில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள், தட்சிணாமூர்த்தியின் பல்வேறு வடிவங்கள் என பல சித்திரங்கள் மூலிகைகளால் வரையப்பட்டுள்ளது.
தாண்டவ தீபாராதனை:
மார்கழி திருவாதிரையின்போதும், சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போதும் நடராஜர் சன்னதியில் விசேஷ தீபாராதனையுடன் பூஜை நடக்கும். இவ்வேளையில் நடராஜரின் நடனத்தைப் போலவே தீப தட்டை நளினமாக அசைத்து சுவாமிக்கு ஆராதனை செய்வர். இதை, ‘தாண்டவ தீபாராதனை’ என்கின்றனர். சிவன், ஜோதி ரூபமானவர் என்பதை உணர்த்தும்விதமாக இவ்வாறு செய்யப்படுகிறது. பிரகாரத்தில் மகாவிஷ்ணு, ‘நன்னகரப் பெருமாள்’ என்ற பெயரில் அருளுகிறார்.அருகில் கிருஷ்ணரும் இருக்கிறார். ரோகிணி நட்சத்திர நாட்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. முற்காலத்தில் சிவன் சன்னதியில் இருந்த பெருமாளே, இங்கு எழுந்தருளியிருப்பதாகச் சொல்கிறார்கள். இங்கு மூலவருக்கு கஷாய நைவேத்யம் செய்யப்படுகிறது. தினமும் அர்த்தஜாம பூஜையின் போது சிவனுக்கு, கடுக்காய் கஷாயம் நைவேத்யம் படைக்கின்றனர். சுக்கு, மிளகு, கடுக்காய் உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து ‘கஷாயம்’ தயாரிக்கப்படுகிறது. ஆடிஅமாவாசையன்று கோயில் முழுவதும் 1008 தீபம் ஏற்றும், ‘பத்ர தீப’ விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கும். சிவன், மணக்கோலநாதர் என்று பெயரில், அம்பிகையை மணம் முடித்த கோலத்தில் பிரகாரத்தில் காட்சி தருகிறார்.
அருவியில் நீராடி குற்றாலநாதரை தரிசித்தால்:
அருகில் திருமணத்தை நடத்தி வைத்து பிரம்மா, தாரை வார்க்கும் கோலத்தில் விஷ்ணு, மகாலட்சுமி, திருமணக்காட்சி பெற்ற அகத்தியர் மற்றும் பிருங்கி உள்ளனர். திருமணத்தடை உள்ளவர்கள் இவர்களுக்கு மஞ்சள், பன்னீர் அபிஷேகம் செய்து பாயசம் நைவேத்யம் செய்து வழிபடுகிறார்கள். இதனால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. லிங்க வடிவமான குற்றாலநாதர் மீது, அகத்தியரின் விரல் பதிந்த தடம் இருக்கிறது. அது சிவனுக்கு வலிக்குமே என்ற ரீதியில், மனம் நெகிழ்ந்த பக்தர்கள் அன்பின் காரணமாக லிங்கத்தின் தலையில், குற்றால மலையில் கிடைத்த மூலிகைகளால் ஆன தைலம் செய்து தேய்த்தனர். இவ்வழக்கம் இப்போது இருக்கிறது. பசும்பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 விதமான மூலிகைகள் சேர்த்து 90 நாட்கள் தொடர்ச்சியாக வேக வைப்பார்கள். இந்த மருந்து கலவையில், செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்து தைலம் தயாரிக்கின்றனர். இதை பக்தர்களுக்கு பிரசாதமாகவும் தருகின்றனர். தலைவலி உள்ளவர்கள் இத்தைலத்தை தடவுகிறார்கள். புத்திசுவாதீனம் இல்லாதவர்கள், தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றால அருவியில் நீராடி குற்றாலநாதரை தரிசித்தால் பூரண குணமடையும் என்பது ஐதீகம்.
அமைவிடம்:
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து குற்றாலத்திற்கு பஸ்வசதி உள்ளது.
தொடர்புக்கு: 91-4633-283138- 210138.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post சரும நோய்களை தீர்க்கும் குற்றால நாதர் appeared first on Swasthiktv.