நாமக்கல் மாவட்டத்தில் காடுகள் சூழ்ந்த அறிவிகள் மத்தியின் 1500அடி உயரத்தில் கொல்லிமலையில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.இங்கு சிவபெருமான் அம்பாள் அறம் வளர்த்த நாயகிவுடன் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கி குளத்தில் உள்ள மீன்களுக்கு பொறி போட்டால் உடல் நலமும் மனநலமும் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
கொல்லிமலையில் அறைப்பள்ளி:
கொல்லிமலையைப் பற்றி 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க காலத்து புலவர்களால் புகழப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு மிகுந்த கொல்லிமலையில் அறைப்பள்ளி என்ற பகுதியில் அறப்பளீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அறப்பள்ளி ஈஸ்வரர் என்பதன் மருவுப் பெயரே ‘அறப்பளீஸ்வரர்’ ஆகும். இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் கிடையாது. அதற்கு பதிலாக சிவசக்தி வடிவம் கொண்ட சுதை சிற்பத்துடன் நுழைவு வாசல் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாசலைக் கடந்ததும், கொடிமரத்தையும், நந்தியம் பெருமானையும் தரிசிக்கலாம். அதைத் தொடர்ந்து கருவறையில் கிழக்கு நோக்கிய நிலையில் சுயம்பு வடிவான அறப்பளீஸ்வரர் காட்சி தருகிறார்.
மண்ணுக்குள் சிவலிங்கம்:
இந்தப் பகுதியில் ஒருவர், விவசாயப் பணிக்காக மண்ணை உழுது கொண்டிருந்தார். அப்போது உழவுக் கலப்பை மண்ணில் புதைந்திருந்த சிவலிங்கத்தின் மீது பட்டது. இதனால் நிலத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த விவசாயி, ரத்தம் வந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது மண்ணுக்குள் சிவலிங்கம் ஒன்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லிங்கத்தை அந்தப் பகுதியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இப்போதும் சிவலிங்கத்தின் மீது உழவுக் கலப்பை பட்டு காயம் ஏற்பட்ட தடம் காணப்படுவதாக கூறுகிறார்கள். இத்தல அம்பாள் அறம் வளர்த்த அன்னை என்றும், தாயம்மை என்றும் அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிக்கும் அன்னையை வணங்கினால், எண்ணிய எண்ணம் அனைத்தும் நிறைவேறும்.
‘கொல்லிமலை குமரா’
ஆலயத்தின் சுற்றுப் பிரகாரத்தில் பொலிவுடன் விளங்கும் தனி சன்னிதியில், அம்பாளை பார்த்தவாறு வடதிசை நோக்கி முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். வள்ளி– தெய்வானை சமேதராக மயில் வாகனத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப்பெருமான், அருணகிரிநாதரால் புகழப்பட்டவர். ‘கொல்லிமலை மேல்நின்ற பெருமாளே’ என்று முருகனை அருணகிரிநாதர் பாடுகிறார். கந்தகுரு கவச பாடலில் ‘கொல்லிமலை குமரா’ என்று அழைக்கப்படுபவரும் இந்த முருகப்பெருமானே என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தென்மேற்கு மூலையில் விநாயகரும், அவருக்கு அருகில் காசி விசுவநாதரும், விசாலாட்சி காட்சி தருகின்றனர். லட்சுமி, சரஸ்வதி தனித்தனி சன்னிதிகள் உள்ளன. ஆலயத்தின் தேவ கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடபுறம் துர்க்கையும் எதிரில் சண்டிகேஸ்வரர் காட்சி தருகிறார். ஆலயத்தில் நவக்கிரக சன்னிதியும் உள்ளது.
அறப்பளீஸ்வரரே இங்கு மீன் வடிவமாக கோரக்கர் முதலான சித்தர்கள் பலரும் தவம் செய்த பூமியாக விளங்குவது கொல்லிமலை. இங்கு இன்னும் சித்தர்கள் அருவமாக வந்து சிவபெருமானை வழிபட்டுச் செல்வதாக நம்பிக்கை நிலவுகிறது. குளங்களும், நதிகளும் தீர்த்தமாக உள்ள சிவாலயங்களை நாம் தரிசித்திருக்கிறோம். ஆனால் இந்தத் தலத்தில் 150 அடி உயரத்தில் இருந்து அருவியாய் குதித்தோடி வந்து ஐந்து நதிகளின் கூடலாக சேரும் தீர்த்தம் வேறெங்கும் இல்லாத சிறப்பு. இந்த மூலிகை குளத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டால் நமது உடல் நலமும், மன நலமும் சிறப்பாக இருக்கும். இந்த ஐந்து நதிகளின் கூடலில் வண்ண வண்ண மீன்கள் துள்ளிச் செல்லும் அற்புதக் காட்சியைக் காணலாம். அறப்பளீஸ்வரரே இங்கு மீன் வடிவமாக இருப்பதாக நம்பிக்கை உள்ளது. எனவே இங்குள்ள மீன்களுக்கு பொரி போன்ற உணவுகளை வழங்கி விட்டுத்தான், பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்கிறார்கள்.
நாமக்கல்லில் இருந்து, மலை மீது 70 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய 42 கிலோமீட்டர் தூரத்தை கடந்து கொல்லிமலையை அடையவேண்டும்.
தொடர்புக்கு :
எஸ்.குமார் – 9442805327
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #shiva #duraj #omkara #kollimalai #arappaleeshvarar
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post எண்ணிய எண்ணம் நிறைவேறும் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.