வாழ்வில் எப்போதும் எதிலும் வெற்றி காண!
நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு வலிமையுடன் இருந்தால், அந்த நபர் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பவராக இருப்பார். இத்தகைய குருவிற்கு உகந்த நாள் வியாழன். இந்த நாளில் குறிப்பிட்ட விஷயங்களை செய்து வந்தால், வீட்டில் செல்வம் கொட்டி செல்வந்தராகலாம். இதுக் குறித்து விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
வியாழன் எனும் வானியல் கிரகமே ஜோதிட சாஸ்திரத்தில் குரு. பிரகஸ்பதி, தனகாரகன், புத்திரகாரகன், லோகபூஜ்யர், வாகீசர், பீதாம்பரர், பொன்னன் என்றெல்லாம் குரு பகவானைச் சிறப்பிப்பார்கள். தேவர்களின் குரு, சகல சாஸ்திரங்களும் அறிந்தவர், நவகிரகங்களில் சக்தி வாய்ந்தவர், அதிக சுபமானவர், நன்மை செய்பவர், எப்போதும் உதவக்கூடியவர் என்று ஜோதிடம் இவரைப் பலவாறாகப் போற்றும்.
நீர்த்தன்மை வாய்ந்த கிரகமான குரு பகவான், புனித நூல்களையும், மேதைத் தன்மையையும், நல்ல பண்புகளையும் குறிப்பவர். செல்வம், அதிர்ஷ்டம், புகழ், பக்தி, மந்திர ஞானம், ஆன்மிக நாட்டம், நல்லொழுக்கம், தியானம், தர்மம், குழந்தைகள், நீதிபதிகள், அமைச்சர்கள், வழக்கறிஞர்கள், மதம் மற்றும் அரசியலில் தலைமைப் பதவியில் இருப்பவர்களை இவரே ஆள்கிறார்.
ஒருமுறை, இந்திரன் முதலான தேவர்கள் மட்டுமின்றி, வித்யாதரர், கின்னரர், கிம்புருடர் ஆகியோரும் அடிக்கடி அசுரர்களின் இன்னல்களுக்கு ஆளாக நேர்ந்தது. மிகுந்த வலிமை, மந்திர சக்திகள், அற்புத அஸ்திரங்கள் போன்றவை தங்களிடம் இருந்தாலும், அசுரர்களை வெல்ல முடியாமல் திண்டாடினார்கள் தேவர்கள். எனவே, அசுரர்களை அடக்குவதற்கான வழிகேட்டு பிரம்மனைச் சரணடைந்தனர்.
‘‘உங்களிடம் எவ்வளவு சக்திகள் இருப்பினும், குருவின் துணையும், வழிகாட்டுதலும் இல்லாமல் பகைவரை வெல்ல முடியாது. எனவே, நீங்கள் ஓர் ஆச்சார்யரைத் துணைக் கொள்ளுங்கள்’’ என்று அறிவுறுத்தினார் நான்முகன். அதற்கேற்ப, தங்களுக்கு வல்லமை மிக்கதொரு குருநாதர் வேண்டும் எனும் பிரார்த்தனையுடன் மும்மூர்த்தியரையும் குறித்து தவம் செய்தனர் தேவர்கள். அவர்களின் தவத்தால் மகிழ்ந்த மும்மூர்த்திகளும், பிரகஸ்பதியை அவர்களுக்குக் குருவாக அளித்து அருள்புரிந்தனர்.
குருபகவான் தனது திரிகால ஞானசக்தியாலும், ஆன்ம சக்தியாலும் அசுரர்களை வெற்றிகொள்ளும் தந்திரங்களைக் கூறி, தேவர்களின் இன்னல்களைத் துடைத்து, இன்புறச் செய்தார் என்கிறது புராணம்.
தீர்க்க ஆயுள், வாக்குவன்மை, கல்வியில் மேன்மை, மனதுக்கு உகந்த உத்தியோகம் மற்றும் தொழில், திருமண யோகம் ஆகிய பேறுகளுக்கு குருவின் திருவருள் அவசியம் தேவை.
தனுசு, மீனம் ஆகிய உபயராசிகளின் அதிபதி இவர். சூரியனை ஆத்மகாரகன் என்போம். அந்த ஆத்மாவின் ஒளி, ஜீவன் என்றெல்லாம் கூறப்படுவது குருவே! இவர் லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகிய இடங்களில் நற்பலன்களை அள்ளித் தருகிறார்.
ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 1, 4, 7, 10-ல் குரு இருக்கும் அமைப்பை கஜகேசரி யோகம் என்பர். இந்த யோகம் உள்ளவர்களுக்கு, மற்ற கிரகங்களால் ஏற்படும் தோஷங்களால் பாதிப்புகள் இல்லை.சந்திரனும் குருவும் சேர்ந்திருந்தால், குருச்சந்திர யோகம். இதனால் பேரும் புகழும் தேடி வரும். செவ்வாயும் குருவும் இணைந்து நின்றால், குருமங்கள யோகம். இதன் பலனாக நிலபுலன்கள், வண்டி வாகன சேர்க்கை உண்டாகும்.
விஷ்ணு பகவானை வணங்குவது
வியாழக் கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்தப் பின், விளக்கேற்றி விஷ்ணு பகவானை வணங்க வேண்டும்.
தானம்
வியாழக் கிழமைகளில் மஞ்சள் நிற பொருட்களை தானம் வழங்கினால், செல்வமும், அதிர்ஷ்டமும் கொட்டும்.
விரதம்
முடிந்தால் வியாழக்கிழமைகளில் குருவை வணங்கி விரதம் இருங்கள். இதனால் செல்வந்தர் ஆகலாம். மஞ்சள் லட்டு சிவபெருமானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் லட்டுவை படைத்து வணங்கினால், அதிர்ஷ்டமும், செல்வமும் அதிகம் வந்து சேரும்.
வாழைமரம்
வியாழக்கிமைகளில் வாழை மரத்திற்கு மஞ்சள் நிற இனிப்பு பலகாரம் எதையேனும் படைத்து வணங்கி, மஞ்சள் நிற உடைகளை தானமாக வழங்கினால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
வாழைப்பழம்
வியாழக்கிழமைகளில் வாழைப்பழத்தை தானம் வணங்கி வந்தால், அது ஒருவரது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும்.
சாமந்தி மாலை
வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற சாமந்திப் பூ மாலையை விஷ்ணு பகவானுக்கு படைத்தால், விஷ்ணு பகவான் ஆனந்தமாகி, வீட்டில் செல்வம் பெருக செய்வார்.
மந்திரம்
வியாழக்கிழமைகளில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். இதனால் வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் போன்றவை அதிகரிக்கும்.
The post வாழ்வில் எப்போதும் எதிலும் வெற்றி காண! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.