மனிதன் தெய்வமாகலாம்!
தெய்வமே மனிதனாக வரலாம்!
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம் |
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||
எப்பொழுதெல்லாம் தர்மம் குலைகிறதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் சாதுக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், சாதுக்களை காப்பதற்கும் நான் யுகம் யுகமாக அவதரிக்கிறேன் என்பது இதன் பொருள்.
ஆம். அதற்காகவே இறைவனின் அவதாரங்கள் நிகழ்கின்றன. அவதாரம் என்றால் இறங்கி வருவது என்பது பொருள். தீயவர்களை ஒழித்து பக்தர்களைக் காப்பதற்காக பரம்பொருளான இறைவன் அவதாரமேற்று வருகிறான். அதற்காக ஏற்பட்டதுதான் தசாவதாரம் போன்றன. அந்த தசாவதாரத்திலும் மிக மிக உயர்வாகக் கருதப்படுவது ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்.
தசரதன் என்ற அரசன் அயோத்தியை அரசாண்டு வந்தான். அவனுக்கு கோசலை, கைகேயி, சுமத்திரை என்ற மூன்று மனைவியர் உண்டு. எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். யாகங்கள் பல செய்தான். அதன் பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர். தசரதனின் முதல் மனைவி கோசலை ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் இராமராகப் பிறந்தார்.
ராமன் நவமியில் பகல் வேளையில் அரண்மனையில் அவதாரம் செய்தான். கிருஷ்ணன் அஷ்டமியில் அர்த்த ராத்திரியில் சிறையில் அவதாரம் செய்தான். எண்களில் ஒன்பதை எப்படிப் பெருக்கினாலும் அதுதன் நிலையில் மாறாது. அதைப் போன்றவன் ராமன்.
எட்டு என்ற எண், தன் நிலையில் பெருக்கும்போது குறுகிக் கொண்டே வந்து இறுதியில் மாயமாகி விடுகிறது. அதைப்போல தன்னை ஒளித்தும், நிதானம் காட்டி பின்னர் மாயையை விரட்டி தர்மத்தை நிலை நாட்டினான் கிருஷ்ணன். ஆகவேதான், ‘பகவத் கீதை’ என்ற உபதேசத்தை யுத்த பூமியில் விஜயனை முன்னிட்டு நமக்கெல்லாம் உபதேசம் செய்தான்.
ஒருவருக்கு நால்வராய் வாய்த்தது ராமாவதாரம். நால்வருக்கு ஒருவராய் நின்றது கிருஷ்ணாவதாரம். அதாவது, பிள்ளை இல்லையே என்று வருந்திய தசரதனுக்கு ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னன் என்று நால்வராக வாய்த்தது ராமாவதாரம். வசுதேவர், தேவகி, நந்தகோபர், யசோதை என்கிற நால்வருக்கும் – கண்ணன் என்ற ஒருவனே, மகவாய் வாய்த்தது கிருஷ்ணாவதாரம்.
ராமாவதாரத்தில் சீதைக்குப் புகழ் அதிகம். சிறையிலிருந்து புகழ் பெற்றாள் சீதை. அதைத் தோற்கடிக்கும் விதமாக பிறக்கும்போதே சிறையில் பிறந்து சாதனை செய்தது கிருஷ்ண சாமர்த்தியம்.
தூதுபோய் அனுமன் புகழ் பெற்ற சரிதம் ராமாயணம். அந்த தூதுப் புகழும் தனக்கே என்பதைக் காட்டியது கிருஷ்ணாவதாரம். எல்லாவற்றையும் விட மிக முக்கியம், இராமன், மனிதன் தெய்வமாகலாம் என்பதன் விளக்கம். கிருஷ்ணன், தெய்வமே மனிதனாக வரலாம் என்பதன் சுருக்கம். அதனால்தான் ராமனுக்கு விஸ்வரூபம் என்று எதுவும் இல்லை. கண்ணனுக்கு விஸ்வரூபம் என்பது சர்வ சாதாரணம்.
சூட்சுமமாகப் பார்த்தோமானால் கிருஷ்ணன் என்பது ஒரு சுவையான அனந்த நிலை, உத்சவ உற்சாகம், மன மோகன ஸ்வரூபம்….கிருஷ்ணனுக்குப் பூப்போட்டு வணங்குவது மட்டும் பக்தியில்லை. தன்னையே ஒரு பூவைப் போல லேசாக்கிக் கொள்ளுதலே கிருஷ்ண அனுபவம்.
The post மனிதன் தெய்வமாகலாம்! தெய்வமே மனிதனாக வரலாம்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.