சிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள். மாதம் தோறும் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி இரவு தான் மாத சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.
ஐவகை சிவராத்திரிகள்:
சிவராத்திரி எனப்படுவது
நித்திய சிவராத்திரி,
பட்ச சிவராத்திரி,
மாத சிவராத்திரி,
யோக சிவராத்திரி,
மஹா சிவராத்திரி
என ஐந்து வகைப்படும்.
சிவராத்திரி உருவானக் கதை:
ஒரு நாள் பிரம்மாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது. என்னவென்றால் தானே இவ்வுலகைப் படைப்பதாகவும்,தன்னைக் காட்டிலும் இவ்வுலகில் உயர்ந்தவன் இல்லை என்றும் தோன்றியது.உடனே,தனது தந்தையான விஷ்ணுவிடம் சென்று உன்னை விட நானே உயர்ந்தவன் என்றார். அதைக் கேட்ட விஷ்ணுவிற்கு கோபம் வந்தது. நீ படைப்பவனாயினும் ,இவ்வுலகை காப்பவன் நான் தான். எனவே நான் தான் உன்னைவிட பெரியவன் என்றார். இவர்களின் வாக்குவாதம் முற்றி பெரும் சண்டையாக மாறியது. அப்பொழுது அவர்களின் அருகே ஒரு பெரிய பேரொளி தோன்றி ” இந்த ஒளியின் அடியையும், முடியையும் யார் காண்கிறீர்களோ அவரே உயர்ந்தவர் ” என்ற குரல் கேட்டது. உடனே பிரம்மா அன்னப் பறவையாக மாறி வானில் பறந்தார். விஷ்ணுவோ வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்தார். இருந்தபோதும் ஈசனின் அடியையும்,முடியையும் அவர்களால் காண முடியவில்லை.ஆனால் பிரம்ம தேவனோ தான் அந்த ஒளியின் திருமுடியைக் கண்டதாகவும், தாழம்பூவே அதற்கு சாட்சி என்றும் கூறினார்.
பேரொளி வெடித்ததில் ஈசன் மிகுந்த கோபத்துடன் அதிலிருந்து வெளிப்பட்டார். அவர் பிரம்மனை நோக்கி பிரம்மனே! பொய் கூறிய உனக்கு இனி இந்த உலகில் கோவில்களும் பூஜைகளும், வழிபாடுகளும், இருக்காது என்று சாபம் இட்டார். அதுமட்டும் அல்லாது பொய் சாட்சி கூறிய தாழம்பூவிடம் இனி உன்னை என் பக்தர்கள் யாரும் பூஜைக்கு பயன்படுத்த மாட்டார்கள் என்றார்.சாபம் இட்டும் சினம் குறையாத ஈசன் அக்னிப் பிழம்பாகத் தகிக்க அதைக் கண்டு மிரண்டு போன பிரம்மனும், விஷ்ணுவும், தங்களை மன்னித்து அருளுமாறு வேண்டினர். அப்பொழுது ஈசனின் சினம் குறைய முனிவர்கள் வேதம் ஓதினார்கள். தேவர்கள் சிவனைப் பாடித் துதித்தனர். ஈசன் சினம் குறைந்து மனம் குளிர்ந்தார். அப்படிக் குளிர்ந்த ஈசன் அண்ணாமலையாய் அருணாசல லிங்கமாய் அமர்ந்தார். ஈசன் இப்படி ஜோதிப் பிழம்பாய்த் தோன்றி பிரம்மா மற்றும் விஷ்ணுவின் ஆணவம் அகற்றி இவ்வுலகை மாபெரும் அழிவிலிருந்து காத்தருளிய அந்த இரவு தான் மஹா சிவராத்திரி எனக் கொண்டாடப்படுகிறது.
சிவராத்திரியின் விரதம்:
சிவராத்திரி நாளன்று சிவன் கோயிலுக்கு நாம் வில்வ இலைகள் எடுத்துச் செல்ல வேண்டும். அன்று இரவு நடைபெறும் கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருந்து சிவாய நம என உச்சரிக்க வேண்டும். சிவராத்திரி தினத்தன்று எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருப்பது நல்லதாகும். முதல் கட்ட பூஜைக்கு பால், இரண்டாம் கட்ட பூஜைக்கு தயிர், மூன்றாம் கட்ட பூஜைக்கு வெண்ணெய், நான்காம் கட்ட பூஜைக்கு தேன் ஆகியவற்றை கோயிலில் அபிஷேகத்திற்க்காக காணிக்கை செலுத்தலாம். சிவராத்திரியன்று கண் விழித்து சிவபுராணம் படிக்கலாம். சிவனின் பாடல்களைப் பாடலாம் அல்லது ஓம் நமசிவாய எனும் சிவநாமத்தை ஜபித்துக் கொண்டிருக்கலாம். மறுநாள் காலையில் சிவாலயத்தில் அன்னதானம் செய்து அதற்குப் பின் விரதத்தை முடிப்பது விசேஷமாகும்.
The post சிவராத்திரி உருவானது எப்படி? appeared first on Swasthiktv.