கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் நான்கு மைல் தொலைவில் அமைந்துள்ள ஏனநல்லூர் என்ற ஊரில் பிறந்தவர்தான் ஏனாதிநாத நாயனார். அந்த நாட்களில், சேனாதிபதிக்கு ஏனாதி என்ற பேர் இருந்தது. அரசர்கள் சேனாதிபதிக்கு ஏனாதிப்பட்டம் என்னும் ஓர் ஆபரணம் நெற்றியில் அணியத் தருவார்கள். அரசர்களுக்கும், அவருடைய படைவீரர்களுக்கும் வாள் பயிற்சி கற்றுதரும் வீரராக வாழ்ந்தவர்தான் ஏனாதிநாத நாயனார். மிகச்சிறப்பான பயிற்சி யின் மூலமாக முதன்மை பெற்று, நல்ல வரு மானமும் பெற்று வாழ்ந்தார், உயர்ந்த வீரம் உடைய இவர், திருநீற்றின் திருத்தொண்டில் அளவுகடந்த அன்புடன் வாழ்ந்து வந்தார். திருநீறு அணிந்த அடியவர் யாவராக இருந்தாலும், அவரை சிவமாக பாவித்து வணங்கும் பண்புடன் வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாள் பயிற்சியின் மூலமாக கிடைத்த வருமானம் முழுவதையும், திருநீறு அணிந்த அடியவர்க்கே பயன்படுத்தினார்.
இவரைப்போலவே, வாள் பயிற்சி அளித்து வரும் அதிசூரன் என்பவருக்கு, ஏனாதிநாத நாயனாரால் வருமானம் இழப்பு ஏற்பட்டது. தன்னைவிட அதிக வருமானம் ஈட்டும் ஏனாதி நாதரை வென்றுவிட்டால், தனக்கு வருமானம் அதிகம் கிடைக்கும் என்ற பொறாமை குணம் குடியேறியது. இதனால் தன்னுடம் துணைக்கு ஆட்களைக் கூட்டிக்கொண்டுச் சென்று ஏனாதிநாயனாரை போருக்கு அழைத்தார். வீரம் மிகுந்த ஏனாதிநாயனார், யாரையும் துணைக்கு அழைக்காமல், தனியே போருக்குச் சென்றார். இதை அறிந்த அவருடைய வாள் பயிற்சி மாணவர்களும், சுற்றத்தினரும் அவருக்கு துணையாகச் சென்று இவர்களிடம் போரிட்டு வெற்றிபெற முடியாமல், அதிசூரன் தோற்று ஓடினான்.
வீரத்தால் ஏனாதிநாத நாயனாரை வெற்றிப் பெற முடியாத காரணத்தால், சூழ்ச்சியால் வெற்றிபெற நினைத்தான் அதிசூரன். திருநீறு அணிந்து வருபவருக்கு, ஏனாதிநாத நாயனார் பணிவிடை செய்வார் என்று அறிந்த அதிசூரன், நெற்றி நிறைய திருநீறு அணிந்து கொண்டு, அதை தன்னுடைய கேடயத்தால் மறைத்துக்கொண்டு, ஏனாதிநாத நாயனாரைத் தனியே போர் செய்ய அழைத்தார். துணைக்கு பலரை அழைத்துக்கொண்டு படையுடன் போர் செய்தால், நம்மால் அவர்களுக்கு காயம் ஏற்படுகின்றது. அதை தவிர்க்கவே தனியாக போரிட அழைக்கின்றேன் என்றார்.
அனைவரிடம் தயவு, தாட்சிணியம் பார்த்து, “கண்ணோட்டத்துடன்” பழகும் ஏனாதிநாயனாரும், மற்றவர்களுக்கு எதுவும் சொல்லாமல், தனியாக அதிசூரன் அழைத்த இடத்திற்கு போருக்குச் சென்றார். அது அதிகாலை நேரம், கபடமாக திருநீறு அணிந்து, அதையும் மறைத்துக் கொண்டு வந்த அதிசூரன் வாளை வீச, போர் ஆரம்பித்தது. அதிசூரனின் தாக்குதலை தடுக்க முயன்ற போது, அதுவரை கேடயத்தால் மறைத்திருந்த திருநீற்றை ஏனாதிநாத நாயனார் பார்த்தார். இதுவரை திருநீற்றை அணியாத அதிசூரன், இன்று திருநீற்றை அணிந்துள்ளார். சிவபெரு மானுடைய திருத்தொண்டராக ஆயினார் போலும், இனி இவருடைய குறிப்பு அறிந்து நடப்பேன் என்று எண்ணினார், திருநீறு அணிந்த அதிசூர னின் விருப்பம் என்பதால், அந்த திருநீற்றுக்கு மதிப்பு அளிக்கும் விதமாக, ஏனாதிநாதர் அதி சூரனுடன் சண்டையிடாமல், வெறுமனே வாளும், கேடயமும் ஏந்தி நின்றார். இத்தருணத்தைப் பயன்படுத்தி அதிசூரன் ஏனாதிநாதரை கொன்றார், ஏனாதிநாதருடைய திருநீற்றின் அன்பை நன்கு அறிந்த சிவபெருமான். அவர் முன் தோன்றி தன்னுடன் சேர்த்துக் கொண்டார் என்று பதிவு செய்துள்ளார் சேக்கிழார்.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #lordshiva
#rangaanatha perumal
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 812451666
The post ஏனாதிநாதருடைய திருநீற்றின் அன்பை அறிந்த சிவபெருமான் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.