பகளாமுகி தேவி அசுரனின் நாக்கை பிடித்து இழுப்பது ஏன்
முன்னர் ஒரு காலத்தில் மதன் என்றொரு அசுரன் இருந்தான். அவன் பல தவங்களை செய்து அளவற்ற சக்திகளை, முக்கியமாக வாக்கு சித்தியை பெற்று இருந்தான். அதைக் கொண்டு அவனால் அவன் இருந்த இடத்தில் இருந்தே சித்தி, பூஜை மந்திர ஒலி போன்ற எவற்றையும் எந்த இடத்திலும் தடுத்து நிறுத்த முடியும் எனும் வாக்சித்தி வரமாகும். ஆனால் அந்த வரத்தின் பின்னே அவனுக்கே தெரியாத இன்னொரு துணை விதியும் இருந்தது. அதன்படி அவனால் பேச முடியாதபடி அவனது நாக்கு வன்மை சில நொடிகள் கட்டுப்படுத்தப்பட்டாலும் அவன் அந்த சக்தியை இழந்து விடுவான் .
அவனுடைய மனம் போன போக்கில் எங்கெல்லாம் பூஜைகளும் யாகங்களும் செய்யப்பட்டனவோ அங்கெல்லாம் ஓதப்பட்ட மந்திரங்களை உச்சரிக்க விடாமல் தடுத்தான். அதனால் அனைவருடைய சித்திகளும், பூஜை மந்திர ஒலிகளும் நின்றன. எவர் எதை ஒதினாலும் அவன் அவற்றை தன் வாக்கு வலிமையினால் தடுத்தான். தேவர்களை மட்டும் அல்லாமல் பூமியில் இருந்தவர்களையும் கொடுமைபடுத்தினான்.
ஆகவே அவனது தொல்லையை சகிக்க முடியாமல் போன தேவர்கள் தம்மை அவனது கொடுமையில் இருந்து காப்பாற்றுமாறு பகளாமுகி தேவியை வேண்டிக் கொள்ள அதனால் கோபமுற்ற பகுளாமுகி தேவி அந்த அசுரன் மீது படையெடுத்து வந்து அவனுடன் சண்டையிட்டு அவன் நாக்கைப் பிடுங்கி எறிந்து அவனுடைய வாக்கு சக்தியை அழித்தாள். நாக்கு இருந்தால்தானே எதையும் உச்சரிக்க முடியும்.
அதனால்தான் அவன் நாக்கைப் பிடுங்கி எறிந்து அவனை பேச இயலாதவனாக்கி அவன் சக்தியை அழித்தாளாம். அவனைக் கொல்லும் முன் அவன் அவளிடம் ஒரு வேண்டுகோள் வைத்தான். தன்னுடைய நாக்கை பிடுங்கி எறியும் அதே காட்சியில் பக்தர்கள் அவளை ஆராதிக்க வேண்டும் என்பதே அந்த வேண்டுகோள். அதை பகளாமுகி தேவி ஏற்றுக் கொண்டதினால் அதே கோலத்தில் ஆலயங்களில் காட்சி தந்து அவள் வணங்கப்படுகின்றாள்.
ஒரு தீயவனின் வேண்டுகோளை அந்த பகளாமுகி தேவி ஏன் ஏற்றுக் கொண்டால் என்பதற்கும் ஒரு பின்னணிக் கதை உண்டு. அசுரன் மதன் கொல்லப்பட்டதற்கு பல காலத்துக்கு முன்னர் அவனும் ஒரு தேவ கணமாகவே இருந்திருந்தான்.
தேவ லோகத்தில் இருந்தவாறு பார்வதி தேவிக்கு உத்தமமான முறையில் பணிவிடைகளை செய்து வந்ததினால் அவனுக்கு தேவலோகத்தில் பெரும் மரியாதை இருந்தது. ஆனால் ஒருநாள் அவன் பார்வதி தேவி தியானத்தில் இருந்தபோது அதை அறியாமல் உரத்த குரலில் பூஜை மந்திரத்தை உச்சரிக்கத் துவங்க பார்வதி தேவியின் தியானம் கலைந்தது. அதனால் கோபமுற்று கண் விழித்த பார்வதி தேவியும் அந்த தேவ கணத்தை அது ஒரு அசுரனாகப் பிறந்து அதே வாக்கு வலிமையினாலேயே அவமானப்பட்டு அழிவை எய்துவான் என சாபமிட்டுவிட அந்த தேவகணமும் அவள் கால்களில் விழுந்து அறியாமல் தான் செய்துவிட்ட பிழையை மன்னிக்குமாறு வேண்டிக் கொள்ள பார்வதி தேவியும் கொடுத்த சாபத்தை விலக்கிக் கொள்ள முடியாது என்பதினால் கருணைக் கொண்டு தனது சாபத்தின் தன்மையை மாற்றி அமைத்தாள்.
அதன்படி அவனுக்கு வாக்கு வலிமையினால் ஏற்படும் மரணம் தனது சக்தி கணத்தினால்தான் நடைபெறும், அதன் பின் அவன் மீண்டும் தன்னுடன் இணைந்து விடுவான் என்றாள். அதனால்தான் பார்வதியின் அவதார ரூபமான பகளாமுகி தேவியே அவனது அடுத்த பிறவியான அசுரன் மதனுடைய நாக்கைப் பிடுங்கி எறிந்து அவன் வாக்கு வலிமையை அழித்துக் கொன்றாள். அவனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவன் நாக்கை பிடுங்கி எறிந்த கோலத்திலேயே பகளாமுகி தேவி தனக்கு தரப்படும் பூஜைகளையும் ஆலயங்களில் ஏற்றுக் கொள்ளத் துவங்கினாள்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post பகளாமுகி தேவி அசுரனின் நாக்கை பிடித்து இழுப்பது ஏன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.