குழந்தை பேறும், செல்வ செழிப்பும் கிடைக்க நாறும்பூநாதா
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வீரவநல்லூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புடை மருதூர். இங்குள்ள நாறும்பூநாதர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். ஊருக்கு மேற்கில் ஆற்றின் கிழக்கு கரையோரமாக அமைந்து உள்ள ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையும், பதினோரு கலசங்களையும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கருவறை, விஜயநகர பேரரசர்கள் மற்றும் நாயக்கர்களால் செய்யப்பட்ட திருப்பணி களால் கோவில் சிறப்புற்று விளங்குகிறது.
நாறும்பூநாதர் என்பது இங்கு எழுந்தருளியுள்ள இறைவனின் திருநாமம் ஆகும். இத்தலத்திற்கு திருப்புடைமருதூர் என்ற பெயரோடு மருதபுரம், சுந்தரவனம், புடார்ச்சுனம், தட்சிணகாசி, சுரேந்திரபுரி என்ற பெயர்களும் உள்ளன. தற்போது திருப்புடைமருதூர் என்ற பெயர் மட்டுமே நிலைத்து விட்டது.
கருவூர் சித்தர் பல்வேறு கோவில்களுக்கு சென்று வணங்கி வருகையில் தாமிரபரணியின் வடக்கரை வழியாக வரும்போது மறுக்கரையில் இக்கோவிலை கண்டார். கோவிலுக்கு செல்ல முடியாதபடி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அங்கு உறையும் இறைவன் பெயர் அறியாத கருவூரார் அங்கிருந்து வரும் மலர்களின் மணத்தை அறிந்து இறைவனை ‘நாறும்பூநாதா’ என சத்தம் போட்டு அழைத்தார்.
“நாறும்பூநாதா, உன்னை காண முடியாமல் ஆற்றிலே வெள்ளம் போகிறதே, நான் சொல்வது உனக்கு கேட்கிறதா?” என்று கேட்க இறைவன் தனது திருமேனியை இடப்பக்கம் சரித்து செவிமடுத்து கேட்க சித்தர், வெள்ளத்தை நிற்கும்படி இறைவனிடம் வேண்ட சித்தருக்கு இறங்கி வெள்ளம் வழிவிட்டு நிற்க இறைவனை வணங்கி கருவூர் சித்தர் அருள் பெற்றதாக வரலாறு தெரிவிக்கிறது.
இதன் வெளிப்பாடாக இன்றும் சாய்ந்த நிலையிலேயே பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் புடார்ச்சுன பெருமான். இங்குள்ள அம்மனின் பெயர் கோமதி அம்பாள். அபூர்வமான நீலக்கல் திருமேனி உடைய இந்த அம்பாள் அருளே வடிவானவள். இந்த அம்பாள் பெண்களின் நோய்களை தீர்ப்பதில் சிறப்பானவள்.
பேய் மற்றும் கெட்ட ஆவி பிடித்த பெண்கள், மனநலம் சரியில்லாதவர்கள் அம்பாள் சன்னிதியில் இருந்து தினமும் வழிபட்டால் 21 நாட்களில் குணமாகும். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்கள் நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் பாயாசம் வைத்து ஆற்றங்கரையில் நீராடி படித்துறையை கழுவி அதில் வைத்து சாப்பிடுவார்கள். இதை படி பாயாசம் என்பர்.
தீர்த்தத்தின் சிறப்பு :
புண்ணிய நதியாம் தாமிரபரணி, கடனா நதி, ராமநதி ஆகிய மூன்றும் சங்கமித்து வடக்கு நோக்கி தாமிரபரணி இங்கே உத்தரவாகினியாக ஓடுவதே தனி சிறப்பாய் கருதப்படுகிறது. உலகில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் இவளை உபாசனை பண்ணியே தீர்த்த சக்தி பெறுகின்றன. சிவசக்தி ரூபினியான இவள்(ஆறு) பரமசிவன் அம்சமாகவும், பார்வதி அம்சமாகவும் மற்ற அங்கங்கள் பல்வேறு தேவர்கள் அம்சமாகவும் விளங்குகின்றன. தைப்பூச தீர்த்தவாரியில் கலந்து கொண்டு இத்தலத்து இறைவனை வழிபடுவது மிக சிறப்பாகும். இவ்வாறு வழிபட்டால் ஆண்டு முழுவதும் உடல் நலத்துடன், செல்வ செழிப்பும் கிடைக்கும்.
இக்கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்து இருக்கும். திருநெல்வேலி-பாபநாசம் வழித்தடத்தில் வீரவநல்லூர் சென்று அங்கிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலுக்கு மினி பஸ், ஆட்டோவில் சென்று வரலாம்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post குழந்தை பேறும், செல்வ செழிப்பும் கிடைக்க நாறும்பூநாதா appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.