விதியும், திதியும் மாறி எம பயம் போக்கும் திருக்கடையூர் அபிராமி அம்மன்
எமனை அழித்து, மார்கண்டேயருக்கு என்றும் பதினாறாய் இருக்கும் சிரஞ்சீவி தன்மை அளித்து கால சம்ஹார மூர்த்தியாக அருள்பாலிப்பவர் திருக்கடவூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர். தற்போது இத்தலம் திருக்கடையூர் என்று அழைக்கப்படுகிறது. எம பயத்தைக் கடக்க உதவும் ஊர் என்பதால் “கடவூர்” என்று பெயர் பெற்றது. திருக்கடையூர் என்றால், அமிர்தகடேஸ்வரரை அடுத்து அனைவரின் நினைவுக்கு வருவது அன்னை அபிராமி.
அதுபோல அபிராமிபட்டர் அமாவாசை அன்று அரசர் ‘என்ன திதி?’ என்று கேட்டதற்கு, தெய்வச் சன்னிதியில் சிந்தையைச் செலுத்தி இருந்ததால் அரசர் கேள்விக்கு திதியை மாற்றி பவுர்ணமி என்று சொல்லி விட்டார்.கண் விழித்துப் பார்த்தபோது ‘இன்று அமாவாசை அல்லவா’ என்று எல்லோரும் சொன்னார்கள்.
‘நான் அம்பிகையின் பக்தன் எனவே நான் சொல்லியதை அம்பிகை நடத்திக் காட்டுவாள்’
என்று அபிராமிப் பட்டர் சூளுரைத்தார். மாலைநேரம் வந்தது! வானில் சுடர்வருமோ இல்லை, எனக்கு இடர்வருமோ என்று பரிதவித்தபடியே அபிராமி அந்தாதி பாடலைத் பாடத் தொடங்கினார் அபிராமி பட்டர். 79-வது பாடலான ‘விழிக்கே அருளுண்டு..’ என்ற பாடலைப் பாடியவுடன் வானில் அபிராமி அன்னை நிலவைத் தோன்றத் செய்து அருள்புரிந்தாள்.
இறைவியைப் பார்த்து அபிராமிபட்டர் பாடிய ஓர் அற்புதமான பாடல்!
‘தனம் தரும், கல்விதரும் ஒருநாளும் தளர்வு அறியா
மனம்தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே’
மேற்கண்ட பாடல் அபிராமி அந்தாதியில் வரும் 69-வது பாடலாகும்.
அம்பிகை கடைக்கண் பார்த்தால் நமக்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை அபிராமிப் பட்டர் அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். இந்த உலகத்தில் நமக்கு வாழ்க்கை நடத்த முதலில் பணம் வேண்டும். எனவேதான் தனம் தரும் என்று முதல் சொல்லாக குறிப்பிட்டிருக்கிறார். அதற்குப் பிறகு கல்வி நமக்குத் தேவை என்பதால், கல்வி தரும் என்று குறிப்பிடுகிறார். என்ன இருந்தாலும் மனம் தளரக்கூடாது என்பதால் தளர்வறியா மனம் தரும் என்று சொல்கிறார். வஞ்சம் இல்லாத இனம் தரும் என்று அதற்குப் பிறகு குறிப்பிடுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக நல்லன எல்லாம் தரும் என்று ஒரே வரியில் பூர்த்தி செய்துவிடுகிறார்.
அன்னை அபிராமி மூன்றடி உயர பீடத்தில், நான்கு திருக்கரங்களுடன் அன்னை அபிராமி கிழக்குப் பார்த்த வண்ணம் நின்றத் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தல அன்னையை, சரஸ்வதிதேவி பூஜித்து அருள் பெற்றுள்ளார். கருவறையின் பின்புறம் சரஸ்வதி தேவிக்கும், அபிராமி பட்டருக்கும் தனிச் சன்னிதிகள் உள்ளன. திருக்கடையூரில் இன்றும் அபிராமி பட்டர் வாழ்ந்த வீடு இருக்கிறது.
தை அமாவாசை திருநாளில் அபிராமி அன்னையையும், அபிராமி பட்டரின் இல்லத்தையும் கண்டு தரிசித்து மகிழலாம். திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில், தை அமாவாசை அன்று இரவு 9 மணி அளவில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்க அபிராமி பட்டர் உற்சவம் நடைபெறும். அப்போது அபிராமி அந்தாதி பாடப்படும். அந்த சமயத்தில் அபிராமி அம்மன் நவரத்தின அங்கி அணிந்து வீற்றிருப்பார். ஒவ்வொரு பாட்டின் நிறைவிலும் அபிராமி அம்மனுக்கு தங்கக் காசு சமர்ப்பித்து, தீபாராதனை செய்யப்படும்.
79–வது பாடலின்போது ஆலய கொடி மரத்தின் அருகில் பவுர்ணமி தோன்றும் ஐதீக நிகழ்வு நடத்திக் காட்டப்படும். இதுவெறும் ஐதீகப் பெருவிழா மட்டுமன்று, பக்தர்களுக்கு நம்பிக்கையின் அவசியத்தையும், இறைவனிடம் நம்பிக்கையுடன் இருந்தால் அதற்கான பலன் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதையும் எடுத்துரைக்கும் தெய்வீகப் பெரு விழாவாகும்.
அபிராமி அம்மன், அமிர்கடேஸ்வரர் ஆகியோரும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இந்த தலத்தை விதியும், திதியும் மாறிய இடம் என்று சொல்வார்கள். மார்க்கண்டேயனுக்காக ‘என்றும் பதினாறாக’ விதி மாறியது இந்த தலத்தில் தான். எமன் அணுகாத ஷேத்திரம் என்று திருக்கடையூரை வர்ணிக்கிறார்கள்.
16 வயதில் மார்க்கண்டேயன், சிவனை இங்கு வழிபட்டபொழுது கூற்றுவன் பாசக்கயிற்றை வீசினான். சிவன் அங்கு வெளிபட்டு காலனை உதைத்தார். மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறாக வேண்டுமாய் அருள்பாலித்தார். அந்தக் கால சம்ஹார மூர்த்தியின் சன்னிதிக்கு நாம் சென்றால் வாழ்வில் வசந்தம் உருவாகும். ஆரோக்கியத் தொல்லை அகலும். ஆயுள் நீடிக்கும்.
அபிராமியின் கடைக்கண் பார்வையால் இத்தனையும் கிடைக்குமென்று அபிராமிபட்டர் புகழ்ந்துரைக்கிறார். அப்படிப்பட்ட அபிராமி அம்மன் ஆலயத்திற்கு, ஆண்டின் தொடக்க நாள், மாதத்தில் தொடக்க நாள், வாரத்தின் தொடக்க நாள் போன்ற நாட்களில் சென்று அன்னை அபிராமியையும், அமிர்தகடேஸ்வரரையும் வழிபட்டு வந்தால் எண்ணியது நடக்கும்.
The post விதியும், திதியும் மாறி எம பயம் போக்கும் திருக்கடையூர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.