கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவு நாளில், மகா தீபத்திருவிழா நடைபெறுகிறது. அப்போது 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். கருணையே வடிவான அண்ணாமலையை, ஜோதி பிழம்பாக ஏந்தி நிற்கும் பாக்கியம் பெற்றது தீப கொப்பரை.
மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் தீப கொப்பரை, வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்டது. கடந்த 1668ம் ஆண்டு, நாலரை பாகம் எடையுள்ள வெண்கல தீப கொப்பரையை, வேங்கடபதி எனும் சிவனடியார் திருக்கோயிலுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட தீப கொப்பரை சேதமானது. எனவே கடந்த 1991ம் ஆண்டு புதியதாக 92 கிலோ செப்பு, 110 கிலோ இரும்பு சட்டங்களால் உருவான புதிய தீப கொப்பரை உருவானது. கொப்பரையின் அடிபாக விட்டம் 27 அங்குலம். மேல் விட்டம் 37 அங்குலம், மொத்த உயரம் 57 அங்குலம்.
மகா தீப விழாவுக்கு முன்பாக, தீப கொப்பரையை மலை உச்சிக்கு தலைச்சுமையாக கொண்டு செல்வது வழக்கம். 11 நாட்கள் மலை உச்சியில் தீபம் பிரகாசிக்கும். அதனை தொடர்ந்து, மலையில் இருந்து தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும்.
மகா தீபம் ஏற்றுவதற்காக, ஆயிரம் மீட்டர் பருத்தி துணியை (காட்டன்) திரியாக பயன்படுத்துகின்றனர். பக்தர்கள் வழங்கும் நெய் காணிக்கையை கொண்டு தீபம் ஏற்றப்படும். அதற்காக 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. திரியும் நெய்யும் தீபம் ஏற்றும் முன்பாக அண்ணாமலையார் சன்னதியில் வைத்து பர்வதராஜகுல மரபினர்கள் சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்கின்றனர்.
தொடர்புக்கு : குமார்- 9442805327
செய்தி : ப.பரசுராமன்
படங்கள் : ப.வசந்த்
The post ஜொலிக்கும் மகாதீபத்தில் தீப கொப்பரையின் சிறப்பு appeared first on Swasthiktv.