வாழ்வில் தடைகள் யாவும் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் ஆடித்தபசு
சென்னை மாங்காடு காமாட்சி, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் ஆகிய திருத்தலங்களில் அன்னை கோமதியை தவக்கோலத்தில் காணலாம். சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா பிரசித்தம். சங்கன், பதுமன் என்ற நாக அரசர்கள் சிவன் மற்றும் விஷ்ணு மட்டுமே உண்மை தெய்வங்கள் என அடம் பிடித்தனர்.
ஒருமுறை, ‘சிவன் பெரியவரா?… விஷ்ணு பெரியவரா என்ற பேத புத்தி இல்லாமல், இந்த சக்திகள் இரண்டும் ஒன்றே என்பதை உலக மக்களுக்கு உணர்த்த வேண்டும்!’ என்று எண்ணினாள் அம்பிகை. தனது எண்ணத்தை சிவபெருமானிடம் கூறி, ”ஸ்வாமி… சங்கரரும் நாராயணரும் பேதம் இல்லாமல் பொருந்தி இருக்கும் திருக்காட்சியைக் காட்டியருள வேண்டும்!” என வேண்டினாள்.
உடனே சிவபெருமான், ”தேவி… உனது எண்ணம் நிறைவேறும். பூலோகத்தில் அகத்திய முனிவன் இருக்கும் பொதிகை மலையின் அருகில் உள்ள புன்னை வனத் தலத்துக்குச் (சங்கரன்கோவில்) சென்று தவமியற்று. அங்கு நீ விரும்பியபடியே, யாம் சங்கர நாராயணராகக் காட்சி கொடுப்போம். மகா சக்தியான நீயும் அங்கே இடம் பெற வேண்டும்!” என்றார்.
அதன்படியே பூலோகத்தில் உள்ள புன்னை வனத்தலத்தை அடைந்தாள் அம்பிகை. அங்கே, முனிவர்கள் – புன்னை மரங்களாகி நிழல்தர, அந்த நிழலில் பெரும் தவத்தை மேற்கொண்டாள் அம்பிகை. தேவ மாதர்கள் பசுக் கூட்டமாகத் தோன்றி அன்னையின் தவத்துக்கு உதவினர். அதனால் மகிழ்ந்த அம்பிகை, அந்த பசுக்களின் பெருமையை உலகுக்கு உணர்த்த, ‘ஆவுடையாள்’ எனும் திருநாமம் கொண்டாள் (ஆ-பசு). மேலும், ‘கோ’(பசு)க்களின் பெயரை இணைத்து ‘கோமதி’ எனும் மற்றொரு திருநாமத்தையும் ஏற்றாள். அம்பிகையின் தவத்தால் அங்கே ஆவினங்களும் பெருமை பெற்றன.
பசுக்களை ஆ என்றும் கோ என்றும் சொல்வர். ஆக்கள் தரிசித்ததால் இவள் ஆவுடையம்மாள் எனப்பட்டாள். அம்பாளே பூமிக்கு வந்துவிட்டதால், அவளது திருமுகம் மதி (நிலா) போல் பிரகாசித்தது. அமாவாசை எப்போது என்று கூட அறிய இயலாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக அவளுக்கு கோமதி என்ற பெயரும் தேவர்களால் சூட்டப்பட்டது. மதி என்றால் புத்தி என்றும் அர்த்தம். ஒரு ஊசியின் மேல் ஒற்றைக்காலில் நிற்க வேண்டுமானால், எந்தளவுக்கு புத்திசாலித்தனம் வேண்டும்! இப்படி புத்திசாலித்தனத்தில் கோ (தலைவி) ஆக இருந்ததாலும், இவள் கோமதி எனப்பட்டாள். தவம் என்ற சொல்லை தபஸ் என்று சொல்வர். இதுவே பேச்சுவழக்கில் தபசு, தவசு என்று மாறிவிட்டது.
அம்பிகைக்கு இறைவன் சங்கரநாராயணராக காட்சி தந்த வைபவமே இங்கே ஆடித்தபசு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தி அன்று கொடியேற்றத்துடன் துவங்கும் இந்தத் திருவிழாவில் முத்தாய்ப்பாக… (ஆடி மாதம்) உத்திராட நட்சத்திரத்தன்று, ஆடித் தவசு மண்டபத்தில் கோமதியம்மன் எழுந்தருள்வாள். அன்று மாலை ஐந்தரை மணி அளவில் ஸ்ரீ சங்கரநாராயணர் திருக்காட்சி வைபவம் நடைபெறும். மகத்துவம் மிகுந்த இந்த வைபவம் சங்கரன்கோவில் திருத்தலத்தில் நாளை மாலை நடைபெறுகிறது.
The post வாழ்வில் தடைகள் யாவும் நீங்கி முன்னேற்றம் உண்டாக!!! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.