தக்ஷிணாமூர்த்தி வடிவங்களில் பல்வேறு விதங்கள் உண்டு. அவை ஞான தக்ஷிணாமூர்த்தி, யோக தக்ஷிணாமூர்த்தி, வியாக்யான தக்ஷிணாமூர்த்தி, மேதா தக்ஷிணாமூர்த்தி, வீர தக்ஷிணாமூர்த்தி, வீணாதர தக்ஷிணாமூர்த்தி, சுத்த தக்ஷிணாமூர்த்தி, திவ்ய தக்ஷிணாமூர்த்தி, கீர்த்தி தக்ஷிணாமூர்த்தி சக்தி தக்ஷிணாமூர்த்தி என்று பல்வேறு விதமான வடிவங்கள் உண்டு.
ஞான தக்ஷிணாமூர்த்தி:
நான்கு கரங்கள் கொண்ட இவரது பின் வலக்கையில் அட்ச மாலையும், பின் இடக்கரத்தில் தாமரை மலரும் விளங்கும். முன் வலக்கரம் சின் முத்திரை காட்ட இடக்கை அபயம் காட்டும். சில இடங்களில் தண்ட ஹஸ்தமாகவும் காணப்படும். மாயவரம் என்னும் மயிலாடுதுறைக் கோயிலிலும், சுநீந்திரம் கோயிலிலும் ஞான தக்ஷிணாமூர்த்தி வடிவத்தைக் காணலாம் என்று சொல்கின்றனர்.
யோக தக்ஷிணாமூர்த்தி:
யோகக் கலையின் மூலமாகவே இறைவனை அடைதல், அந்தக் குறிக்கோளில் உறுதியாக நிற்பது போன்ற ஆற்றல் கிடைக்கிறது. அத்தகையதொரு ஆற்றலை யோக மார்க்கமே நமக்கு வழங்கும். யோகம் என்பது இங்கே வெறும் ஆசனங்களில் செய்யும் பயிற்சியைக் குறிப்பது அல்ல. உண்மையான யோகத்தை குரு மூலமாகவே செய்ய முடியும். அதற்கேற்ற மன ஆற்றலையும், உறுதியையும் நமக்குக் கிடைக்கச் செய்வதே இந்த தக்ஷிணாமூர்த்தியின் வடிவம் எனலாம். இந்த வடிவத்தில் யோகத்தின் ஆற்றலை விளக்கும் வடிவில் யோகப் பட்டையுடன் கூடிய ஸ்வஸ்திகாசனத்தில் தக்ஷிணாமூர்த்தி காட்சி கொடுப்பார். அட்சமாலையும், கமண்டலமும் பின்னிரு கரங்களில் காணப்படும். காஞ்சிபுரம், திருவொற்றியூர் போன்ற தலங்களில் யோக தக்ஷிணாமூர்த்தியின் வடிவைக் காணலாம். இவரே பிரம்மாவுக்கு அருளிச் செய்தார். ஆகவே பிரம்ம தக்ஷிணாமூர்த்தியும் இவரே என்றும் சொல்லப் படுகிறது.
வியாக்யான தக்ஷிணாமூர்த்தி:
பெயரிலேயே அவரின் செயல் புரிந்துவிடுகிறது. சாத்திரங்களை விளக்குபவராக, ஆசானாக இமயமலையில் ஆலமரத்தின் கீழ் புலித்தோலாசனத்தில் அமர்ந்து இருப்பார் இவர். வலக்கால் கீழே தொங்கும். இடக்காலை மடித்து வலக்கால் தொடையின் அடியில் மடித்து வைத்திருப்பார். தொங்கும் வலக்காலின் கீழ் முயலகனைக் காணலாம். ஆலங்குடி என்னும் குரு பரிஹார க்ஷேத்திரத்தில் வியாக்யான தக்ஷிணாமூர்த்தியைத் தரிசனம் செய்யும் பேறு கிடைத்தது.
சித்ரம் வடதாரோர் மூலே வ்ருத்தா சிஷ்யா குரூர்யுவா!
