கோபுர தரிசனம் கோடி புண்ணியம் சுந்தரவரதராஜப் பெருமாள் திருக்கோயில், உத்திரமேரூர்,காஞ்சீபுரம்
செங்கல்பட்டு – காஞ்சிபுரம் மார்க்கத்தில் உள்ள உத்திரமேரூரில் அமைந்துள்ளது இந்த அழகான, அமைதியான தலம். பெரும் பிராபல்யம் வாய்ந்த உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன் கோயிலுக்கு அருகிலேயே உள்ளதாகும் இது.
தலபுராணம்:
இத்தலத்திற்குத் தனியாக தலபுராணம் என்று விசேஷமாக ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சுமார் 13 நூற்றாண்டுகள் பழமையான இக்கோயில் பல்லவர் காலத்தது என்பதாகச் சொல்கிறார்கள். நந்தி வர்மன் காலத்தில் இங்கு பல பண்டிதர்கள் வசித்ததாகவும், இவ்வூர் அதன் காரணமாக சதுர்வேதி மங்கலம் என்றே அழைக்கப்பட்டதாகவும் சொல்வதுண்டு.
நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள் பாலிக்கும் சுந்தரவரதராஜரை, சௌந்தர்ய வரதராஜன் என்றும் சொல்கிறார்கள். தாயாரின் திவ்யநாமம் ஆனந்தவல்லி என்பதாகும். இத்தலத்தில் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சுந்தர வரதராஜனாகவும், அமர்ந்த திருக்கோலத்தில் பரமபத்ரநாதனாகவும், சயனத் திருக்கோலத்தில் ரங்கநாதனாகவும் காட்சி தருகிறார்.
ரங்கநாதருக்கு அருகில் மானுடனும் மழுவுடனும் சிவபெருமான் அருள் பாலிக்கிறார். மார்க்கண்டேய மஹரிஷிக்கு ரங்கநாதர் தன் வலக்கரத்தால் ஆசி தருகிறார். பொதுவாக, வலது காலை முன் வைப்பதே மங்களமானதாகக் கருதப்படும். ஆனால், இங்குள்ள ஆஞ்சநேயர் இடது காலை முன்வைத்திருக்கிறார்.
எதிரியின் நாட்டில் சிறைப்பட்டுள்ள சீதா பிராட்டியை மீட்டு வரப் புறப்படும் காரணத்தால், வதம் செய்யவேண்டியது எதிரியே ஆயினும் அது அமங்கலச் செயல் ஆனதால் அனுமன் தன் இடது காலை முன்வைத்தான் என்பது போல ஒரு சுவாரசியமான விளக்கம் சொல்கிறார்கள்.
இத்தலம் முதலில் பல்லவர்கள் கட்டிய சமணக் கோவிலாகவே இருந்தது என்றும், பின்னாளில் இது வைணவக் கோயிலாக மாற்றப்பட்டது என்றும் ஒரு சர்ச்சை உண்டு. மூலவருக்குப் பின்னால் உள்ள சிலையை மஹாவீரர் என்று சிலரும், பிருகு முனிவர் என்று ஒரு சாராரும் கூறுகின்றனர்.
நின்று இருந்து கிடக்கும் நிமலனவன்
தன்னடி சேர்ந்தோர் தமக்கே அருளியவர்
துன்பங் களொழித் துவளாது காத்திடுவான்
அன்னவன் தாளை அடை.
ஓம் நமோ நாராயணாய!
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் சுந்தரவரதராஜப் பெருமாள் திருக்கோயில், உத்திரமேரூர்,காஞ்சீபுரம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.