இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோபுர தரிசனம்!
மொத்தம் நான்கு ராஜ கோபுரங்கள் உள்ளன. இவை தவிர உள்ளே உள்ள வெளிப்பிரஹாரத்தில் இவை ஆடி வீதி என அழைக்கப் படும். இந்த ஆடிவீதியிலும் ஆறு கோபுரங்கள் உள்ளன. இவற்றில் கிழக்கே உள்ள ராஜ கோபுரம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கி.பி. 1216-ம் ஆண்டு ஆரம்பித்து 1238-ம் ஆண்டு கட்டி முடிக்கப் பட்டது. சுதை சிற்பங்கள் 1011 இருப்பதாயும், அவற்றில் திருவிளையாடல் புராணக் கதைகளும், பெரியபுராணக் கதைகளும் அமைந்துள்ளதாயும் சொல்லப் படுகின்றது. (நான் பார்க்கலைங்கோ!) கோபுரத்தின் உயரம் 153 அடியாகும். கலசங்களின் உயரம் 8 அடியாகும். ஒவ்வொரு கோபுரத்திலும் ஒன்பது நிலைகளும், ஒன்பது கலசங்களும் உள்ளன.
அடுத்து மேலக் கோபுரம். உள்ளே நுழையும்போதே காற்று அருமையாக வீசும். இத்தகையதொரு அற்புதக் காற்றை எங்கேயும் காண முடியாது. இந்தக் கோபுரமும் பாண்டியன் கட்டியதே. ஆனால் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கட்டினான். கி.பி. 1315-ம் ஆண்டு ஆரம்பித்து `1347-ம் ஆண்டு முடிந்திருக்கிறது. இதில் 1124 சுதைகள் இருப்பதாயும் 154.6 அடி உயரம் எனவும் சொல்லப் படுகின்றது. இதிலும் திருவிளையாடல் பெரியபுராணம் தவிர, தசாவதாரச் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளதாய்ச் சொல்லப் படுகின்றது.
வடக்குக் கோபுரம். இதைப் பல வருடங்கள் வரைக்கும் மொட்டைக் கோபுரம் என்றே சொல்லுவார்கள். இந்தக் கோபுரத்தின் நுழை வாயில் அருகே ஒரு காவல் தெய்வம் முறுக்கிய மீசையுடன் இருக்கின்றார். அவரை மொட்டைக் கோபுரத்தான் என்றே அழைப்பதுண்டு. முன்பெல்லாம் இந்தக் கோபுரத்தின் வழியே துணை இல்லாமல் போக விட மாட்டார்கள். இப்போது அனைவரும் செல்கின்றனர். கிருஷ்ண வீரப்ப நாயக்கர் என்பவரால் கி.பி.1564-ல் கட்ட ஆரம்பித்த இது கட்டி முடிக்கப் படாமல் பல வருடங்கள் பாதியிலே நின்றிருக்கின்றது. இதனால் மொட்டைக் கோபுரம் என அழைக்கப் பட்டிருக்கலாம். பின்னர் அபிஷேஹ பண்டாரத்தாரும், நகரத்தார் சமூகத்தினரின் உதவியோடு கட்டி முடிக்கப் பட்டதாய்த் தெரிய வருகின்றது. 152 அடி உய்ரம் கொண்ட இந்தக் கோபுரத்தில் 404 சுதைகளே உள்ளனவாம். கலசங்கள் எட்டு அடி உயரம்.
அடுத்து கடைசியாகத் தெற்கு கோபுரம். இதுதான் அனைத்து கோபுரங்கலிலும் மிகவும் உயரமானது ஆகும். 160.9 அடி உய்ரம் கொண்ட இந்தக் கோபுர கலசங்களின் உயரமும் அதிகம். 9.9. அடியாகும் கலசங்கள் உயரம். சுதைகளும் அதிகம் கொண்டது. தூரத்தில் இருந்து பார்த்தாலே இது தான் தெற்கு கோபுரம் என அடையாளம் சொல்லிவிடலாம். அவ்வளவு சுதைச் சிற்பங்கள். மொத்தம் 1511 சிற்பங்கள். யாளி சிலை ஒன்றின் கண்களின் குறுக்களவு மட்டும் 2.5 அடி எனச் சொல்கின்றனர். பிரம்மாண்டமான சிலைகள் கொண்ட கோபுரம் இது. கந்த புராணம், தசாவதாரம், விஸ்வரூப சுப்ரமணியர், (எங்கேயும் பார்க்க முடியாது) சபரி, ஏகபாத மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவர், காளி நர்த்தனம் போன்ற சிலைகள் இடம் பெற்றிருக்கின்றன.
