பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்க….
கருணை தெய்வம் கன்னியாகுமரி
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியாக திருவருள் புரிகிறாள் அம்பிகை. 51 சக்தி பீடங்களில் இது குமரி சக்தி பீடம் ஆகும். தல தீர்த்தமாக பாபநாச தீர்த்தம் துலங்குகிறது. இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். அம்மனுக்கு விளக்கு போடுதல், புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் செய்தலும் பக்தர்கள் செலுத்தும் முக்கிய நேர்த்தி கடன்கள். பாணாசுரன் எனும் அசுரனை அழித்த தேவி இங்கே குமரியாக நிலை கொண்டாள். அம்பிகையின் தோழிகளான தியாகசுந்தரி, பாலசுந்தரி இருவரும் ஆலயத்தில் தனிச் சந்நதி கொண்டருள்கின்றனர். தேவியின் மூக்கில் ஜாஜ்வல்யமாக ஜொலிக்கும் மூக்குத்தி நாகரத்தினத்தால் ஆனது என்பார்கள். தாணுமாலயனுக்கும் தேவிக்கும் நடக்க இருந்த திருமணம் நாரதரின் கலகத்தால் நின்றது. திருமணத்திற்குத் தயாரிக்கப்பட்ட உணவுகள் யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரி கடற்கரையில் அரிசி போன்ற வெண் சிறுமணலையும், பலவண்ண மணல்களையும் காணலாம்.
தெய்வத்தின் திருப்பெயரால் பல தலங்கள் இருந்தாலும், கையில் மாலையுடன் தான் விரும்பிய மணாளனுக்கு மாலையிடுவதற்காக, திருமணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் கன்னியாக அம்பாள் வீற்றிருக்கும் தலம் இது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்தது. இதில் தேவர்கள் வலுவிழந்தனர். தேவர்களை அசுரர்கள் அடக்கி ஆண்டனர். அதர்மம் அதிக பலம் கொண்டு ஆடியதால் தீமையும், பாவமும் பெருகின. அசுரர் அரசனாகிய பாணாசுரன், விண்ணவரைத் துரத்தி அல்லல் அளித்து வந்தான். இந்திரனை அவனது சிம்மாசனத்திலிருந்து அகற்றினான். இந்திரனும் மற்ற தேவர்களும் இல்லாமல் பஞ்சபூதங்களைச் சமன்படுத்த முடியாமல் பூலோகம் தடுமாறியது.
ஏற்கனவே பாணாசுரன் கடும் தவமிருந்து பிரம்மாவிடம் ‘தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது. அவ்வாறு நிகழ வேண்டுமானால், ஒரு கன்னிப் பெண்ணின் கையால் மட்டுமே மரணம் நேர வேண்டும்’ என்று வரம் பெற்றிருந்தான். ‘கன்னிப் பெண்கள் பிற ஆடவரைத் தொடக் கூசுவார்கள். ஆகையால் அந்த நேரத்தில் அவர்களை வென்று விடலாம்’ என்ற எண்ணம் அசுரனுக்கு. அந்த வரம் கொடுத்த மமதையின் காரணமாகத்தான் அவன் உயிர்களை வதைத்து வந்தான். பஞ்ச பூதங்கள் அல்லல் படுவதை தடுக்கும் வழியை நாராயணரிடம் சென்று கேட்டனர் தேவர்கள். ‘பாணாசுரனை அழிக்க பராசக்தியால் மட்டுமே முடியும். ஆகவே ஆதி பராசக்தியை அணுகி உரிய பரிகாரம் கேட்டால் கிடைக்கும்’ என்று அறிவுறுத்தினார். அதன்படி தேவர்கள், பராசக்தியை வேண்டி ஒரு பெரும் யாகம் செய்தனர். அதன் முடிவில் தேவி மகாசக்தி வெளிப்பட்டாள்.
