பெருமை வாய்ந்த பிள்ளையாருக்கு எத்தனைப் பெயர்கள்?
கணபதி என்ற சொல்லுக்குத் தேவகணங்களின் தலைவன் என்று பொருள். ‘க’ என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், ‘ண’ என்பது மோட்சம் பெறுவதையும், ‘பதி’ என்பது ஞான நெறியில் திளைத்துப் பரம்பொருளை அடைதலையும் குறிக்கும். மேலும் ‘மனோவாக்கினை கடந்த தலைவன்’ என்றும் பொருள்கொள்ளலாம்!
தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் ஆதலால் பிள்ளையாருக்கு விநாயகன் என்று பெயர். விக்னங்களைப் போக்குபவர் ஆதலால் விக்னேஸ்வரர். கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி எனும் பெயர் கொண்டார்.
சாபத்தின் காரணமாக தனது பிரகாசத்தை படிப்படியாக இழக்க ஆரம்பித்தான் சந்திரன். இவனது துன்பம் தீர்க்க எண்ணிய விநாயகப் பெருமான், சந்திரனை தன் நெற்றியில் திலகமாக அணிந்து கொண்டாராம். இதனால், பாலசந்திர விநாயகர் எனும் திருநாமம் பெற்றார்.
ஒருமுறை, அக்னி பகவானும் சாபம் பெற்றார். அக்னியைக் காப்பாற்ற தனது காதுகளையே முறங்களாக்கி விசிறி, அக்னியின் வெப்பம் தணியாமல் இருக்க அருள் செய்தாராம் விக்னேஸ்வரர். இதனால் சூர்ப்பகர்ணர் என்று பெயர் கொண்டார்.
பரமேஸ்வரனால் வழங்கப்பட்ட பரசு ஆயுதத்தால் பூவுலகில் தனது லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டார் பரசுராமர். இதன் பொருட்டு சிவனாருக்கு நன்றி சொல்ல திருக்கயிலாயம் வந்தார். வாயிலில் அவரைத் தடுத்து நிறுத்தினார் பிள்ளையார். அவரைப் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைய முயன்றார் பரசுராமர். இதனால் இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அதன் உச்சகட்டமாக விநாயகரை நோக்கி பரசு ஆயுதத்தை வீசினார் பரசுராமன்.
அந்த ஆயுதத்தால் தன்னை எதுவும் செய்துவிட முடியாது என்பது பிள்ளையாருக்குத் தெரியும். ஆனால், தந்தை அளித்த அந்த ஆயுதத்துக்கு இழிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதினார் பிள்ளையார். தமது இடது தந்தத்தால் அந்த ஆயுதத்தை எதிர்கொண்டார். தந்தம் முறிந்தது! இதன் மூலம் ஏக தந்தர் எனும் திருநாமத்தை ஏற்றார்.
ஞானநூல்களெல்லாம் அவரை உச்சிப் பிள்ளையார், மகா கணபதி, பாதாள கணபதி என்ற மூன்று நிலைகளில் வைத்து போற்றுகின்றன.
ஆலயங்களில் மகா கணபதியாக வழிபடும் பிள்ளையாரை, மலை முகட்டிலும் உச்சியிலும் வைத்து உச்சிப்பிள்ளையாராகவும், பள்ளத்தில் சந்நிதி அமைத்து பாதாள விநாயகர் என்றும் வழிபடுகின்றனர்.
அன்னை தேவிகரியநாகமாரி நூதன அருட்பிரதிஷ்டை மகாகும்பாபிஷேக அழைப்பிதழ்
பாதாள விநாயகர்!
மண்ணின் கீழே பாதாளத்தில் வீற்றிருப்ப வராகவும் விநாயகரைத் தரிசிக்கலாம். இந்த நிலையில், பூமி மட்டத்திலிருந்து பல படிகள் இறங்கிப் போய் அவரைத் தரிசிக்க வேண்டும். இவரை ஆழத்துப் பிள்ளையார், பாதாள பிள்ளையார் என்ற பெயர்களில் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post பெருமை வாய்ந்த பிள்ளையாருக்கு எத்தனைப் பெயர்கள்? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.