”குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்*
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்*
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்*
நலம்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்*”
பந்திருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள் வந்திருக்கும் மார்வன் நாராயணன் தன் தேவியான திருமகள் நாச்சியாரோடு அருள்பாலிக்கும் தலம் தான் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அருள்மிகு அஷ்டலக்ஷ்மி திருக்கோயில்.
ஸ்தல வரலாறு:
காஞ்சிப் பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் கனவிலே தோன்றி தமக்கு இந்த இடத்தில் கோவில் ஏற்படுத்துமாறு மஹாலக்ஷ்மி பணிக்க அதை சிரமேற்கொண்டு இக்கோவில் ஸ்தாபிக்கப்பட்டது. முக்கூர் ஸ்ரீநிவாஸ வரதாச்சாரியார் ஸ்வாமிகளின் பெருமுயற்சியால் இக்கோவில் 1976-ல் கட்டப்பட்டது. கோவை லக்ஷ்மி மில்ஸ் நிறுவனம் இத்திருக்கோவில் கட்ட பெருமளவில் திருப்பணி கைங்கர்யம் செய்திருக்கின்றனர்.
ஆலய அமைப்பு:
உத்திரமேரூர், திருக்கோஷ்டியூர், மதுரை கூடலழகர் திருத்தலங்கள் போல இங்கும் விமானம் அஷ்டாங்க விமானமாக ஓம்கார வடிவத்தில் 4 தளங்களுடன் காட்சியளிக்கிறது. விமானத்தில் தேவர்கள் ஒருபுறமும் அசுரர்கள் ஒருபுறமும் வாசுகியை வடம்பிடித்து அம்ருதமதனம் செய்யும் காட்சி, மஹாலக்ஷ்மி உதயம், , இந்த்ராதி தேவர்கள் சப்தரிஷிகள் ப்ரம்மா சிவன் சாட்சியாக தாயார் திருக்கல்யாணம் மற்றும் ராமானுஜர் தமது சிஷ்யர்களான கூரத்தாழ்வான், முதலியாண்டானுடன் காட்சி தருகிறார். மேலும் ஆதிசங்கர பகவத்பாதாள் கனகதாரா ஸ்தோத்திரம் அருளிச்செய்து பொன்மழை பொழியவைத்த வரலாறும் காணப்படுகிறது. ஸ்வாமி தேசிகன் ஒரு ப்ரம்மசாரிக்காக மஹாலக்ஷ்மியைப் ப்ரார்த்தித்து ஸ்ரீஸ்துதி அருளிச்செய்த காட்சியும் மேலும் மத்வாச்சாரியார் தனது சிஷ்யர்களுடன் உள்ள திருக்கோலமும், ஆதிசங்கரர் தனது சிஷ்யர்களுடன் உள்ளதும் இக்கோபுரத்தில் காட்சியளிக்கிறது. மேலும் ஸ்ரீநிவாஸப்பெருமான், பூவராகப்பெருமான் திருக்கோலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இக்கோவில் 3 வித சம்ப்ரதாயங்களையும் அடக்கியது. இத்திருக்கோவிலின் அமைப்பு அத்வைத சம்ப்ரதாயத்தையும், திருவாராதனம் ராமானுஜ சம்ப்ரதாயத்தையும் பெருமாள் தளிகை மாத்வா சம்ப்ரதாயத்தின் அடிப்படையிலும் நடந்து வருகிறது.
திருப்பாற்கடலே இடம் பெயர்ந்து வந்தாற்போல எதிரே வங்கக்கடல். வங்கக்கடல் கடைந்த மாயவனை அனுதினமும் தன் ஓயாத அலைக்கரங்களால் தொழுதுகொண்டே இருக்கிறது, இங்கு தீர்த்தம் – பாற்கடல். அதன் ஒலியே ப்ரணவாகாரம். நித்தம் ஓயாது ஒலிக்கும் ஓம் என்ற மந்திரத்தை அது உச்சரிப்பதை நம் செவியாற கேட்டுக்கொண்டே ஆலயத்தினுள் புகுவோம்.
