குழந்தைகளின் வாக்கு வன்மையை வலுப்படுத்தும் வராஹி தேவி
சப்த மாதாககளில் ஒருவராகக் கருதப் பட்டாலும் இந்த அம்மையே மூவரும் யாவரும் தேவர்களும் போற்றத்தக்க ஆதிபராசக்தியாகவும் கருதி வழிபடுதலும் ஒரு மரபாக இருந்து வருகிறது.
அன்னையை, வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ (பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி என்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட வராஹியின் வரம் அவசியம்.
“வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ்வையகத்தில்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹி தன் பாதத்தை அன்பில் உன்னி
மால் அயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே”
வாராஹி தேவி சரஸ்வதி தேவியின் ஓர் அம்சமாக விளங்குவதால் இவளே வாக்குக்கு அரசி. வலிமைக்கு அரசி. வளமைக்கு அரசி. செழுமைக்கு அரசி. செங்கோலுக்கு அரசி. கருணையின் மொத்த வடிவமாகக் காட்சி தருபவள் வாராஹிதேவி. வாராஹியை வார்த்தாளி என்றும் சொல்லுவார்கள் ஏனெனில் அவள் தன்னுடைய குழந்தைகளின் வாக்கு வன்மையை வலுப்படுத்துகிறாள். எதிரிகளின் வாக்கினைச் சீர்குலைக்கிறாள். அடக்கி வைக்கிறாள்.
இத்தகைய வலிமை பொருந்திய வராஹி தேவி நமது பிரம்மசக்தி ஆலயத்தில் சாந்த சொரூபியாக கத்தி, சங்கு, ஓலைச்சுவடி, திரிசூலம் ஆகியவற்றைக் கைகளில் ஏந்தி சதுர்புஜ நாயகியாக வடதிசை நோக்கி மகிஷ வாகனத்தில் எழுந்தருளி அனைவருக்கும் ஆசி வழங்கி வருகின்றாள். தேவீம் நித்யப்ரசன்னாம் என்று தியான ஸ்லோகத்தில் வர்ணிக்கப்படும் இந்த அம்மை கேட்டதைக் கேட்டவுடனே கேட்டவாறு வழங்கும் இயல்புடையவள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து குறைகள் தீர்க்கும் தெய்வத்தாய் அவள்.
தெந்திசைத் தெய்வம் என்று வாராஹி அம்மை தியான சுலோகத்தில் போற்றப்படுகிறாள். செந்தமிழால் போற்றினாலும் பேசினாலும் இந்த அம்மைக்கு மிகவும் பிடிக்கும். அப்படியே நெகிழ்ந்து போய் அவர்களது நெஞ்சக் கமலத்தில் எழுந்தருளி பரவசத்தில் ஆழ்த்திடுவாள். திருவானைகாவில் எழுந்தருளியிருக்கும் அகிலாண்டேஸ்வரி அம்மன் வாராஹியின் அம்சத்தில் உதித்தவள் என்று சொல்லப்படுகிறது. அரசியல் செல்வாக்குடன் திகழவேண்டுமானால் இவளையே சரணம் அடைதல் வேண்டும். அரசு கட்டிலில் இருப்பவர்கள் தவறு செய்தால் அவர்களை உடனடியாகத் தண்டிப்பதற்கு வாராஹிதேவியின் அம்சமான அஸ்வாரூடா தேவியால்தான் முடியும். தர்மம் தழைத்திடவும், அதர்மம் அழிந்திடவும், எங்கும் அமைதி நிலவிடவும், வாராஹி தேவியை ஒருமையுடன் சிந்திப்போம். உய்வு பெறுவோம். இந்த உலகத்தை அழிவுப் பாதையிலிருந்து காப்பாற்றும்படி வேண்டிக்கொள்வோமாக.
ஓம் ஐம் கிலெளம் ஐம் மகா வாராஹியே நமக
வாராஹி தேவியின் தரிசனம் காண்போம். அவள் வாரி வழங்கும் பரிசில்களைப் பெற்று ஆனந்தமாக வாழ்வோம்.
”ஐம் க்லெளம் ஐம் எனத் தொண்டர் போற்ற அரிய பச்சை
மெய்யும் கருணை வழிந்தோடு கின்ற விழியும் மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கணெதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே”
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post குழந்தைகளின் வாக்கு வன்மையை வலுப்படுத்தும் வராஹி தேவி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.