அர்ச்சனை செய்பவரின் பெயருடன் நட்சத்திரம், கோத்திரம் இவற்றை ஏன் சொல்கிறார்கள்?
சில குறிப்பிட்ட வழிகளில் தெய்வங்கள் உருவாக்கப்பட்டபோது, பெயர், நட்சத்திரம், கோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வது போன்ற விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தன. வாழ்க்கையின் நுட்பமான தாத்பரியங்களை புரிந்துகொண்டு உருவாக்கப்பட்ட கலாச்சாரம் இது. ஆனால் அதை ஒரு தலைமுறையிலிருந்து, மற்றொரு தலைமுறைக்குக் கொண்டு செல்லும் அமைப்புகள், கடந்த ஆயிரத்து எண்ணூறு வருடங்களில், படையெடுப்புகள் மற்றும் பல காரணங்களால் மோசமாக நிலைகுலைந்துவிட்டன. இல்லாவிட்டால், இது மிக நுணுக்கமான ஒரு விஞ்ஞான முறையாக இருந்திருக்கும். இப்போது இவை மிகவும் தாறுமாறாக ஆகிவிட்டன.
அக்காலத்தில், அனைவரும் அனைத்துக் கோவில்களுக்கும் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. சில கோவில்கள் மட்டும் அனைவரின் நல்வாழ்வுக்காகவும் கட்டப்பட்டிருக்கும். அங்கு மட்டும் அனைவரும் சென்று வந்தனர். ஆனால் குறிப்பிட்ட சில பலன்களுக்காக, பிரார்த்தனைகளுக்காக என்றால், மக்கள் அவரவர் குலதெய்வங்களின் கோவிலுக்குத்தான் சென்றனர். இன்றும் கூட அந்தப் பழக்கம் சிலகுடும்பங்களில் எஞ்சியிருக்கிறது. ஆனால் அந்த தெய்வங்கள் முன்போல் விஞ்ஞான முறைப்படி உருவாக்கப்படுவதில்லை.
யாரோ ஒருவர் நூறு வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்டாலும், இன்று அந்த உடலைத்தேடி, தோண்டி எடுத்து, அதில் ஒரு சிறு எலும்புத் துண்டு கிடைத்தாலும் அதை பரிசோதனைக்கூடத்தில் மரபணு சோதனையெல்லாம் செய்து, ‘இவர்தான் உங்கள் தாத்தா’ என்று சொல்ல முடியும். பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் இறந்த யாரோ ஒருவருடைய எஞ்சிய பாகத்தை வைத்து பரிசோதனைகள் செய்யமுடியும். எகிப்தில் இருக்கும் மம்மிக்களின் மரபணுவை எடுத்து பரிசோதித்து, அதை இப்போது எகிப்தின் தெருக்களில் நடந்து போய்க் கொண்டிருக்கும் யாரோ ஒருவருடைய மரபணுவுடன் ஒப்பிட்டுப் பார்த்து, இவர்தான் அந்த மம்மியின் வம்சாவழியில் வந்தவர் என்று சொல்ல முடியும். நவீன விஞ்ஞானம் இந்த வாய்ப்புகளை உங்களுக்கு வழங்கியுள்ளது.
இதேபோலத்தான், நாமும் நம் குல தெய்வத்துடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும். ஆனால் அனைத்தையுமே நாம் சரியாக பராமரித்திருந்தால் மட்டுமே அது சாத்தியம். சமீபத்தில் ஹரியானாவில் காப் பஞ்சாயத்துக்களில் ‘ஒன்றுவிட்ட அண்ணன் தங்கைளுக்குள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது, அது பாவம்‘ என்று போராட்டங்கள் நடந்தது உங்களுக்குத் தெரியும். அவர்கள் இதையெல்லாம் புரிந்து கொண்டு போராட்டம் நடத்துகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் அதை புரிந்துகொண்டு செய்திருந்தால், அவர்களுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். நீங்கள் அவர்களுடைய வழக்கங்களை உடைக்கிறீர்கள் என்று அவர்கள் போராட்டம் நடத்தினாலும், ஆயிரக்கணக்கான வருடங்களாக தங்களது வம்சாவளி அமைப்பை அவர்கள் காப்பாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமுறை, தலைமுறையாய் தொடரும் கோத்திர முறையை குழப்பாமல் இருந்தால் புதிய தலைமுறைகள் நல்ல முறையில் உருவாகும் என்பதால் அதில் குழப்பம் ஏற்பட அவர்கள் விரும்பவில்லை. அது மட்டுமல்ல, தலைமுறை தலைமுறையாக குறிப்பிட்ட ஒரு சக்தியின் இழையை தொடரச்செய்ய முடியும். அப்படி இருந்தால் உங்கள் குலத்தில் இருப்பவர்கள் அனைவருமே கோவிலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் மட்டும் சென்று பிரார்த்தித்தால், அனைவரும் பலனடைவார்கள். ஏனென்றால் அனைவருமே ஒரே சக்தியின் ஒருங்கிணைப்பில் இருக்கிறீர்கள்.
The post கோவில்களில் அர்ச்சனை செய்வதன் முக்கியத்துவம் என்ன appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.