திருச்சி மாவட்டம் திருவெறும்பூ என்னும் இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் 125 படிகளின் மீது ஏறி குன்றின் மேல் உள்ளது. இங்கு சிவபெருமான் நறுங்குழல் நாயகியுடன் எறும்பிஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உழைக்கும் குணம் மேலோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 70-வது தேவாரத்தலம் ஆகும். இது தேவாரப் பதிகம் பாடப் பெற்ற திருத்தலமாகும். மேலும் காவிரி தென்கரைத் தலங்களில் 7-வது தலமாகவும் திகழ்கிறது.
தேவர்கள் எறும்பாக உறுவாகி:
தாரகாசுரன் என்ற அரக்கன், தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான். இதனால் மிகவும் துன்பப்பட்டு வந்த தேவர்கள் அனைவரும் நாரத முனிவரிடம் சென்று, அசுரனின் கொடுமையில் இருந்து மீள்வதற்கு வழி சொல்லும்படி வேண்டி நின்றனர். அதற்கு நாரதர், திருச்சி அருகில் உள்ள இந்த ஆலயத்திற்கு வந்து சிவபெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்தால் உங்களின் துன்பங்கள் விலகும் என்று கூறினார். அதன்படி தேவர்கள் அனைவரும், தாரகாசுரன் கண்ணில் படாமல் இருக்க எறும்பாக உருமாறி, இத்தல இறைவனை வழிபட்டனர். திருமேனியை ஒரு எறும்புப் புற்றாக மாற்றினார்லிங்கத் திருமேனி மிகவும் வழுவழுப்பாக இருந்த காரணத்தால், எறும்புருவில் இருந்த தேவர்களால் அதில் ஏறிச் சென்று இறைவனை வழிபட முடியவில்லை. தேவர்களின் சிரமத்தைக் கண்டு மனம் இரங்கிய சிவபெருமான், தனது லிங்கத் திருமேனியை ஒரு எறும்புப் புற்றாக மாற்றினார். இதனால் எறும்புருவில் இருந்த தேவர்கள் அனைவரும் எளிதில் மேலேறிச்சென்று பூஜை செய்வதற்கு வசதியாக லிங்கத்திருமேனி சொரசொரப்பாக மாறியது. இதன் காரணமாக இத்தல இறைவன் எறும்பீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். எறும்புகளை சுறுசுறுப்புடன் வழிபடச் செய்து அவர்களுக்கு அருள் வழங்கினார் ஈசன் என்பதால், இந்தத் தலம் சுறுசுறுப்புக்குப் பேர் பெற்றது. சுவாமிக்கு பூஜை செய்து வேண்டிக் கொண்டால், சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உழைக்கும் குணம் மேலோங்கும். மேலும் துன்பங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
நெய் வேத்திய பொருட்களை எடுத்து செல்லும் எறும்புகள்:
கருவறை முற்றிலும் கற்களால் கட்டப்பட்டது. கோவிலின் நுழைவு வாசல் வடக்கு திசையில் இருக்கிறது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கருவறை நுழைவு வாசலின் இருபுறமும் விநாயகர், முருகப்பெருமான் ஆகியோரது உருவச் சிலைகள் அமைந்துள்ளன. சிவபெருமான் சன்னிதி கோஷ்ட தெய்வமாக சங்கரநாராயணர் காட்சியளிக்கிறார். ருத்ராட்சப் பந்தலின் கீழ் நடராஜர், காலில் சலங்கைக் கொலுசு அணிந்திருக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். இங்கே சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். லிங்கத்தின் இடப்புறம் சற்றே சாய்ந்திருக்க, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது. இது இரண்டு லிங்கங்கள் இணைந்திருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும். வலப்புறப் பகுதி சிவபெருமானின் அம்சம் என்றும், இடப்புறப் பகுதி அம்பாளின் அம்சம் என்றும் கூறப்படுகிறது. இந்த லிங்கத்துக்கு ‘சிவசக்தி லிங்கம்’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது. தினமும் சுவாமிக்கு பூஜை நடக்கும்போது, கருவறையில் எறும்புகள் வரிசையாகச் சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துச் செல்வது அதிசய சம்பவமாக நடந்து வருகிறது. கருவறையில் சிவலிங்கம் புற்று வடிவில் மேடும், பள்ளமுமாக புற்றுமண் லிங்கம் போல் இருப்பதால், லிங்கத்துக்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய்க் காப்பு மட்டுமே செய்யப்படுகிறது. எறும்புகள் ஊர, சிவபெருமானுக்குச் செய்யப்படும் பூஜையைக் காண்பது சிறப்பு இந்த நேரத்தில் சுவாமியை வழிபடுவது மிகவும் உகந்ததாகும்.
நறுமனம் வீசும் நாயகி:
இத்தலத்தில் வீற்றிருந்து அம்பாள், ‘நறுங்குழல்நாயகி’ என்ற திருநாமத்துடன் தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். நறுமணம் வீசும் கூந்தலுடன் இவர் திகழ்வதால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இத்தலத்தில் அம்பாளுக்கு ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படுகிறது. அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகிறார். அம்பாளுக்கு முன்புறத்தில், ஆதி காலத்தில் வழிபடப்பட்ட அம்பாள் விக்ரகம் ஒன்றும் உள்ளது.
பிரகாரத்தில்:
ஆலயப் பிரகாரத்தில் சொர்ண காலபைரவர் சன்னிதி அமைந்துள்ளது. உக்கிரமாக இருக்கும் இவரின் சன்னிதிக்கு நேராக கஜலட்சுமி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் வேண்டிக் கொண்டால் பயம் நீங்கும், ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆலயத்தில் 4 தீர்த்தங்கள் உள்ளது. அவை பிரம்ம தீர்த்தம், பத்ம தீர்த்தம், மது தீர்த்தம், குமார தீர்த்தம் என்பவையாகும். ஈசனின் கருவறைக்கு பின்புறம் உள்ள காசி விஸ்வநாதர் சன்னிதியும், சண்முக சுப்பிரமணியர், வள்ளி- தெய்வானையுடன் வீற்றிருக்கும் தனிச் சன்னிதியில் உள்ளன. முருகப்பெருமானின் பீடத்துக்குக் கீழே அறுங்கோணச் சக்கர வடிவம் உள்ளது. இந்தச் சக்கரத்தையும் சுவாமியையும் தரிசித்து வழிபட்டுச் செல்வோரின் தோஷங்கள், மனக்குறைகள் யாவும் நீங்குவதாக நம்பிக்கை. தல விநாயகரின் திருப்பெயர் செல்வ விநாயகர் என்பதாகும். இக்கோவிலின் தலவிருச்சமாக வில்வமும், தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும் விளங்குகிறது.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #sivan
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post சிவபெருமானுக்கு பூஜை பொருட்களை கொண்டு செல்லும் எறும்புகள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.