திருவெம்பாவை (Thiruvempavai) பாடல்கள் அருளிய மாணிக்கவாசகர் (Manikkavasagar)
திருவெம்பாவை (Thiruvempavai) பாடல் 8
கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.
திருவெம்பாவை (Thiruvempavai) பாடல் விளக்கம் :
தோழியை எழுப்ப வந்த பெண்கள், “”அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் இசைக்கப்படுகின் றன. நம் அண்ணாமலையார் கோயிலில் வெண் சங்குகள் முழங்குகின்றன. இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளை பாடுகின்றோம்.
ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய். இந்த உறக்கத்துக்கு சொந்தமானவளே! இன்னும் பேசமாட்டேன் என்கிறாயே! வாழ்க நீ! ஒப்பற்ற பரஞ்சோதியான பெருமானையும், ஒப்பற்ற அப்பெருமானின் பரங்கருணையையும், ஒப்பற்ற மேன்மையான (சிவம் சார்ந்த)பொருட்களையும் பாடினோம். அவையெல்லாம் கேட்கவில்லையா ?அப்படி இது என்ன உறக்கமோ, சொல்வாய் !
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று சங்க இலக்கியம் சங்கையில்லாமல் முழங்குகிறது. ஆயினும் மனிதன் குறைமதியின் காரணமாகத் தனது துன்பங்களுக்கு இறைவனைக் காரணமாகக் காட்டுகிறான். மட்டுமின்றி, இறைவனின் இருப்பையே மறுக்கிறான். ஆயினும், அவரவர் வினைப்பயனையும் மீறி, அவர்களது பக்தியின் உயர்வு கருதி, இறைவன் அவர்களது துன்பத்தைத் தான் ஏற்கிறான்.
பக்தி என்பதற்கு வெறும் இறைவன்பால் வைத்த பற்று என்று மட்டும் கொள்வது சரியல்ல. எல்லா உயிரையும் தம்முயிர் போல் கருதிப் பொருளாலும் உடலாலும் மனதாலும் சேவை செய்தலும் கருணை காட்டுதலும் இறைவனிடம் காட்டும் பக்தியே. உடல் மற்றும் மனத்தூய்மைகளுக்கான நல்லொழுக்கத்தில் நிற்றலும் பக்தியின் ஒரு முக்கியக் கூறே. கள், களவு, பிறர்மனை விரும்புதல், பொறாமை, பேராசை, ஆணவம் ஆகியவற்றைத் தவிர்த்து வாழ்தலும் பக்தியின் இன்றியமையாக் கூறுகளே.
நந்தனாருக்காக நந்தியை விலகச் செய்த ஏழைபங்காளனை இந்த மார்கழி நன்னாளில் துதித்துப் பாடுவோம், வாருங்கள்.
-திருவெம்பாவை தொடரும்….
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post திருவெம்பாவை (Thiruvempavai) பாடல் 8 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.