அடுத்து ஆடி வீதிக் கோபுரங்கள். பொற்றாமரைக் குளத்தின் பின்புறம் உள்ள சித்திரகோபுரம் என்றழைக்கப் படுவது கிழக்கு ஆடிவீதிக்கும், தெற்கு ஆடிவீதிக்கும் நடுவே உள்லது. கி.பி. 1570-ம் ஆண்டு காளத்திநாத முதலியார் என்பவரால் கட்டப் பட்டது. உய்ரம் 117 அடியாகும். ஏழு நிலை, ஏழு கலசங்கள், கலசங்களின் உயரம் ஆறே முக்கால் அடி. சுதைகள் 730 உள்ளன. இதை அம்மன் கோபுரம் என்றே அழைப்பார்கள். இங்கே 25 முகங்கள் கொண்ட சதாசிவம் சிலை மிகவும் அரிய ஒன்று.
அம்மன் சந்நிதியின் நுழைவு கோபுரம் கிபி 1227-ல் வேம்பத்தூர் ஆனந்த தாண்டவ நம்பி என்பவரால் கட்டப் பட்டது. 3 நிலைகள், 40.6 அடி உயரம் ஐந்து கலசங்கள், கலசங்கள் உயரம் 4 அடி.
மேல ஆடிவீதியில் அம்மன் சந்நதிக்கு நேர்பென்னே உள்ள கோபுரம் கடக கோபுரம் என்றழைக்கப் படும். 1570-ம் ஆண்டு வீரதும்மாசி என்பவர் கட்டினார். ஆனால் இந்தக் கோபுரம் திறந்தே பார்க்க முடியாது. உயரம் 64.6 அடி, ஐந்து நிலை, ஐந்து கலசங்கள் 228 சுதைகள், கலசங்கள் உயரம் 5 அடியாகும்.
நடு கோபுரம் முக்குறுணி விநாயகர் சந்நிதியில் உள்ளது நடைபாதையில் உள்ளதால் நடுக்கட்டுக் கோபுரம் எனச் சொல்லப் படுகின்றது. கிபி 1559-ல் செவ்வந்தி மூர்த்தி செட்டியார் என்பவரால் கட்டப் பட்ட இது 69 அடி உயரமும், ஐந்து நிலை, ஐந்து கலசங்களுடனும் அமைந்துள்லது. 112 சுதைகள் உள்ளன. மேல ஆடி வீதியில் ஸ்வாமி சந்நிதிக்குப் பின்னர் உள்ள கோபுரம் கி.பி.1374-ல் மல்லப்பன் என்பவரால் கட்டப்பட்டது. 72 அடி உயரத்தில் ஐந்து நிலைகளுடனும், 5 அடி உயரம் கொண்ட ஐந்து கலசங்களுடனும் காணப்படும் இந்தக் கோபுரத்தில் 340 சுதைச் சிற்பங்கள் உள்ளன. அடுத்துச் சின்ன மொட்டைக் கோபுரம் என்று சொல்லப்படுவது வடக்கு கோபுரத்தின் பின்னால் வடக்கு ஆடி வீதியில் கல்யாண சுந்தரர் சந்நிதிக்கு அருகே உள்ளது. 71 அடி உயரமுள்ள இந்தக் கோபுரம் கி.பி. 1560-ம் ஆண்டு செவ்வந்தி வெள்ளையப்பச் செட்டியாரால் கட்டப் பட்டது. ஐந்து நிலைகள், ஐந்து கலசங்கள் கலசங்களின் உயரம் 5 அடியாகும்.
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று மீனாட்சி அம்மன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.