கோபுர தரிசனம் கோடி புண்ணியம் வீரராகவப் பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர்
‘தையலாள் மேல் காதல் செய்த தாளவன் வாளரக்கன்
பொய்யிலாத பொன்முடிக ளொன்ப தோடொன்றும் அன்று
செய்த வெம்போர் தன்னிலங்கோர் செஞ்சரத் தாளூருள
எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.’
-திருமங்கையாழ்வார்
பெருமாளின் 108 திவ்யதேசங்களில் 59ஆவதாகப் போற்றப்படுவதும், சகலபிணிகளையும் தீர்க்க வல்லதுமானதும் வைத்திய வீரராகவர் உருவில் எம்பெருமான் அருள்பாலிப்பதுமான இக்கோயில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து பேருந்து வசதி உண்டு.
சுமார் 2000 வருடங்கள் பழமையான இத்தலம் எவ்வுளூர், திருஎவ்வுள் என்று புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. மூலவர் உற்சவர் ஆகிய இருவரும் வீரராகவன் என்றே கூறப்பட்டாலும், வைணவ இலக்கியங்கள் மூலவரை எவ்வுள் கிடந்தான் என்றே குறிக்கின்றன.
தலபுராணம்:
சாலிஹோத்ரா என்னும் ஒரு முனிவர் ஒரு வருடம் முழுதும் அன்ன ஆகாரம் இல்லாது தவம் இருந்து ஒரே ஒரு நாள் மட்டும் புசிக்கும் வழக்கம் கொண்டவர். அது போல் ஒரு முறை ஒரு வருட தவத்துக்குப் பின்னர் அவர் தாம் புசிக்க பெருமாளுக்கு நிவேதனம் செய்த மாவை எடுக்க ஒரு முதிய அந்தணர் பசி என்று வரவும், அவருக்குச் சிறிது கொடுத்தார்.
அவரோ அதை உண்டு விட்டு மேலும் கேட்க இன்னமும் கொடுத்தார். இவ்வாறாக, அந்த முதியவர் எல்லா மாவையும் உண்டு விடவே முனிவர் தன் பசிக்கு உணவேதும் உட்கொள்ளாமலேயே அடுத்த ஒரு வருட தவத்திற்காகச் சென்று விட்டார்.
அத்தவம் முடிந்து மீண்டும் உணவுண்ண வரும்போது, மாவைக் கையில் எடுத்துக் கொண்டு அந்த அந்தணர் இப்போதும் வருகிறாரா என்று பார்க்க அதே போல் அவரும் வந்தார். உணவு யாசித்தார். உண்டபின்னர், படுத்துறங்க இடம் நாடி, ‘எவ்வுள்?’ எனக்கேட்டார் முனிவரிடம்.
முனிவர் தமக்கான இடத்தைக் காட்டி, ‘இங்கேயே படுக்கலாம்’ என்று கூறவும், மறுகணம் அந்தணர் வடிவில் வந்த அனந்தன் தன் முழு உருவைக் காட்டி, என்ன வரம் வேண்டும், கேள்’ என்றான் முனிவரிடம். தனக்கென அன்றி பிறர்க்கெனவே வாழும் முனிவர், அவ்விடம் வரும் அன்பர்கள்தம் கவலைகளை நீக்க வேண்டும் எனக் கோர, அச்சுதனும் அவ்வாறே அருளினான். எவ்வுள் என இறைவனே வினவியதால், இத்தலம் திருஎவ்வுள் என்றானது.
மூலவர், உற்சவர் இருவருமே வீரராகவன் என்றாலும், மூலவர் எவ்வுள் கிடந்தான் என்றும் உற்சவர் வைத்திய வீரராகவன் என்றும் அழைக்கப்படுகின்றனர். தாயாரின் திவ்யநாமம் கனகவல்லி (வசுமதி தேவி) என்பதாகும்.
தலச்சிறப்பு:
திருமங்கைஆழ்வார், திருமழிசைபிரான், ஸ்ரீ வேதாந்த தேசிகன் என மூவர் மங்களா சாசனம் செய்த தலமாகும் இது. கங்கையை விடவும் புனிதமானதாகக் கருதப்படும் இத்திருக்குளத்தில் நீராடினால் மனதில் எண்ணும் பாவங்களும் மறைந்து போகும். பிணி தீர்க்கும் பெம்மானாக வைத்திய வீரராகவன் விளங்குகிறார். தொடர்ந்து மூன்று அமாவாசைகளுக்கு இங்கு வந்து நீராடித் தொழுதால் தீராத நோய்களும் தீரும்.
மகாவிஷ்ணுவை லட்சுமிதேவி வசுமதி என்ற பெயரில் இங்கு திருமணம் செய்து கொண்டதால் இது திருமணம் அருளும் தலமாகவும் விளங்குகிறது. இத்தலம் புத்திரபாக்கியம் அருளும் தலம் என்றும் கூறப்படுகிறது. உடம்பில் உள்ள மரு, கட்டி ஆகியவை மறைய இத்தலத்து குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் கரைக்கிறார்கள். கோயில் மண்டபத்தில் உப்பு மிளகு ஆகியவற்றை சமர்ப்பிக்கின்றனர். சைவர்களுக்கு வைத்தீஸ்வரன் கோயில் எவ்வாறோ, அதைப்போல வைணவர்களுக்கு இக்கோயிலாகும்.
தன்பசி எண்ணாது தன்னிடம் வந்தவன்
தன்பசி தீர்த்தான் தலைசாய்த் துறங்கவும்
தன்னிடம் தந்தான் தனக்கே அருளினான்
தன்னிகர் இல்லான் தலை.
ஓம் நமோ நாராயணா!
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் வீரராகவப் பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.