கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருக்கூடலூர் வையங்காத்த பெருமாள் – ஜெகத்ரட்சகன்
திருக்கூடலூர் தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது. மதுரையை தென்திருக்கூடலூர் என்றும் இதனை வட திருக்கூடலூர் என்றும் கூறுவர். அதேபோல் ஆடுதுறை என்னும் பெயரும் இன்றைய தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் அமைந்துள்ள ஆடுதுறை என்னும் நகரமன்று. ஏற்கனவே சொன்னது போல் திருவையாறிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ள ஒரு சிறியகிராமம். இந்த எளிய கிராமத்தின் பெயர் ஆடுதுறை. இங்கு பெருமாளை எழுந்தருளச் செய்தமையால் “ஆடுதுறைப் பெருமாள் கோயில்” என்றே வழங்கப்படுகிறது.
வரலாறு
திருமால் வராஹ அவதாரமெடுத்துப் பூமிக்குள் புகுந்தது இந்த இடம்தான் என்று புராணங்கள் பேசுகின்றன. இதனைத் திருமங்கையின் மேற்படி பாடலும் சான்று காட்டும். திருமால் பூமியை (இவ்விடத்தில்) பிளந்து உள்புகுந்து ஸ்ரீமுஷ்ணத்தில் வெளியே எழுந்து அவ்விடத்துத் தம் தேவியைத்தாங்கி காட்சி தந்தார் என்பர்.
மஹாலெட்சுமியைக் காக்கும் பொருட்டு வராஹ அவதாரமெடுத்து ஸ்ரீமுஷ்ணத்தில் தேவியை அணைத்துக் காட்சிகொடுத்ததாலும் முதலில் இவ்விடத்தில் பூமியைக் கீறி உள்புகுந்ததால் திருமங்கை ஆழ்வார் இத்தலத்தைமட்டும் பாடி ஸ்ரீமுஷ்ணத்தைப் பாடாது விட்டாரென்றும் ஆன்மீக ஆய்வாளர் கூறுவர்.
ஒரு சமயம் அம்பரிஷன் என்னும் ஒரு மன்னன் மிகச்சிறந்த திருமால் பக்தனாகி மன்னர் பதவியை துறந்து மகரிஷி ஆனான். கடும் தவம் புரிவதிலும், கடுமையான விரதங்களைக் கடைப் பிடிப்பதிலும் அம்பரிஷன் தேவர்களிலும் சிறந்தவனாக விளங்கினான்.
அம்பரிஷியன் தவநிலையைச் சோதிக்க துருவாச முனிவர் அம்பரிஷியின் குடிலுக்கு வந்து அவரது ஏகாதசி விரதத்தின் பலனைக் கொடுக்குமாறு கேட்டார். துருவாசர் வந்திருப்பதையும் பொருட்படுத்தாது தனது விரதத்திலேயே அம்பரிஷி மூழ்கியிருந்தார். ஏகாதசி முடிந்து துவாதசிவந்துவிட்டது. அப்போதும் ஸ்ரீமந் நாராயணன் நினைவாக தவத்தில்ஆழ்ந்துவிட்டார் அம்பரிஷி.
தன்னைச் சற்றும் மதிக்காத நிலையைக் கண்ட கோபகுணம் கொண்ட துர்வாசர் அம்பரிஷிக்கு சாபம் கொடுக்க, அம்பரிஷி மகாவிஷ்ணுவை துதித்தார். மஹா விஷ்ணு துர்வாசர் மீது தனது சக்ராயுதத்தை ஏவினார். சக்ராயுதத்தை எதிர்த்து நிற்க முடியாத துர்வாசர் சக்ராயுதத்தை சரண் அடைந்து எம்பெருமானின் அடியார்களுக்கு அபச்சாரம் விளைவித்த தனது குணத்தை நொந்து தன்னைக் காப்பாற்றுமாறு மஹாவிஷ்ணுவை வேண்ட சக்ராயுதத்தை திருப்பிப் பெற்ற மஹாவிஷ்ணு துர்வாசரை மன்னித்தது இத்தலத்தில்தான்.
பிறகு திருமாலின் வேண்டுகோளின்படி பொன்னியாற்றின் கரையில் திருக்கோயில் எழுப்பி நீண்டநாள் வழிபட்டு பரகதியடைந்தான். அம்பரிஷனுக்கு அருளியதால் அம்பரிஷ வரதரென்றும் வையங்காத்த பெருமானென்றும் இங்கு பெருமாளுக்குத் திருநாமம் ஏற்பட்டது. இந்த அம்பரிஷனால் கட்டப்பட்ட கோயில் இப்போது இல்லை.
ஒரு சமயம் பொன்னியில் வெள்ளப்பெருக்கு உண்டாகி அதன் கரையிலிருந்த (காவேரிப் பிரளயம் என்றும் இதனைக் கூறுவர்) இக்கோவில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து மண்மேடாகிவிட்டது. மூலவரும் உற்சவரும்தாயாரும், இதர விக்ரஹங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.
கோபுரத்தையும்,மதில்களையும், இதர விக்ரஹங்களையும் வெள்ளம் இடித்துச் சென்றாலும் மூலவர், உற்சவர், தாயார் மட்டும்பொன்னியின் போக்கில் சென்று ஒருபுறம் ஒதுங்கி நிற்க, மீன் வேட்டைக்குச்சென்று வந்த பரதவர் வலையில் சிக்கி அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டு அவர்களின் சேரியில் அமர்ந்தனர்.
வெள்ளம் வடிந்து வானம் வெறிச்சோடிய சில தினங்களில் மதுரையில்நிலாமுற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளின் கனவில்மஹாவிஷ்ணு தோன்றி ஆற்றங்கரையில் ஒதுங்கிச் சேரியில் இருக்கும் தமக்கு கோவில் கட்டுமாறு கேட்டுக்கொள்ள தனது தளபதி கிருஷ்ண ராஜுநாயக்கருடன் படை பரிவாரத்துடன் தஞ்சைத் தரணி நோக்கிப் புறப்பட்டு அழிந்த கோவிலைப் பார்வையுறுங்கால், சேரித் தலைவன் மீனவன் ராமன் என்பான் ஓடிவந்து இறைவன் தமது சேரியிலிருப்பதை தெரிவிக்க, ராஜ மரியாதையுடன் வழிபாடியற்றி அவைகளைப் பெற்றுக் கொள்ள எவ்விடத்தில்கோவில் கட்டுவதென்ற ஐயம் எழ, சேரிக்கருகாமையில் பேரொளி தோன்றி அது ஓரிடத்தில் நிலைத்து நின்று மறைய இறைவனும் குறிப்பால்உணர்த்தினான் என்றே நினைத்து அவ்வொளி தோன்றிய இடத்தில் (ஆடுதுறை கிராமத்தில்) ராணி மங்கம்மாவினால் இப்போதுள்ள கோவில் கட்டப்பட்டது.
மூலவர்: வையங்காத்த பெருமாள் (ஜெகத்ரட்சகன்) உய்யவந்தார் என்னும் திருநாமம் நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருக்கூடலூர் வையங்காத்த பெருமாள் – ஜெகத்ரட்சகன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.