”நலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை!”
ஸ்ரீ சக்ர நாயகி, அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாக விளங்குபவள், வேதங்கள் போற்றும் வேதநாயகி, அனைத்துலகையும் ஈன்றவள், அனைத்து உயிரினங்களுக்கும் அன்னையாக விளங்குபவள், மஹா மஹா சக்ரவர்த்தினியாக ஈரேழு பதினான்கு லோகங்களையும் அரசாட்சி புரிபவள் – ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகை.
அம்பிகையே அனைத்திற்கும் காரணியாக எண்ணிப் போற்றி வழிபடும் சாக்த வழிபாடு எனும் முறைப்படி செய்யப்படும் பூஜைகளில் முதன்மையானதாகவும், மிக மேன்மையானதாகவும் விளங்குவது ஸ்ரீ நவாவரண பூஜையாகும்.
ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகை, க்ஷீர சாகரம் எனும் அலகிலாத எல்லைகளுடைய பாற்கடலின் நடுவே, ஸ்ரீ நகரம் எனும் ஸ்ரீ சக்ரத்தின் நடுவே கற்பக விருட்சங்கள் நிறைந்ததும், சிந்தாமணி எனும், கேட்டவுடன் வரமளிக்கக் கூடிய கற்களால் ஆன கருவறையில், மந்த்ரிணி, வாராஹி, அச்வாரூடா எனும் தனது சக்தி பரிவாரங்களுடன் மஹா ராஜ ராஜேஸ்வரியாக, திரிபுர சுந்தரியாக, பஞ்ச ப்ரஹ்ம ஆசனத்தில் அமர்ந்து அகிலங்கள் அனைத்தையும் பரிபாலனம் செய்து வருகின்றாள்.
ஸ்ரீ நகரம் அல்லது ஸ்ரீ சக்ரம் ஸ்ரீ நகரம் அல்லது ஸ்ரீ சக்கரம் அல்லது ஸ்ரீ யந்திரம் என்பது பொன்னாலும், ரத்தினங்களாலும் இழைக்கப்பட்ட ஒரு அற்புதமான கோட்டை. அந்தக் கோட்டையினுள் ஒன்பது பிரகாரங்களின் வாசல்கள் உண்டு. ஒன்பது பிரகாரங்களுக்கும் மத்தியில் அம்பிகை கொலுவீற்றிருக்கின்றாள்.
ஸ்ரீ யந்திரத்தில் நாற்பத்து மூன்று முக்கோணங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு முக்கோணத்திலும் ஒவ்வொரு அம்பிகை ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகைக்கு சேவை புரிவார்கள். அம்பிகையின் குதிரைப் படையை அச்வாரூடா, யானைப் படையை கஜமுகி, மந்திரியாக மந்த்ரிணீ போன்ற அம்பிகைகள் பரிபாலனம் செய்கின்றார்கள்.
ஸ்ரீ நகரத்தின் நடுவே, கோடி சூர்ய பிரகாசத்துடனும், கோடி சந்திரர்களின் குளிர்ச்சியுடனும், பக்தர்களை எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கும் – இமை மூடாத மீனைப் போன்ற கண்களுடனும், மாதுளைம்பூவை ஒத்த நிறத்துடனும், பொன்னும், வைரமும், ரத்தினங்களும் இழைக்கப்பட்ட கிரீடத்துடனும், அனைவருக்கும் அபயம் எனும் வகையில் காக்கும் கரமும், ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை அழிக்கும் வகையில் பாசமும் அங்குசமும் கொண்டு, வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை அருளும் வகையில் அமைந்து ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகை அருள்பாலிக்கின்றாள்.
ஸ்ரீ நவாவரண பூஜை ஸ்ரீ சக்ரத்தினுள்ளே இருக்கும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் மற்றும் நடுநாயகமாக விளங்கும் ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகைக்கும் அனைத்து பூஜை அம்சங்களும் இணைந்த வகையில் செய்யப்படுவது ஸ்ரீ நவாவரண பூஜை ஆகும்.
நவ (ஒன்பது) ஆவரணங்களில் (வரிசையில்) உள்ள தெய்வங்களுக்கான பூஜை, அர்ச்சனை, தர்ப்பணம் போன்ற பூஜைகள் நடத்தப்படும். ஒவ்வொரு ஆவரணத்திற்கும் உரிய பூஜை முடிந்ததும் ஒரு தீபாராதனை நடத்தப்படும். ஒன்பது தீபாராதனைகளுக்குப் பிறகு சுவாஸினி பூஜை, கன்யா பூஜை போன்ற பூஜைகள் நடைபெறும்.
புரஸ்சரணை என்பது உடனடி பலன் தரும் பூஜா முறையாகும். அதில் பூஜை, அர்ச்சனை, ஹோமம், தர்ப்பணம், பலி, போஜனம் எனும் வரிசை கிரமமாக அமைந்தது. புரஸ்சரணையை ஒத்தது ஸ்ரீ நவாவரண பூஜை. இதில் யாகம் ஒன்று என்பது நேரடியாக இல்லாவிட்டாலும், பூஜை செய்யும் சாதகன் தன்னைத்தானே பூஜை முறையால் ஹோமாக்னி போல் இருப்பதே இதன் சிறப்பம்சம்.
