தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். ஆம். உண்மை தான். பசியோடு இருப்பவரிடம் சென்று நாம் என்ன சித்தாந்தம்,வேதாந்தம் பேசினாலும் எடுபடாது. நாம் உயிர் வாழ எது அவசியம், நீர், காற்று, உணவு என்ற பட்டியலில் உணவு ஒன்றை மட்டும் தான் நாம் அதிகமாக எடுத்துக் கொள்கின்றோம். காற்றும், நீரும் இயல்பாகவே நமக்கு கிடைக்கின்றது. ஆனால் உணவு அப்படி இல்லை. பசியின் நேரம் பார்த்து, வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி என்றால் அன்னமே பிரதானமாக இருக்கின்றது.
நாம் ஒவ்வொருவரும் கொண்டுஉள்ள உடல் உருவம் அன்னத்தினால் தான். நாம் எப்படிப்பட்ட உணவு உண்கின்றோமோ, அதனைப் பொறுத்து நம் குணங்கள் அமைகின்றது. உலகை மாற்ற விரும்பினால் உணவை மாற்றுங்கள் என்றும் நாம் கேட்டிருப்போம். அன்னம் இன்றி இவ்வுலக உயிர்கள் வாழ்வது கடினம். அன்னமின்றி வாழ மகான்கள்,சித்தர்கள்,ரிஷிகள் போன்றோரால் முடியும். நாம் மனித நிலை பற்றி மட்டுமே இங்கு பேசுகின்றோம்.
இத்துணை அமிர்தமான அன்னத்தை தானமாக கொடுப்பது என்றால் ஒன்றும் சிறிய விஷயம் இல்லை. மிகப் பெரும் விஷயம். கொடுக்கும் உள்ளம் வேண்டும். என்ன தான் கோடி ஆயிரம் ஆயிரமாக பணம் இருந்தாலும் கொடுக்கும் உள்ளம் இருந்தால் தான் அன்ன தானம் செய்ய இயலும். அன்ன தானம் செய்வது அனைத்தையும் தானமாக தருவது என்ற சூட்சும கருத்தை குறிக்கும்.
ஒரு சமயம் குந்தி தேவி ஸ்ரீகிருஷ்ணனை காண சென்றார்கள் அப்போது ஸ்ரீகிருஷ்ணன் பூஜை அறையில் பூஜை செய்துவிட்டு தியானத்தில் இருப்பதாக ஸ்ரீருக்மிணி கூறினார்கள் சிலநேரம் கழித்து ஸ்ரீகிருஷ்ணர் வெளியே வந்தார் அவரிடம் குந்திதேவி அண்டசராசரமும் உன்னை பூஜிக்கையில் நீ யாரை பூஜிக்கிறாய் தியானிக்கிறாய் என்று கேட்டார்கள் அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறியது
ஸ்ரீகிருஷ்ணர்
வணங்கும்_ஆறு_பேர்.
நித்யான்ன தாதா தருணாக்னிஹோத்ரி
வேதாந்தவித் சந்திர சஹஸ்ர தர்சீ
மாஸோபாவாசீச பதிவ்ரதா ச
ஷட் வந்தனீயா மம ஜீவ லோகே.:
இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்: அவர்கள்
தினமும் அன்னதானம் செய்வோர்,
தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர்,
வேதம் அறிந்தவர்கள்,
சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து சதாபிஷேகம் செய்துகொண்டோர்
மாதா மாதம் உபவாசம் இருப்போர்,
பதிவ்ரதையான பெண்கள்
என்று கூறி உள்ளார். இதில் முதலிடம் நித்ய அன்னதானம் செய்வோர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம். அதனால்தான் கிருஷ்ணபகவானும் கீதையில், “எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச்சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார் என்கிறார்”.
அன்னதானத்தில்தான் ஒருவரை பூரணமாக திருப்திபடுத்த முடியும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இதுபோன்றவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறவர்கள், அதற்கு மேல் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அன்னம் போடுகிற போதுதான் போதும் என்ற திருப்தி ஏற்படும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரத ரிஷிகளின் சமூக சிந்தனைதான் பசியற்ற பாரதத்தைக் காண விழையும் சிந்தனை. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற சிந்தனையால் விளைந்ததே அன்னதானம் என்கிற உயரிய தானம்.
அன்னதானத்தால் ப்ராணனையும், ப்ராணனால் பலத்தையும், பலத்தால் தவத்தையும், தவத்தால் ச்ரத்தையையும், ச்ரத்தையால் புத்தியையும், புத்தியால் மனத்தையும், மனத்தால் சாந்தியையும், சாந்தியால் சித்தத்தையும், சித்தத்தால் நினைவையும், நினைவால் ஸ்திதப்ரக்ஞையையும், ஸ்திதப்ரக்ஞையால் விஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னதானம் செய்வது இவையனைத்தையும் தருவதற்கு சமமாகும்.
The post வாழ்க்கையில். கடைபிடிக்கவேண்டியது-நிதானம் செய்யவேண்டியது-அன்னதானம் appeared first on SwasthikTv.