குரோஸ்து மெளநம் வ்யாக்யாநம் சிஷ்யாஸ்து சிந்ந ஸம்சயா!!
வீணாதர தக்ஷிணாமூர்த்தி:
கைகளில் வீணை ஏந்தியவண்ணம் காட்சி அளிப்பார். ஈசன் சங்கீத ஸ்வரூபம். அவன் மீட்டுவது சாதாரண வீணை அல்ல. ஞாநவீணை. அதிலிருந்து எழும் கீதமும் ஞாநத்தை அளிக்கவல்லது. நமக்கு ஆத்ம ஞாநத்தை அளிக்கும் வல்லமை பெற்ற இனிய கீதத்தை ஈசன் இசைக்கிறான். முன் கரங்களிரண்டாலும் வீணையை மீட்டிக்கொண்டிருக்கும், ஈசனின் பின்னிரு கரங்அள் அக்ஷமாலையையும் நெருப்பையும் ஏந்திக் காட்சி அளிக்கின்றன. அமர்ந்த கோலத்திலேயும் காட்சி அளிப்பார், நின்ற வண்ணமும் காட்சி கொடுப்பார். முனிவர்கள் புடைசூழக் காட்சி தரும் இவரை வேதாரண்யம், திருப்புந்துருத்தி ஆகிய ஊர்களிலே காணலாம் என்று தெரியவருகிறது. இரண்டு ஊரும் பார்க்கலை இன்னமும். அதனால் நிச்சயமாய்த் தெரியவில்லை.
சக்தி தக்ஷிணாமூர்த்தி:
இவரை நாம் ஏற்கெனவே சுருட்டப்பள்ளியில் பார்த்திருக்கோம். அம்பிகையை அணைத்தவண்ணம் வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி அளிப்பார் இவர். திருமணப் பேறு வேண்டி இவருக்குச் சிறப்பு வழிபாடுகள் அங்கே செய்யப் படுகின்றன. மான், மழுவோடு, சின் முத்திரை திகழ, அன்னை ஈசனைத் தழுவிய வண்ணம் காட்சி கொடுக்கிறார்கள்.
மேதா தக்ஷிணாமூர்த்தி:
ரிஷப வாஹனராய்க் காணப்படும் தக்ஷிணாமூர்த்தியை மேதா தக்ஷிணாமூர்த்தி எனத் தெரிந்து கொள்கிறோம். ரிஷபத்தின் மீது அமர்ந்த வண்ணம் ஞாந உபதேசம் செய்கிறார். ரிஷபம் தர்மத்தின் வடிவம். ஆகவே நமக்கு தர்மத்தையும், ஞானத்தையும் உபதேசிக்கும் தக்ஷிணாமூர்த்தியோடு ரிஷபத்தையும் சேர்த்து வழிபடுவது நலம் பயக்கும். ஆணவம், கன்மம், மாயை அகல மோனத்தின் மூலம் ஞானத்தை உணர்த்திய ஞானகுருவான தக்ஷிணாமூர்த்தியை வழிபடுதல் சிறப்பு.
தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எல்லோரும் ஜபம் செய்யலாம். எந்தவித நிர்பந்தங்களும் இல்லாத மந்திரங்கள் சிலவற்றில் தலையாய மந்திரம் இந்த தக்ஷிணாமூர்த்தி மந்திரம்.
மூலமந்திரம்
“ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”
தியானம்
ஸஹஸ்ர தள பங்கஜே சகல சீத ரஸ்மிப்ரபம்|
வராபய கராம்புஜம் விமல கந்த புஷ்பாம்பரம்|
ப்ரஸன்ன வதனே க்ஷணம் ஸகல தேவதா ரூபிணம்
ஸ்மரேத் சிரஸி ஹம்ஸகம் ததவிதான பூர்வம் குரும்.
துதி
குரு ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹா
குரு ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.
காயத்ரீ
“ஓம் விருஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு: ப்ரசோதயாத்|”
The post ஆணவம், கன்மம், மாயை நீக்கி ஞானத்தை அருளும் தக்ஷிணாமூர்த்தி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.