பூஜையும், தர்ப்பணமும் ஒரே நேரத்தில் இணைந்து செய்யப்படும் பூஜை, நவாவரண பூஜை தவிர வேறு எந்த வகையிலான பூஜையிலும் கிடையாது. பூஜைக்கு மலரும், தர்ப்பணத்திற்கு இஞ்சி (ginger) துண்டத்தில் நனைத்த பாலையும் ஒரு சேர அர்ச்சிப்பது (பூஜயாமி தர்ப்பயாமி நம:) இந்த பூஜையில் மிக மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த பூஜை குரு ஸ்துதியில் ஆரம்பித்து குரு வந்தனத்தோடு முடிவதும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
ஸ்ரீ நவாவரண பூஜையில் உள்ள பூஜைகள்:
மண்டப ப்ரவேச பூஜை, பூத சுத்தி, ஸங்கல்பம், குரு ஸ்தோத்ரம், அமரும் ஆசனத்திற்குரிய பூஜை, பூஜகர் தன்னைத்தானே மந்திர மண்டலத்திற்குள் உட்படுத்திக்கொள்ளும் பூஜை, திக் பந்தனம், ப்ராண ப்ரதிஷ்டை, ஸ்ரீ நகரத்திற்குரிய பூஜை, ஸகலவிதமான நியாஸ பூஜைகள், கலச பூஜை, சங்குக்குரிய பூஜை, விசேஷ அர்க்கியம் எனும் பிரஸாதமாகத் தரக்கூடிய, அஷ்டகந்தம் எனும் வாசனை திரவியங்கள் கலந்த பாலுக்கு உரிய பூஜை, ஆவாஹன உபசார பூஜை, மங்களாராத்ரிகம் எனும் பூஜை (சத்துமாவை விளக்காகக் கொண்டு தீபாராதனை செய்வது), சதுராயதனம் எனும் சிறப்பு பூஜை, குரு மண்டல பூஜை, அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆவரணங்களுக்கான, ஒன்பது வரிசைகளுக்கான பூஜை, பஞ்ச பஞ்சிகா பூஜை எனும் பஞ்ச ப்ரஹ்மாசனத்திற்குரிய பூஜை, ஸ்ரீ மாதா புவனேஸ்வரிக்கு சிறப்பு பூஜை, தூப தீப நிவேதன பூஜை, பலிதானம், குரு வந்தனம், ஸுவாஸினி பூஜை, கன்யா பூஜை, வேதார்ப்பணம் (வேதகோஷம்), நிருத்யார்ப்பணம் (நாட்டியம்), கானார்ப்பணம் (பாடல்) என்று மிக அழகியதொரு வரிசையில் ஸ்ரீ நவாவரண பூஜை அமைகின்றது.
பூஜை பிரஸாதம்:
பூஜையின் நிறைவில் பிரஸாதமாக, ஸாமான்யர்க்கியம் எனும் வலம்புரிச் சங்கில் உள்ள பூஜை செய்யப்பட்ட தீர்த்தம் தெளிக்கப்படும்.
விசேஷ அர்க்கியம் எனும் பூஜை செய்யப்பட்ட பால் விநியோகிக்கப்படும்.
இவ்விரண்டையும் பெறுபவர்கள் அம்பிகையின் பரிபூரணமான அருளையும், நவாவரண பூஜையின் முழு பலனையும் பெறுவார்கள் என்று இந்த பூஜையின் பலஸ்துதியில் உள்ள ஸ்லோகம் கூறுகின்றது.
உடல் சுத்தத்திற்கு சங்கு தீர்த்தமும், உள்ளுறுப்புகளை (மனதை – உள்ளத்தை) சுத்தம் செய்ய பூஜிக்கப்பட்ட பாலும் கொடுக்கப்படுகிறது.
ஸ்ரீ வித்யா உபாஸனை:
உபாஸனை என்றால் ஒரே தெய்வத்தை மனதில் மேன்மையானதாக இருத்திக்கொண்டு அந்த தெய்வத்தையே சதா சர்வ காலமும் நினைந்து போற்றி வழிபாடு செய்வதாகும். ஸ்ரீ வித்யா என்பது அம்பிகையின் மூல மந்திரங்களில் மிக மேன்மையானது. பதினாறு எழுத்துக்களைக் கொண்ட மந்திரம் ஸ்ரீ வித்யா எனப்படும். இந்த மந்திரம் அம்பிகையே அனைத்திற்கும் காரண காரணியாக விளங்குகின்றாள் என்பதை எடுத்துக்காட்டும் மிகச் சிறப்பு வாய்ந்த மந்திரம்.
ஸ்ரீ நவாவரண பூஜையை தகுந்த குருவிடம் ஸ்ரீ வித்யா உபதேசம் எடுத்துக்கொண்டவர்கள் மட்டுமே செய்யவேண்டும்.
பூஜை செய்யும் போது பூஜகன் மந்திரங்களால் சூழப்பட்டு, அஹமேத்வம் எனும் சொல்லுக்கிணங்க பூஜகனே அம்பிகையாக மாறிச் செய்வது தான் இந்த பூஜையின் மிக முக்கியமான அம்சமாகும். பூஜகன், பூஜனை மந்திரத்தினால் மானஸீகமாக தன்னை பூஜையில் எரித்துக்கொள்வதே இந்த பூஜையின் யாகமாகக் கருதப்படுகிறது. ஆகையினாலேயே இந்த பூஜை “ஸ்ரீவித்யா மஹாயாக க்ரமம்” என்று போற்றி அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ என்றால் செல்வங்களை வாரிவழங்கும் லக்ஷ்மிக்குரிய அக்ஷரம். வித்யா என்றால் கலை. இந்த பூஜையைக் காண்பதால் வாழ்விற்குத் தேவையான செல்வம், புகழ் தரும் கலை எனும் வித்தை தன்னாலேயே உண்டாகும்.
ஹோமம் மற்றும் பரிஹாரம் முதலிய சந்தேகங்களுக்கும், உதவிக்கும் தொடர்புக்கொள்ளவும்
Karthik Vishwanathan: +91- 9003267588 / 9941510000
The post ”நலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை!” appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.