சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை “வர சதுர்த்தி” என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை “சங்கடஹர சதுர்த்தி” என்றும் கூறுவார்கள். வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்..
சிவபெருமான்,தனது பூத கணங்களுக்கு கணேசனை தலைவனாக ‘கணபதி’யாக நியமித்தார். பிரம்மதேவன் அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்ட ஸித்திகளையும், மனைவிகளாக அளித்து பலவாறு துதி செய்தார்.
கணபதியும் மனம் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ‘ என்று கூற
பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூறின்றி நிறைவேற வேண்டும்‘ என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
பூஜையின் போது பிரம்மன் தனக்களித்த மோதகங்களை கையில் எடுத்துக் கொண்டு,
உயரக் கிளம்பி உலகெல்லாம் சுற்றி, சந்திரலோகம் சென்றார். அங்கு பெருத்த தொந்தியும், ஒடிந்த தந்தமும், நீண்ட தும்பிக்கையும், கையில் கொழுக்கட்டையும் தாங்கி வருகின்ற விநாயகனைக் கண்டு சந்திரன் வாய் விட்டுச் சிரித்ததுடன் பரிகசிக்கவும் செய்தான்.
அதைப் பார்த்த விநாயகர் கோபம் கொண்டு, “ஏ! சந்திரனே நீ தான் அழகன் என்று கர்வம் கொண்டிருக்கிறாய்.இன்று முதல் உன்னை யாரும் பார்க்கக் கூடாது.
அப்படி யாராவது உன்னைப் பார்த்தால் அவர்களுக்கு வீண் அபவாதம் ஏற்படுவதாகுக” என்று சபித்தார்.சந்திரனும் ஒலி மங்கித் தண்ணீருக்குள் ஆம்பல் மலரில் மறைந்தான்.
சந்திரன் அழிந்ததைக் கண்டு வருந்திய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் தலைமையில்,பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனோ, தானோ, ருத்திரனோ, விஷ்ணுவோ இதற்கு ஒன்றும் செய்ய முடியாது என்றும், கணபதியைச் சரணடைவது தான் ஒரே வழி என்றும் கூறினார்.
மேலும் ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்றும் அதாவது பௌர்ணமிக்குப் பின் வருவது ,விரதம் ஏற்று பலவகையான பழங்கள், அப்பம், மோதகம் இவற்றுடன் சித்ரான்னங்கள் முதலியவற்றை கணபதிக்கு அளித்து,அந்தணருக்கு பக்தியோடு தாம்பூல, தட்சணைகளை அளித்தால் கேட்ட வரங்களை அளிப்பார் என்று பிரம்மா தெரிவித்தார். பிறகு தேவர்கள் குரு பிரகஸ்பதியைச் சந்திரனிடம் அனுப்பி விவரம் தெரிவித்தனர்.
சந்திரனும் இந்த பூஜை செய்ய, கணபதியும் மகிழ்ந்து பாலகணபதியாக, விளையாட்டு விநாயகனாக அங்கே காட்சியளித்தார். சந்திரனும் களிப்புற்று, அவரை நமஸ்கரித்தார் என்கிறது புராணம்!
“தவம் காரணம் காரண காரணாநாம் க்ஷமஸ்வ மே கர்வ க்ருதம் ச ஹாஸ்யம்“ என்று தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டார் சந்திரன்.
பிரம்மாதி தேவர்களும் சந்திரனுக்கு கணபதியிட்ட சாபத்தை நீக்கியருள வேண்டினர்.
கணபதியும் சாபவிமோசனம் அளித்தார். ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி’யிலும் மோதகம், அப்பம் முதலியவைகளுடன் என்னைப் பூஜித்த பின், ரோகிணியுடன் கூடிய சந்திரனான உன்னைப் பூஜிப்பவர்களுக்கு கஷ்ட நிவாரணம் செய்கிறேன்’ என்று விநாயகரே அருளினார். இதையே சங்கடஹர சதுர்த்தி என போற்றப்படுகிறது..
சதுர்த்தியின் மகிமை:
சியமந்தக மணி என்ற ரத்தினத்தின் காரணமாகப் பல துன்பங்களுக்கு ஆளான ஸ்ரீகிருஷ்ணனுக்கு, நாரதர் இந்த சரிதத்தை விளக்கிச் சொல்ல, ஸ்ரீகிருஷ்ணனே சங்கடஹர சதுர்த்தி பூஜை செய்து அவப்பெயர் நீங்கப் பெற்றார் என்று தெரிவிக்கிறது ஸ்காந்தபுராணம்!
காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.
பார்வதி இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர்.
முதன்முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.
சங்கடஹர சதுர்த்தி
விரதம் இருக்கும் முறை !
சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை யில் எழுந்து நீராடி, அலங்கரிக்கப்பட்ட விநாயகப்பெருமான் சிலை அல்லது படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். அவரை வழிபட சாஸ்திரம் படிக்க வேண்டும் என்பதில்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். முடிந்தவர்கள்,
‘சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்!
பிரஸன்ன வதனம் தியாயேத்
ஸர்வவிக்ன உபசாந்தயே’ – எனக் கூறலாம்.
விநாயகப்பெருமானே உன்னை நினைத்து நான் இந்த விரதத்தை தொடங்கி இருக்கிறேன். எந்த இடையூறும் இல்லாமல் நடத்தி கொடுத்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அன்று முழுவதும் விரதம் இருந்து விநாயகரை அருகம்புல்லினால் பூஜிக்க வேண்டும். நாவல்பழம், கொய்யா, பேரிக்காய், கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை படைக்கலாம்.
மாலையில் மீண்டும் நீராடி விநாயகரை இரவு சந்திரோதயத்தை பார்த்து வணங்க வேண்டும். விநாயகருக்கு படைத்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாக உட்கொள்வது சிறப்பு.
நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விரதம் மேற்கொள்பவர்கள் கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். விநாயகர் அகவல், விநாயகர் புராணத்தை படிப்பதும் நன்மைகளை தரும்.
சங்கடஹர சதுர்த்தி நாளில், மாலையில் விநாயகருக்கு, கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெறும்.
அப்போது, பால், தயிர், திரவியப் பொடி, பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் முதலான 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெறும். இந்த நாளில், கணபதிபெருமானுக்கு, வெள்ளெருக்க ம்பூ மாலையும் அருகம்புல் மாலையும் சார்த்தி வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும். காரியத் தடைகள் யாவும் விலகிவிடும் .
மேலும் சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு கொழுக்கட்டை அல்லது சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து வழிபட்டால், வீட்டில் மங்கல காரியங்கள் விரைவில் நடந்தேறும். கடன் தொல்லையை நிவர்த்தி செய்து அருள்வார் .
சங்கடஹர சதுர்த்தி அன்று மறக்காமல், மாலையில் கோயிலுக்குச் சென்று விநாயக வழிபாட்டைச் செய்யுங்கள். பிள்ளையாரப்பனை வணங்குங்கள். வணங்கிப் பிரார்த்தனை செய்யுங்கள்.
“அன்பினுக்கு இரங்கும் அருட்கடல்!..
ஐங்கரனின் திருக்கழல் சிந்தை செய்வோம்!.”
The post சங்கடஹர சதுர்த்தி ஸ்பெஷல் ! appeared first on SwasthikTv.