நுழைவாயிலிலேயே சங்கநிதியும் மறுபுறம் பத்மநிதியும் காட்சிதருகிறது. அதைக்கடந்த பின்னர் கொடிமரம். இத்திருக்கோவில் நான்கு தளங்களை உடையது. முதல் தளத்தில் கர்ப்பக்ரஹம். கர்ப்பக்ரஹத்திற்கு நேரே பெரியதிருவடி கூப்பிய கரங்களுடன் காட்சியளிக்கிறார்.
முன்னம் இத்திருக்கோவிலில் தாயார் மட்டுமே எழுந்தருளும்படி செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் பின்னர் பெருமாளும் எழுந்தருளவேண்டும் என்று திருவுள்ளம் செய்யப்பட்டதால் 15 நாட்களில் பெருமான் திருமேனி நிர்மாணிக்கப்பட்டதாயும் பெரியோர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே கருடன் பெருமாளுக்கு நேராக இல்லாமல், தாயாருக்கு நேராக காட்சியளிக்கிறார். த்வாரபாலகர்களின் இடத்தில் த்வாரபாலகிகள்.
எப்போதும் பொன்மலரிட்டு இமையோர் தொழுது* தங்கள் கைப்போது கொண்டு இறைஞ்சிக் கழல்மேல் வணங்க நின்ற லக்ஷ்மி நாராயணப்பெருமாள் சதுர்புஜங்களில் சங்கு சக்கரம் கதை அபயமுத்திரையுடன் வலமார்பினில் மஹாலக்ஷ்மி இலங்க காட்சியளிக்கிறார். பெருமாளுக்கு வலப்புறம் தாயார் திருமகள் நாச்சியார். நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். தாயார் அபய ஹஸ்தத்துடன் காட்சியளிக்கிறார். நான்கு திருக்கரங்கள். மேலிரண்டும் தாமரை ஏந்தி கீழிரண்டும் அபய வரத முத்திரையுடன் சேவை சாதிக்கிறார். நாச்சியார் கோவில் போலவே இங்கும் தாயாருக்கே முதலிடம். தாயார் அழகிய ஒன்பது கஜப்புடவையில் சர்வாபரணபூஷிதையாக காட்சியளிக்கிறாள்.
உற்சவர்: அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பன். ஸ்ரீநிவாஸப் பெருமான். தாயார் பத்மாவதி தாயார். இடப்புறத்தில் திருவாடிப்பூரத்து செகத்துதித்து திருப்பாவை முப்பதும் செப்பிசூடிக் கொடுத்த சுடர்கொடி.
லக்ஷ்மி என்றால் செல்வத்துக்கு அதிபதி. செல்வம் என்றால் வெறும் பணம் மட்டுமல்ல. செல்வம் என்பது எட்டுவிதமானது. நிலையான தனம், நன்மக்கள்பேறு, தீதில்லா ஞானம், குறைவற்ற ஆரோக்கியம், நீடுநிற்கும் புகழ், நற்குடிப்பிறப்பு, பெருமானிடம் ஈடுபாடு. தைத்ரியோபநிஷத்தில் சிக்ஷாவலியில் உள்ள மந்திரமானது,
“ஆவஹந்தீ விதந்வாநா,குர்வாணா சீரமாத்மந
வாசாம்ஸி மம கா3வச்ச, அன்னபாணே ச சர்வதா4
ததோ மே ச்ரியம் ஆவாஹா, லோமஸாம் பசுபி: சஹ ஸ்வாஹா
அத்தகைய எட்டு செல்வங்களையும் நமக்கு அருளும் அஷ்டலக்ஷ்மியையும் வரும் தொடர்களில் சேவிப்போம்…….
The post குலம்தரும்… செல்வம் தந்திடும்.. மஹாலக்ஷ்மி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.