தேவர்கள் பாணாசுரன் தரும் அல்லலையும், தீய செயல்களையும் கூறி தங்களைக் காக்க வேண்டினர். ஆதிபராசக்தியும் அசுரனை அழிப்பதாக தேவர்களுக்கு உறுதியளித்தாள். அன்னையானவள் அசுரனை அழிப்பதற்கான உரிய சக்தியைப் பெறுவதற்காக ஒரு தனி இடத்தை தேர்ந்தெடுத்தாள். பின்னர் அவ்விடத்தில் அவதரித்து வளர்ந்து வந்தாள். சுற்றிலும் அலை வீசும் கடலும், நடுவில் ஓங்கி உயர்ந்த பாறையுமாக முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஒற்றைக் காலில் கிழக்கு நோக்கி நின்று தவம் செய்யத் தொடங்கினாள். கன்னியாய் வந்து நின்று தவம் செய்யும் குமரி கடுந்தவம் புரியலானாள். நாட்கள் செல்லச் செல்ல கன்னிதேவி மணப்பருவம் அடைந்தாள். சுசீந்திரம் என்னும் தலத்தின் இறைவன் சிவபெருமான் அவள் மீது காதல் கொண்டார். அவருக்கு அவளைத் திருமணம் முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
அசுரர் தலைவன் ஒரு கன்னியால் தான் கொல்லப்படுவான் என்று பிரம்மதேவன் வரம் அளித்திருக்கும் நிலையில், இந்தத் திருமணம் நடைபெற்றால் பாணாசுரன் அழிவுக்குரிய வாய்ப்பு அகன்று விடும். எனவே தேவர்கள் அனைவரும் கவலை அடைந்தனர். அவர்கள் அனைவரும் நாரதரிடம் இதற்கு தகுந்த பரிகாரம் கேட்டனர். அதில் உள்ள நியாயத்தை உணர்ந்த நாரதர், இறைவன், இறைவியின் திருமணம் நிகழாமல் இருக்க வேண்டிய வழிவகைகளை மேற்கொண்டார். அவர் பராசக்தியையும், சிவபெருமானையும் தனித்தனியே நேரில் சென்று சந்தித்து சில விதிமுறைகளைக் கூறினார். ‘திருமணம் குறிப்பிட்ட ஒரு நாளின் பொழுது புலரும் முன்பாக உள்ள நல்ல வேளையில் நிகழ வேண்டும். அதுவே உலகுக்கும், உங்களுக்கும், சகல ஜீவராசிகளுக்கும் பயன் தரும். அது தவறின் இடர்கள் பல தொடரும். எனவே குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் நிகழ வேண்டும்.
அதற்கு ஆயத்தமாக இருங்கள்’ என கூறினார். அவ்வாறே சிவபெருமான் குறித்த இரவில், நல்லநேரம் தவறிவிடக் கூடாதெனக் கருதி கன்னியாகுமரிக்குப் புறப்பட்டார். வழியில், வழுக்கம் பாறை என்ற இடத்தை அடைந்தபோது, நாரதர் ஒரு சேவல் உருவம் கொண்டு உரக்கக் கூவினார். சேவல் கூவியதும், பொழுது புலர்ந்து விட்டதெனத் தவறுதலாக கருதிய சிவபெருமான், வருத்தத்துடன் சுசீந்திரத்திற்கு திரும்பினார். தேவியும், அதன் பின் என்றும் கன்னியாகவே இருப்பதாக முடிவு செய்து, திரிவேணி சங்கமத்தில் தன் தவத்தைத் தொடர்ந்தாள். இந்தத் திருமணத்திற்காக செய்யப்பட்ட உணவு பொருள் யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரிக்கடல் துறையில் அரிசி போன்ற வெண் சிறுமணலும், வேறுவகையான பலவண்ண மணலும் மிகுதியாக இருப்பதைப் பார்க்கிறோம்.
கன்னியாகவே தேவி கடுந்தவமிருந்து வந்த வேளையில், பாணாசுரன் தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவளை நேரில் காண புறப்பட்டான். அந்த புறப்பாடு அவனின் அழிவுக்கான புறப்பாடு என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. தேவியைக் கண்டதும் அவளை மணந்து கொள்ள விரும்பி வேண்டினான். ஆனால், தேவி மறுத்து விட மீண்டும், மீண்டும் வலியுறுத்தினான். பாணாசுரன், தேவியை தன் உடல் வலிமையால் கவர்ந்து சென்றுவிட எண்ணினான். இதனால் அவர்களுக்கும் போர் ஏற்பட்டது. இறுதியில், கன்னியாகுமரி தேவி தன் சக்கராயுதத்தால் பாணாசுரனை அழித்தாள். பின்னர் அன்னை கன்னியாகவே அங்கு நிலை பெற்றாள்.
தெய்வத்தின் திருப்பெயரால் பல தலங்கள் இருந்தாலும், கையில் மாலையுடன் தான் விரும்பிய மணாளனுக்கு மாலையிடுவதற்காக, திருமணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் கன்னியாக அம்பாள் வீற்றிருக்கும் தலம் இது. இந்த ஆலயத்தில் உள்ள பால சவுந்தரி அம்மனுக்கு முன்பாக கோடி தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பானது. குமரி அம்மன் ‘பகவதி அம்மன்’, ‘துர்க்கா தேவி’ எனவும் பெயர் பெற்றுள்ளார். கன்னிகை பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்து திருமணம் விரைவில் கைகூடும். பலனைப் பெறுகிறார்கள். இது சிறந்த தீர்த்தத் துறையையுடைய புண்ணிய கடற்கரையாகும் என்பதால் இங்கு தற்போது உள்ள 9 துறைகளில் நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும்.
The post பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்க…. appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.