கோபுர தரிசனம் கோடி புண்ணியம் வேதராஜன் திருக்கோயில், திருநகரி
‘திருநகரி ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!
வாலியைக் கொன்று அரசு இளையவானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணிகரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!
ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ.’
-குலசேகராழ்வார்
திருநெல்வேலி நவதிருப்பதிகளில் திருத்தொலைவில்லி மங்கலத்தை இரட்டைத் திருப்பதி என்று சொல்வார்கள். அதாவது இவை இரண்டும் சேர்ந்தே ஒரே திவ்யதேசமாக விளங்கும். அதைப் போல, தஞ்சாவூரை அடுத்த தஞ்சை மாமணிக் கோயில் என்னும் திவ்ய தேசம் மூன்று தனித்தனிக் கோயில்களைத் தன்னுள் அடக்கியது.
அதைப்போலவே இப்போது நாம் காணவிருக்கும் திருநகரித் திருக்கோயிலுமாகும். நேற்று நாம் கண்ட திருவாலி திருக்கோயிலிலிருந்து சுமார் நாலைந்து கிமீ தொலைவில் அமைந்திருந்தாலும், திருவாலி- திருநகரி ஆகிய இரண்டும் ஒரே திவ்ய தேசமாகவே வைணவர்களால் கருதப்படுகின்றன. 108 திவ்யதேசங்களுள் சோழ திருப்பதிகளில் இவை 34வது ஆக விளங்குகின்றன.
தலபுராணம்
பிரம்ம புத்ரன் பிரஜாபதி தனக்கு முக்தி வேண்டித் தவம் செய்ய பெருமாள் அவன் முன் தோன்ற காலதாமதமாக்கினாராம். இதனால் சினந்த இலக்குமி தேவி (அவளுக்குப் பேரன் இல்லையா!) பெருமாளைக் கோபித்து, விலகி இங்குள்ள குளத்தில் மறைந்து கொண்டாள். எந்நேரமும் தன் மார்பை விட்டு நீங்காத திருமகள் மண்ணுலகில் எங்கோ ஒளிந்தது கண்டு மருகிய மாலவன் எங்கெங்கோ தேடி இறுதியில் இங்கே கண்டு ஆனந்தமடைந்து ஆலிங்கனம் செய்து கொண்டான்.
இவ்வாறு அடுத்துள்ள திருவாலியிலும் ஆலிங்கனக் கோலத்தில் பெருமாள் இருப்பதாலேயே இவை இரண்டும் ஒரே திவ்யதேசமாகக் கூறப்பட்டதாகச் சொல்வர். இங்கு மூலவர் வேதராஜன் என்றும் உற்சவர் கல்யாண ரங்கநாதன் என்றும் வழங்கப்படுகிறார்கள். தாயாரின் திருப்பெயர் அமிர்தவல்லி என்பதாகும்.
தலச்சிறப்பு
திருநாங்கூர் முழுதுமே திருமங்கையாழ்வானைப் போற்றும் திவ்யஷேத்திரமாகும். இங்குதான் அண்ணன் கோவிலில் அவர் தன் மனம கவர்ந்த குமுதவல்லியை மணந்தார். இதற்கு அருகிலுள்ள தேவராஜபுரத்தில்தான் எம்பெருமானின் கால் கட்டை விரலைக் கடித்து ஞானோபதேசம் பெற்றார். அத்தகு பெருமை வாய்ந்தது இவ்வூர். இத்திருத்தலத்தில் திருமங்கையாழ்வாருக்கென்று ஒரு தனிச்சந்நதி அமைந்துள்ளது. அதில் கையில் திருஞான சம்பந்தர் அளித்த வேலுடன் அவர் காட்சி அளிக்கிறார். பின்னவர் தான் வியக்கும் வண்ணம் கவி பாடியதற்காக முன்னவருக்கு அளித்த காணிக்கை இந்த வேல் என்று கூறுவர். கல்வியிற் சிறந்து விளங்க வேண்டுவோர் காண வேண்டிய தலமாகும் இது.
பஞ்ச நரசிம்மரில் இரு நரசிம்மர்களை இத்தலத்தில் காணலாம். மூலவருக்குப் பின்புறமாக யோக நரசிம்மரும், மூலவர் சந்நதிக்கு இடது புறத்தில் மேற்சுவரில் பொறிக்கப்பட்ட ஹிரண்ய நரசிம்மரும் அமைந்துள்ளன. மறைகளைப் படைத்த பிரம்ம தேவனின் மகன் தவம் செய்த தலம் என்பதால், ஞானம் வேண்டுவோர் வழிபட வேண்டிய தலமாகும் இது. இவ்வுலகுக்குத் தேவையான பொருட்செல்வத்தையும் இங்கு வந்து இறைஞ்சுவோருக்கு இல்லை என்று கூறாது அள்ளி வழங்கி அருள்பாலிக்கும் தலமும் இதுவேயாகும் என்றும் கூறுவர்.
பெருமாளுக்கும் பிரமனுக்கும் தகப்பன் – மகன் உறவு உண்டு என்பதால், அந்த உறவில் துன்பங்கள் ஏற்பட்டு வருந்துவோர் இங்கு வந்து வழிபட்டால் உறவு சீரடைந்து நல்வினை ஏகுவர் என்பது நம்பிக்கை. திருமாலே காணாமல் போன திருமகளைத் தேடியலைந்து இங்கு வந்து அடைந்தான் என்னும் காரணத்தால், வாழ்வில் பொருளையோ, உறவையோ, நிம்மதியையோ தொலைத்தவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் பலன் உண்டு.
வெண்ணை திருடியவன் வேங்கடத்தில் நின்றருள்வான்
கண்ணைத் தொலைத்தாற்போல் காந்தத் திருமகளாம்
பெண்ணவளைத் தேடிக்கண்டு பேரின்பம் கொண்டுநின்றான்
எண்ணம்திரு நகரியில்வைப்பீர் எந்நாளும் திருநாள்காண்பீர்!
ஓம் நமோ நாராயண!
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் வேதராஜன் திருக்கோயில், திருநகரி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.