பழனி முருகன் கோவில் (Palani Arulmigu Balathandayuthapani temple)
பழனி முருகன் கோவில் முருகனது ஆறுபடை வீடுகளில் சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். பழனி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தத் தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப் பெருமானை ‘ஞானப் பழம் நீ” என அழைத்ததால், ‘பழம் நீ” என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே ‘பழனி” ஆகிவிட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.
கோவில் வரலாறு :
முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் மூன்றாவது படை வீடு ஆகும். இந்தக் கோயில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் தலத்தின் மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர்.
நாரதர் ஒரு நாள் அரிதாகக் கிடைத்த ஞானப்பழத்தை சிவனுக்கு சாப்பிட கொடுத்தார். அப்போது அருகில் இருந்த பார்வதி, தன்னுடைய மகன்கள் முருகன், விநாயகருக்கு பகிர்ந்து கொடுக்க விரும்பினார். ஆனால், சிவபெருமானோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக் கூறி, பழத்தை பெற மகன்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார்.
உலகத்தை முதலில் யார் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு இந்த ஞானப்பழத்தை வழங்க முடிவு செய்தார். முருகனோ, தன்னுடைய மயில் வாகனத்தில் உலகத்தை சுற்றிவர சென்றார். விநாயகரோ, பெற்றோரை உலகமாக நினைத்து அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை பரிசாக பெற்றார்.
அதிர்ச்சியடைந்த முருகன் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் பெற்றோரை விட்டு பிரிந்து பழனி முருகன் கோயிலில் குடிபெயர்ந்தார். அன்றில் இருந்து முருகன் தங்கியிருந்த இந்த படை வீடு, பழனி என அழைக்கப்படுகிறது.
முருகன் சிலையின் சிறப்பு :
முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பு சப்பட்டு காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
தண்டாயுதபாணி பெயர் காரணம் :
இடும்பன் என்பவன், அகத்தியரின் உத்தரவுப்படி சக்திகிரி, சிவகிரி என்ற இரு மலைகளை தென்பொதிகைக்கு எடுத்து சென்றான். வழியில் பாரம் தாங்காமல் பழனி மலையில் இடும்பன் இரு மலைகளையும் கீழே வைத்து விட்டான். அப்போது பழனி மலையில் இருந்த முருகன் கீழே வைத்த சக்திகிரி மலையில் ஏறி நின்றார்.
இடும்பன், அவரை இறங்கும்படி எச்சரித்தான். முருகன் அவன் பேச்சை கேட்கவில்லை. ஆத்திரமடைந்த இடும்பன், முருகனை எதிர்க்க துணிந்தான். முருகன், அவனுக்கு தன்னுடைய அருட்பார்வையை செலுத்தி அவனை தன்னுடன் வைத்துக் கொண்டார். சக்திகிரி மலையில் மீது ஏறி நின்றபோது முருகன் தன் கையில் தண்டம் வைத்திருந்ததால் ‘தண்டாயுதபாணி” என பெயர் பெற்றார்.
கோவிலின் சிறப்பு :
இந்த முருகன் கோவிலில்தான் தமிழகத்தில் முதன்முதலாக பக்தர்கள் வேண்டுதல்கள் நிமித்தம் அலகு குத்துதல், காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னரே தமிழகத்தின் மற்ற கோயிலில் பக்தர்கள் மத்தியில் கடன்செலுத்தும் பழக்கம் ஏற்பட்டது.
குடும்பத்தில் சந்தோஷம், தொழில் செழிக்க, செல்வம் பெருக இந்த கோயிலில் அதிகளவில் பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி முருகனை வேண்டிக் கொள்கின்றனர்.
The post தொழில் செழிக்க, செல்வம் பெருக பழனி முருகன் கோவில் (Palani Arulmigu Balathandayuthapani temple) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.