மோகினி அவதார லீலைகளை நாரதர் மூலம் அறிந்து கொண்ட சிவபெருமான், அந்த அழகிய வடிவை காண ஆவல் கொண்டு, மாதவனை வேண்ட, அவரும் அதை காண்பிக்க, சிவபிரான் அவளை தழுவி சாஸ்தா என்னும் மாவீரனை பிறப்பித்தார்.
இனி:அகத்தியர் ஹே அஸ்வானநா !! பண்டாசுரன் எப்படி உண்டானான்? திரிபுராம்பிகை எவ்வாறு தோன்றினாள்? அவன் எப்படி கொல்லப்பட்டான்? விரிவாக கூற வேண்டும்.
தக்ஷ யக்ஞம்
ஹயக்ரீவர் : முன்னொரு சமயம், தட்ச பிரஜாபதியின் மகளாக பிறந்த தாக்ஷாயணியை ஈசன் மணந்தார். கிடைத்தற்கரிய பெருமை கிடைத்தும் அதை உணராத தட்சன், ஈசனை அவமதிக்கும் வகையில் ஒரு யாகத்திற்கு ஏற்பாடு செய்தான்.
இதனை அறிந்த தாக்ஷாயணி, மிகுந்த உற்சாகத்துடன் அங்கு செல்ல ஈசனை அழைத்தாள். ஆனால், ஈசனோ, அழையாத இடத்திற்கு சென்றால் அவமானமே மிஞ்சும் எனக் கூறி தடுத்தார்.
ஈசனின் தடுப்பையும் மீறி அங்கு சென்றவளுக்கு மகள் என்ற அன்பும் கிடைக்கவில்லை, ஈசனின் மனைவி என்ற மரியாதையும் கிடைக்கவில்லை.
அன்றியும், தக்ஷன் அவரை மிகவும் இழிந்துரைத்தான்.
தன் கணவனின் அவமதிப்பை தாங்க முடியாத தாக்ஷாயணி, யோகாக்னியால் அங்கேயே பிராணத் தியாகம் செய்தாள்.
இதனைப் பொறுக்க மாட்டாத ஈசன், தனது ஜடாமுடியிலிருந்து வீரபத்ரனை தோற்றுவித்து தக்ஷ யக்ஞத்தை நாசம் செய்ததோடு, அவன் சிரத்தை யும் அறுத்து வேள்வித் தீயிலிட்டார்.
அவனது மனைவியின் வேண்டுதலை ஏற்று, ஆட்டின் தலையைப் பொருத்தி உயிரூட்டி அவனது ஆணவத்தை அழித்து அருள் புரிந்தார்.
அடுத்த பிறவியில் தாக்ஷாயணி இமவான்-மேனை தம்பதியரின் மகளாக (அவர்களின் 1,50,000 ஆண்டு கடுந்தவத்தை மெச்சி) அவதரித்தாள். பார்வதி என்ற பெயர் சூட்டி அன்புடன் வளர்த்து வந்தனர்.
ஒரு நாள் இமவானின் அரண்மனைக்கு வருகை தந்த நாரதர் அவரிடம், நீ மிகவும் பாக்கியம் செய்தவன். பரம்பொருளான அன்னை ஆதிசக்தியே உனது மகளாக அவதரித்திருக்கிறாள்.
உனது பர்வதம் ஒன்றில் ஸ்தாணு ஆஸ்ரமந்தனில் சிவபெருமான் அன்னை தாக்ஷாயணியை பிரிந்த சோகத்தில் தவம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு பணிவிடை செய்ய உனது மகளை அனுப்புவாயாக என்று கூறினார்,இது கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சி கொண்ட இமவான் அவ்வாறே செய்தான்.
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 14) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.