எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளான ஜோதியே எல்லாவற்றுக்கும் மூலமாகும்.தீப ஜோதியாக அருள்பாலிக்கும் பரஞ்சோதியை தரிசிப்பதே பரணி தீப தரிசனமாகும். ஏகன் அனேகனாக அருள்புரிகிறார் எனும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவுநாளன்று, கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் நடைபெறும் விழா என்பதால் பரணி தீபம் என அழைக்கப்படுகிறது. அதிகாலை 4 மணி அளவில் அண்ணாமலையார் கோயில் கருவறையில் கற்பூர தீபமேற்றி, உலக இயக்கத்தை நடப்பிப்பதும், உயிர்களை காப்பதும் இந்த ஜோதிதான் என சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்குவார்கள். பின்னர், அந்த சுடரை கொண்டு மண் மடக்கில் உள்ள நெய்தீபம் ஏற்றப்படும்.பின்னர், ஓரு தீபம் ஏற்றப்பட்ட மடக்கில் இருந்து, ஏகனாக திகழும் இறைவன் அனேகனாக திகழ்வதை உணர்த்துவதற்காக நந்தி தேவர் முன்பு ஐந்து மடக்குகளில் நெய் தீபம் ஏற்றப்படும். இது பஞ்ச மூர்த்திகளை குறிக்கும்.
முதலில் ஏற்றப்பட்ட நெய் தீபத்தை கொண்டு , அம்மன் சன்னதியில் ஐந்து மடக்குகளில் நெய் விளக்கு ஏற்றப்படும். அது பஞ்ச சக்திகளை உணர்த்தும். அதை தொடர்ந்து, சிவ சக்தியில் இருந்துதான் எல்லா இயக்கமும் நடைபெறுகிறது என்பதை உணர்த்தும் வகையில், எல்லா சன்னதிகளிலும் தீபங்கள் ஏற்றப்படும்.
திருக்கோயிலில் சிவாச்சாரியார்கள் 108 நாட்கள் விரதமிருந்து பரணி தீபத்தை ஏற்றுவது காலம் காலமாக பின்பற்றப்படுகிறது. மடக்கில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தை, கருவறையையொட்டி அமைந்துள்ள வைகுந்த வாயிலில் நின்றபடி சுயம்பு வடிவான அண்ணாமலையை நோக்கி சிவாச்சாரியார்கள் காண்பிக்கும் போது அண்ணாமலையாருக்கு அரோகரா எனும் சப்தம் விண்ணதிரும்.
கார்த்திகை மாதப் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் லட்சோப லட்சம் பக்தர்கள் திரண்டு பரணி தீபத்தை தரிசனம் செய்வது தனிச்சிறப்பு. பரணி தீப தரிசனத்தன்று அண்ணாமலையார் திருக்கோயிலில் இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்.
செய்தி : ப.பரசுராமன்
படங்கள்: ப.வசந்த்
The post தீப ஜோதியாக அருள்பாலிக்கும் பரணி தீப தரிசனத்தின் சிறப்பு appeared first on Swasthiktv.