அறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே
புதனுக்குரிய பரிகார தலம் திருப்புள்ளம்பூதங்குடி வல்வில் ராமன் கோயில்
சக்கரவர்த்தி திருமகனான ராமரை நின்ற நிலையில் தான் தரிசித்திருப்பீர்கள். தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை அருகிலுள்ள திருப்புள்ளம்பூதங்குடி வல்வில் ராமன் கோயிலில், அவரை சயன கோலத்தில் தரிசிக்கலாம். இங்கு ராமநவமியன்று தேரோட்டம் நடக்கிறது.
தல வரலாறு:
சீதையை ராவணன் கடத்திச் சென்றபோது கழுகுகளின் அரசனான ஜடாயு அவனிடம் போரிட்டார். ஜடாயுவை ராவணன் வெட்டினான். ஜடாயு, “ராமா, ராமா’ என முனகியபடி குற்றுயிராக கிடந்தார். அந்த வழியே வந்த ராம, லட்சுமணர் முனகல் சத்தம் கேட்டு அருகில் சென்றனர்.
ராவணன் சீதையை கவர்ந்து சென்ற விஷயத்தை கூறிவிட்டு உயிர் விட்டார். வருந்திய ராமன் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார். ஈமக்கிரியை செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால் மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார்.
ராமனுக்கு உதவிபுரிவதற்காக சீதையின் அம்சமாக பூமாதேவி காட்சியளித்தாள். அவளோடு இணைந்து ஜடாயுவிற்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்தார். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.
தலபெருமை:
ஜடாயுவாகிய புள்ளிற்கு (பறவை) ராமன் ஈமக்கிரியை செய்த தலமாதலால் இவ்வூருக்கு “திருப்புள்ளம் பூதங்குடி’ என்ற பெயர் ஏற்பட்டது. தமிழகத்தில் இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர். ராமானுஜர் அவதரித்த இத்தலத்தை ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள். மற்றொன்று திருப்புள்ளம் பூதங்குடி. இதை ஆச்சாரியார்கள் சிறப்பித்தார்கள்.
ராமன் இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி அளிப்பது விசேஷம். திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது, இக்கோயிலில் வேறு ஏதோ தெய்வம் இருப்பதாக கருதி, கவனிக்காமல் சென்றார். அப்போது பெரிய ஒளி தோன்றி, அதிலிருந்து சங்கு சக்கரதாரியாக ராமன் காட்சியளித்தார்.
இதைக்கண்ட திருமங்கை, “அறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே,” என வருந்தி பத்து பாசுரங்கள் பாடினார். வலிய வில் வைத்திருந்ததால் இத்தல மூலவர் “வல்வில் ராமன்’ எனப்படுகிறார். தாயாருக்கு பொற்றாமரையாள் என்றும் ஹேமாம்புஜவல்லி என்றும் பெயர்கள் உள்ளன. இங்குள்ள தீர்த்தத்தை ஜடாயு தீர்த்தம் என்கின்றனர்.
சிறப்பம்சம்:
-
இந்தக் கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. 108 திவ்ய தேசங்களில் இது 10 வது தலம்.
-
நவக்கிரகங்களில் புதனுக்குரிய பரிகார தலமான இங்கு, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.
-
பித்ரு பரிகாரம் (முன்னோர் சாபம் தீர்தல்) செய்வதற்கும் ஏற்ற தலம். திருமணத்தடை உள்ளவர்கள் தாயாரை வழிபடுகின்றனர்.
-
பதவி உயர்வு எதிர்பார்ப்பவர்கள், பிரகாரத்தில் உள்ள யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வழிபடுகின்றனர்.
-
ஆயில்ய நட்சத்திரத்தினருக்கு ஏற்படும் திருமணத்தடை நீங்க விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.
-
ராமநவமியன்று (மார்ச் 28) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
இருப்பிடம்: சுவாமிமலையில் இருந்து 5 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 8.00-12.00, மாலை 4.00 -7.30.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post அறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.